articles

img

அணைப்பு பூங்கொடி பாலமுருகன்

“ ஆ..  வலிக்குதே.. ரொம்ப வலிக்குதடா..”

வலியில் கத்தியபடி தோள் பட்டையை பிடித்துக் முத்து கீழே விழுக..ஆங்காங்கே இருந்த வகுப்பு நண்பர்கள் எல்லாம் ஓடி வந்து

“என்ன டா ஆச்சு ?..என்னடா ஆச்சு..” என்று பதறியபடி அவன் அருகில் அமர்ந்து,

 “டேய் யாராச்சும் கொஞ்சம் தண்ணி கொண்டு வாங்க” என்று குமார் கத்த,

எங்கிருந்தோ தண்ணீர் பாட்டில் கொண்டு ஒரு மாணவன் ஓடி வருகிறான்.

சிறிது தண்ணீர் குடித்து கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு எழுந்து

உட்காரும் முத்துவின் தோள்பட்டையில் இருந்து

இரத்தம் கசிவதை அப்போது தான் அனைவரும் கவனிக்கிறார்கள்.  மெதுவாக அவனை எழுப்பி சைக்கிளில் உட்கார வைத்து, மருத்துவமனை கூட்டிச் சொல்கிறார்கள்.  இதை எல்லாம் பார்த்து அரண்டு போன முகத்துடன் மணி நிற்கிறான். “ மணி ஏண்டா அவனை அப்படி அடிச்ச? “ என்ற செந்திலைப் பார்த்து திகைக்கிறான்.  

   “இல்ல...நான்.. அடிக்கல..” என்று தயங்கியபடி சொல்கிறான்.  “பொய் சொல்லாத டா மணி..நான் பார்த்துகிட்டே தான் இருந்தேன்” அவன் சொல்லச் சொல்ல தலை குனிந்து நிற்கிறான்.  “அவன் பாவம் டா.அவன் சூழ்நிலை உனக்கு  தெரியாது..அவன் எப்படி சூழ்நிலையில் இருந்து  படிக்க வறான் தெரியுமா?” என்று சொல்லியபடி அவன் வசிக்கும், பக்கத்து ஊருக்கு அழைத்துச் செல்கிறான் செந்தில்.  

   முத்து, மணி, செந்தில், குமார், பிரகாஷ் இவர்கள் எல்லாம் ஒரே பள்ளியில்  எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். முத்துவைத் தவிர மற்ற அனைவரும் சிறு வயதில் இருந்து ஒன்றாகப் படிக்கிறார்கள். முத்து மட்டும் இந்த வருட ஆரம்பித்தில் தான் இவர்கள் பள்ளியில் சேர்ந்தான்.

   மணி எல்லாரையும் விட கொஞ்சம் வசதியானவன். நன்கு படிக்கும் மாணவனும் கூட. படிப்பு, பேச்சு, விளையாட்டு என்று எல்லாவற்றிலும் சிறந்து விளங்கும் மாணவன்..தன்னை விட புத்திசாலி தன் வகுப்பில் இல்லை என்ற கர்வம் எப்போதும் அவனுக்கு சிறிது இருந்தது.

    அந்த சமயத்தில் முத்து பள்ளியில் சேர்ந்தான். அவன் பள்ளி வந்த முதல் நாள் அறிவியல் வகுப்பில் ஒளியியல் பற்றி பாடம் ஆசிரியர் எடுக்கிறார். அதில் பார்வை குறைபாடுகளுக்கு பயன்படும் லென்ஸ் பற்றி சொல்ல ஆரம்பித்ததும், முத்து எழுந்து “சார்..எட்டப் பார்வைக்கு குழி ஆடி. கிட்டப் பார்வைக்கு குவி ஆடி.இதைத் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள ‘எட்டக் குழி வெட்டி, கிட்டக் குவி‘ என்று சொல்லுவாங்க சார்”

    என்ற சொன்னதும்,  “சபாஷ்...ரொம்ப சரியா சொன்ன..பரவா இல்லையே இத்தனை தெரிந்து வைத்து இருக்குற” என்று ஆசிரியர் பாராட்டினார்.

    அன்று மட்டும் அல்ல அதை தொடர்ந்து வந்த அனைத்து நாட்களிலும் ஆசிரியர் கேட்கும் முன் முத்து எழுந்து விடை அளித்து விடுவான். அதுவரை தான் மட்டும் எல்லாரையும் விட புத்திசாலி என்று நினைத்து இருந்த மணியின் மனதில் முத்துவின் மேல் பொறாமை தீ மூண்டது. காலாண்டு தேர்வில் மணியை விட அதிக மதிப்பெண் பெற்று, முதல் மதிப்பெண் பெறுகிறான்.  அப்படியே ஆரம்பித்த பொறாமை, மணி முத்துவிடம் விலகியே செல்கிறான்.  சம்பவம் நடந்த அன்று, மணியின் சைக்கிள் முத்துவின் கை பட்டு தெரியாமல் கீழே விழுந்து அதன் முகப்பு விளக்கு உடைந்து விடுகிறது.

    அந்த கோவம், பொறாமை எல்லாம் சேர்ந்து அவனை கோவத்தோடு அடிக்கிறான். ஆனால் அவன் தோளில் இரத்தம் வரும் அளவு அவன் அடிக்கவே இல்லை..அதுதான் அவனுக்கு குழப்பமாகவும், பயமாகவும் இருந்தது. இவர்கள் படிக்கும் பள்ளி இருப்பது வேடசந்தூர் என்ற கிராமம். முத்துவை தவிர மற்ற மாணவர்கள் அனைவரும் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள்.

   முத்து எந்த ஊர் என்பது மணிக்கு தெரியாது. முத்துவும் மற்றவர்கள் கூட நன்கு பழகினாலும் தன்னைப் பற்றி எதுவும் யாரிடமும் சொன்னதில்லை. செந்தில் மட்டும் ஓரளவு அவன் பற்றி அறிவான்.  இதை எலலாம் யோசித்துக்கொண்டே மணியும் , செந்திலும் ஒன்றாகச் செல்கிறார்கள்.

     செந்தில் சைக்கிள் ஓட்டி கொண்டு சென்று கொண்டே இருக்கிறான். இரண்டு பக்கத்து கிராமங்கள் தாண்டி, ஊரின் ஒதுக்குப் புறமாக இருந்த கலைக் கூத்தாடிகள் குடியிருப்புக்கு செந்தில் மணியனை அழைத்துச் செல்கிறான். மணிக்கு ஒரே குழப்பம். முத்துவின் வீட்டுக்கு என்று இங்கு அழைத்து வந்து இருக்கானே என்று திகைக்கிறான். அங்கு இருந்த ஒரு கூடாரத்துக்குள் மணியை அழைத்துச் செல்கிறான்..அங்கு இருக்கும் ஒரு கட்டிலில் ஒரு முதியவர் படுத்து இருக்கிறார்.

    இவர்களைப் பார்த்ததும்,  “ தம்பி நீங்க முத்து கூட படிக்கற செந்தில் தம்பி தானே...இங்க எப்படி?..இன்னும் முத்து வீட்டுக்கு வரைவில்லையே பா” என்று சொல்லிக் கொண்டே எழுந்து இவர்களை வரவேற்கிறார்.

   அவரிடம் பேசிய பிறகு மணி உண்மை கேட்டு அதிர்ந்து போகிறான். முத்து இந்த முதியவரின் வளர்ப்பு பையன். அவன் அம்மா, அப்பா சிறு வயதில் இவனை விட்டு தவறி விட, குழந்தை இல்லாத அந்த பெரியவரும் அவர் மனைவியும் தான் அவனை வளர்த்து வருகிறார்கள்.

    பள்ளி நேரம் போக, மற்ற நேரங்களில் இந்த கூத்தாடி கூட்டத்துடன் சென்று வேடிக்கை காட்டி, அதில் வரும் பணத்தில் தான் அவர்கள் மூவரும் வாழ்ந்து வருகிறார்கள். அப்படி நேத்து ஒரு நிகழ்வின் போது கையில் அடி பட்டு கட்டு போட்டு பள்ளிக்கு வந்து இருக்கும் போது தான் முத்துவை மணி அடித்ததும்,  அதன் காரணமாக இரத்தம் வந்ததும் எல்லாம்.  இதை கேட்க கேட்க மணியின் கண்கள் குளமாகியது.. திரும்பி நின்று தன் கண்ணீரை மறைத்துக் கொண்டு பெரியவருக்கு விடை சொல்லிவிட்டு வருகிறான்.  

    இருவரும் வீடு திரும்பும் போது ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை.  நமக்கு எல்லாம் இருக்கிறது..

   ஆனால் இந்த படிப்பு ஒன்று தான் முத்துவின் சொத்து. அவனையும், அவன் வாயிலாக அவன் குடும்பத்தையும் மீட்கும் ஒரே விசயம் கல்விதான். அதில் போய் நான் பொறாமைப்பட்டு இருக்கேனே என்று தவிக்கிறான்.  அடுத்த நாள் எப்போது விடியும் என்று மணி காத்து இருக்கிறான். பள்ளிக்கு வெகு விரைவில் கிளம்பி செல்கிறான். வகுப்புக்குள் சென்றதும், அலைமோதும் அவன் கண்கள் முத்துவைக் கண்டதும், நிம்மதி அடைந்தது. மெல்ல அவன் அருகில் சென்று அவன் கை பற்றி, தோள் சாய்த்துக் கொள்கிறான். அந்த கை பற்றுதல் காலத்துக்கும் உன்னிடம் நட்போடு இருப்பேன் என்று சொல்லாமல் சொல்லியது.