ஆழமாய் மண்ணை அள்ளி விட்டார்-வளத்தை
ஆனமட்டு மிங்கே கொள்ளை யிட்டார்!
வாழையடி வாழையை வெட்டு கின்றார்-வாழும்
வளத்தை அழித்தே உண்ணு கின்றார்!
நீரின் கருப்பை அறுத்து விட்டார் -எங்கும்
நெகிழிக் குப்பை விதைத்து விட்டார்!
வேரிலே வெந்நீர் ஊற்றி விட்டார்-இயற்கை
வெந்திடும் வேலை செய்து விட்டார்!
மழைதரும் காட்டை சூறை இட்டார்-அதை
மகிழ்ச்சியாய் சிலருக்கு மாற்றி விட்டார்!
பிழைதரும் செயலைச் செய்து விட்டார்-அவர்
பிழைப்பே இதுவெனப் பழகி விட்டார்!
வயல்களில் கருங்கல் நட்டு விட்டார்-அதை
வகையாய் விலைக்கே விற்று விட்டார்!
உயர்ந்த மாளிகை கட்டி விட்டார்-பசி
உணவின் வழியை அடைத்து விட்டார்!
கடல்வளம் அழிக்கத் திட்டம் கொண்டார் -அதை
கார்ப்பரேட் சுரண்டும் வழியைக் கொண்டார்!
உடலினை அறுத்திடத் துணிந்து நிற்பார்-இயற்கை
உறுப்பாம் ஐம்பூதம் அழித்து நிற்பார்! மலைகளைக் குடைந்து மறைத்து விட்டார்-விலை
மதிப்பிலா கற்களை விற்று விட்டார்! விலையாய்ப் போனது இயற்கைச் செல்வம் -கெட்ட
விடமாய் ஆனது மனித உள்ளம்