articles

ஓனர் சொல்றார்! ஓபிஎஸ் பம்முறார்! - மதுக்கூர் இராமலிங்கம்

உலகிலேயே ஒரு கட்சியின் பொதுக்குழு இவ்வளவு மின்னல் வேகத்தில் நடத்தி முடிக்கப்பட்டிருக்குமா என்று உச்சநீதிமன்றமே வியக்கும் வகையில் அதிமுகவின் பொதுக்குழு நடத்தி முடிக்கப்பட்டு வேட்பாளரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் என இரு தரப்பும் வேட்பாளர்களை களத்தில் இறக்கியது. தேர்தலில் போட்டியிட்டால் பெட்டி காலியாகிவிடும் என்பதை புரிந்து கொண்ட பாஜக இந்த இரு ஆடுகளில் எந்த ஆடு கொழுத்தது என ஆய்வு செய்தது. அதிமுக வேட்பாளர் தேர்வு உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் என பல கட்டங்களில் நடந்தது. இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ்சை ஏற்கவில்லை என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் உள்ளிட்டவர்கள் வாக்களிக்கும் வகையில் பொதுக் குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்யுமாறும், ஒருவேளை அதற்கு அவகாசம் இல்லை என்றால் அஞ்சல் வழியில் பொதுக் குழு உறுப்பினர்களின் கருத்தை கேட்டறிந்து முடிவு செய்யுமாறும் உச்சநீதிமன்றம் கூறியது.

செல்லாத பொதுக் குழுவின் அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழ் மகன் உசேன், தேர்தல் ஆணையராக மாறினார். பொதுக் குழு உறுப்பினர்களின் ஒரே தேர்வாக இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு மட்டுமே முன்மொழியப்பட்டார். ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் பெயரை கூட அவர் முன்மொழியவில்லை. ஈரோடு கிழக்குத் தொகுதியில் வெற்றி பெற முடியாத நிலையில், அஞ்சல் வழியில் நடைபெற்ற பொதுக் குழுவில் தென்னரசு வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுவிட்டார் என்று தமிழ் மகன் உசேன் தேர்தல் ஆணையத்திடம் கடிதம் அளித்துள்ளார். இது நீதிக்கு புறம்பானது என்று ஓபிஎஸ் தரப்பால் புலம்ப மட்டுமே முடிந்தது.  ஏனெனில், இபிஎஸ் தரப்பின் வேட்பாளருக்குத்தான் அதிக ஆதரவு உள்ளது என்று பாஜக தலைவர் அண்ணாமலையும், மாநில பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவியும் ஏற்கெனவே தீர்ப்பெழுதிவிட்டனர். அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று கூறிக் கொண்டே, அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் தங்களது விரும்பம் என்றும், அதிமுக ஒரு அணிக்குள் இருந்தால் தான் திமுகவை எதிர்க்க முடியும் என ஓபிஎஸ்ஸிடம் தெரிவித்தேன் என அண்ணாமலை வெளிப்படையாகவே கூறினார். ஓபிஎஸ் தரப்பு தனது வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும் அண்ணாமலை தீர்ப்பெழுதிவிட்டார்.

உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் என்று பல மட்டங்களில் ஓபிஎஸ் தரப்பு போராடினாலும் கூட, கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லை என்பது போல அண்ணாமலையே சொல்லிவிட்டதால் வேறுவழியில்லாமல் தன்னுடைய வேட்பாளரை வாபஸ் வாங்கிக் கொள்வதாக ஓபிஎஸ் தரப்பு ஜகா வாங்கிக் கொண்டது. அவர்களுக்கு வேறுவழியில்லை. ஓனரே உத்தரவிட்ட பிறகு, சேவித்து ஏற்பதை தவிர சேவகருக்கு வேறுவழியில்லையே! இதில், இபிஎஸ் தரப்புக்கும் மகிழ்ச்சி இல்லை. ஓபிஎஸ்சுக்கும் மகிழ்ச்சி இல்லை. ஓபிஎஸ் ஆதரவாளரான பண்ருட்டி ராமச்சந்திரன் வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்காமல் இவர்களே ஒரு வேட்பாளரை அறிவித்தது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணான செயல் என்று பொருமினார். குப்புற பிடித்து தள்ளினாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக, எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த தென்னரசுக்கு வாக்கு கேட்க மாட்டோம். இரட்டை இலைக்கு மட்டும்தான் வாக்கு கேட்போம் என்று ஓபிஎஸ் தரப்பு தலைவர் கு.ப.கிருஷ்ணன் கூறியுள்ளார். 

பாஜகவின் பகுதிக் குழு அலுவலகமாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம், ஒரு வேளை தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கியுள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பு தனது பிரச்சாரத்தில் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். தென்னரசுக்கு வாக்களிக்க வேண்டாம் என பிரச்சாரம் செய்யக் கூடும். அதிமுகவினரின் அட்வைசராக அண்ணாமலை செயல்பட வேண்டிய அவசியம் இல்லை என்று இபிஎஸ் தரப்பு தலைவர் ஜெயக்குமார் முன்பு சீறியிருந்தார். இப்போது அண்ணாமலையின் கருத்து தங்களுக்கு ஆதரவாக இருப்பதால் தற்காலிக அட்வைசராக அவரை ஏற்கக் கூடும். ஆனால், அண்ணாமலையும், சி.டி.ரவியும் தங்களுக்கு நல்லது செய்யவில்லை என்பது அவர்களுக்கே நன்றாக தெரியும். ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரம் துவங்குவதற்கு முன்பே, அதிமுகவின் இரு அணிகளும் பாஜகவிடம் தோற்றுள்ளன. கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கட்சியை தின்று செரிக்க முயலும் பாஜகவிடம் வசமாக இரு அணிகளும் சிக்கியுள்ளன. இவர்களை ஓடி கலைக்கவிட்டு வேட்டையாடிக் கொண்டிருக்கிறது பாஜக. ஒரு கட்சியை இன்னொரு கட்சியிடம் ஒத்திக்குவிட்டால், என்னவாகும் என்பதற்கு அதிமுக ஒரு உதாரணமாக மாறியுள்ளது. இவர்களால் அவ்வப்போது சொல்லப்படும் ஒன்றரைக் கோடி தொண்டர்களும் இதை ஏற்கமாட்டார்கள்.