உக்ரைன் மீது ஒரு சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று அறிவித்து, கடந்த 8 நாட்களில் படிப்படியாக முழுமையான ராணுவத் தாக்குதலாக மாற்றியிருக்கிறார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின். உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய பிரதேசங்கள், உக்ரைனில் 2014ல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் கலகம் செய்து அதிகாரத்தை கைப்பற்றிய நவீன பாசிச அதிதீவிர வலதுசாரி சக்திகளின் கொடூர ஒடுக்குமுறையை எதிர்த்து, தங்களை தாங்களே தனி குடியரசு நாடுகள் என்று அறிவித்துக் கொண்டன. ரஷ்ய மொழி பேசும் மக்கள் நிறைந்த இப்பிரதேசங்களை தனி குடியரசுகளாக இப்போது அங்கீகரித்துள்ள புடின் தலைமையிலான ரஷ்யா, அந்த பிரதேசங்களை பாதுகாப்பதற்காக உக்ரைன் மீது இந்த சிறப்பு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறுகிறது.
புடின் ஆற்றிய உரை
முன்னதாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், தற்போதைய நவீன உக்ரைன் என்பது ரஷ்யாவின் ஒரு பகுதியே என்றும், அரசியல், பொருளாதார, கலாச்சார ரீதியாக ரஷ்யாவுடன் பின்னிப் பிணைந்த ஒரு பிரதேசமே என்றும் கூறினார். அத்துடன் அவர் நிற்கவில்லை. தற்போதைய உக்ரைன், கம்யூனிஸ்ட் ரஷ்யாவால் உருவாக்கப்பட்டது என்றும், அது லெனினினுடைய உக்ரைன் என்றும் பேசினார். இன்னும் ஒரு படி மேலே போய், 1917 சோவியத் புரட்சிக்கு பிறகு, லெனினும் ஸ்டாலினும் சோவியத் ஒன்றியத்தின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது, சோவியத் ஒன்றியத்தில் இணைந்துள்ள குடியரசு நாடுகளுக்கு முழுமையான சுய நிர்ணய உரிமையை வழங்கினார்கள்; இந்த குடியரசு நாடுகள் எப்போது வேண்டுமானாலும் பிரிந்து போகும் உரிமையையும் உறுதி செய்தார்கள்; இது சோவியத் ஒன்றியம் உருவாகும்போதே அதை சிதறடிப்பதற்காக இரு தலைவர்களும் அதன் மடியிலேயே வைத்து விட்டுச் சென்ற வெடிகுண்டு என்றும் புடின் பேசினார். லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி உருவாக்கிய இந்த சுய நிர்ணய உரிமை காரணமாகத்தான் 1990களில் சோவியத் ஒன்றியம் சிதறுண்டது என்றும் அப்போது பிரிந்துச் சென்ற உக்ரைனின் எல்லைக்குள் பெருவாரியான ரஷ்யர்கள் வாழும் பகுதிகள் இருந்தபோதிலும் அவையும் உக்ரைனோடு சென்றுவிட்டன; எனவே அப்போது இழந்ததை இப்போது மீட்க வேண்டியுள்ளது என்றும்; உக்ரைன் என்ற நாடு நீடிப்பதற்கு தகுதியில்லாதது; அது பழைய “மகா ரஷ்யா” வின் ஒரு பகுதியே என்றும் புடின் கொந்தளித்தார். ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் விதமாக இன்றைய உக்ரைன் ஆட்சியாளர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக மாறி, நேட்டோ ராணுவ கூட்டணியில் இணைய முயற்சிப்பதை புடின் கடுமையாக எதிர்ப்பது நியாயமானது; அதே வேளையில், - இன்றைய உலக அரசியல் அரங்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அட்டூழியங்களுக்கு எதிராக அதை தடுத்து நிறுத்தும் வல்லமையோடு புடின் காய் நகர்த்துகிறார் என்ற போதிலும் - உக்ரைன் எனும் நாடு ஒரு சுயாட்சி குடியரசாக நீடிப்பதற்கு தகுதியில்லை என்று தனது “மகா ரஷ்யா” எனும் ரஷ்யப் பேரினவாத பெருமிதத்தை முன்னிறுத்துவது முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியதாகும். புடின் தனது கருத்து சரி என்று நிறுவுவதற்காக தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை உறுதி செய்த சோவியத் ஒன்றியத்தின் அரசமைப்புச் சட்டமே தவறு என்றும், அதை வடிவமைத்த லெனினது கோட் பாடுகளும், அதை செயல்படுத்திய ஸ்டாலினது சிந்தனைகளும் பிழையானவை என்கிறார். புடினின் இந்தக் கருத்து முற்றிலும் அவதூறானது. இந்தக் குறிப்பிட்ட பிரச்சனையில் புடினுக்கு லெனினும் ஸ்டாலினுமே தங்களது பதிலை 1913-14 காலகட்டத்திலேயே விரிவாக வழங்கிவிட்டார்கள்.
ஸ்டாலின் செய்த ஆய்வு
1917ல் சோவியத் புரட்சி நடைபெற்றது. அதற்கு முன்பு 1905-ல் நடைபெற்ற முதல் புரட்சி தோல்வியில் முடிந்தது. 1905க்கும் 1917க்கும் இடையில், ரஷ்யாவில் போல்ஷ்விக் கட்சி விரிவான ஆய்வுகளையும், களப்பணியையும் மேற்கொண்டது. சோவியத் ஒன்றியத்தை உருவாக்குவதற்கான - சோசலிச குடியரசு நாடுகளை ஒன்றிணைப்பதற்கான புரட்சிக்குப் பிந்தைய திட்டத்தில் என்னென்ன தடைகளும், இடையூறுகளும் நேரிடும் என்பதை விரிவாக போல்ஷ்விக் கட்சி ஆய்வு செய்தது. அதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாக தேசிய இனப்பிரச்சனை குறித்து ஆய்வு செய்யும் பொறுப்பு ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது. தோழர் ஸ்டாலின், ரஷ்யா மற்றும் அண்டை நாடுகள் உட்பட உலகின் பல பகுதிகளில் தேசிய இனங்கள் மற்றும் அவற்றின் பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து, பல முனை விவாதங்கள் நடத்தி போல்ஷ்விக் கட்சிக்கு, தேசிய இனப் பிரச்சனை தொடர்பான விரிவான ஆவணத்தை சமர்ப்பித்தார். இதையொட்டி எழுந்ததுதான், ஸ்டாலின் எழுதிய “ரஷ்யாவில் தேசிய இனப் பிரச்சனை குறித்து” என்ற நூல்.
‘முழுமையான ஜனநாயகம்’
முதலாளித்துவ சக்திகள், ஏகாதிபத்திய கைக்கூலிகள், அவற்றின் ஊடக ஊதுகுழல்கள் எப்போதும் ஸ்டாலினை சர்வாதிகாரி என்றும், ஜனநாயக விரோதி என்றுமே முத்திரை குத்தி வசைபாடி வந்திருக்கின்றன. ஆனால் தோழர் ஸ்டாலின், முழுமையான ஜனநாயகம் ரஷ்யாவிலும், உலகின் அனைத்து நாடுகளிலும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று இந்த நூல் முழுவதிலும் பேசுகிறார். தேசிய இனப் பிரச்சனைகளுக்கு முழுமையான ஜனநாயகம் மட்டுமே நிரந்தரத் தீர்வு என்று முன்வைக்கிறார். அன்றைய ரஷ்யாவைப் பற்றி விரிவாக குறிப்பிடும் ஸ்டாலின், “தேசிய இனப்பிரச்சனைக்கு அதிகபட்ச - சாதகமான தீர்வினை அளிப்பதே கம்யூனிஸ்டுகளாகிய நம் முன்பு உள்ள பிரச்சனை. தற்போதைய ரஷ்யா (1913ல்) அரசியல் நெருக்கடிகள் இன்னும் தீர்க்கப்படாத நாடாக உள்ளது. வரும் நாட்களில் இன்னும் புதிய சூழ்நிலைகள் உருவாகும். எப்படிப்பட்ட நிலை உருவானாலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்தி லும் நாம் முழுமையான ஜனநாயகமயத்தை எட்டும் போது தான் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும். இன்னும் சொல்லப்போனால் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான அடிப்படை நிபந்தனையே நாடு முழுமையான ஜனநாயகமயமாக்கப்படுவதுதான்” என்கிறார். “மார்க்சிஸ்ட்டுகளைப் பொறுத்தவரை தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை கைவிட்டுச் சென்று விட முடியாது. தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் சுய நிர்ணய உரிமை மிக மிக அடிப்படையான ஓர் அம்சமாகும்” என்று குறிப்பிடும் ஸ்டாலின், இது தொடர்பாக கம்யூனிஸ்ட்டுகளின் அணுகுமுறை எப்படியிருக்க வேண்டும் என்றும் விளக்குகிறார்.
‘கலாச்சார தேசியம்’ தீர்வல்ல!
பொதுவாக தேசிய இனங்களின் உரிமை என்று பேசும்போது, கலாச்சார தேசிய தன்னாட்சியை முன்னிறுத்துவதே முதலாளித்துவ முற்போக்கு சக்திகளின் சிந்தனையாக இருக்கிறது. அது தவறு என்கிறார் ஸ்டாலின். “அது வலிந்து உருவாக்கப்பட்டதாகவே இருக்கும்; செயல்முறைக்கு உதவாததாக இருக்கும். கலாச்சார தேசியவாதமானது, ஒற்றை தேசிய இன மக்களை தனித்துப் பிரித்து ஒன்றுபடுத்த வேண்டும் என்று முன்மொழிகிறது; நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மக்களை அங்கிருந்து பிரித்து, அவர்களது உண்மையான பண்பாட்டு பிணைப்புகளிலிருந்து பிரித்து ஒற்றை அடையாளத்தின் கீழ் வலிந்து ஒன்றுபடுத்தச் செய்கிறது. மேலும், அதன் அடிப்படையில் தேசியவாத வெறியுணர்வை தூண்டுகிறது; அந்த குறிப்பிட்ட தேசிய இனத்தின் தனித்தன்மைகளை தனித்துப் பாதுகாக்கவும், அதை மட்டும் வளர்த்தெடுக்கவும் முனைப்பு காட்டுகிறது. இது ஒட்டுமொத்த சமூக ஜனநாயக கட்டமைப்புடன் எந்தவிதத்திலும் இயைந்து செல்லாதது” என்று ஸ்டாலின் விவரிக்கிறார். எனவே கலாச்சார தேசிய தன்னாட்சி என்பது, தேசிய இனப்பிரச்சனைக்கு பொருத்தமான தீர்வு அல்ல என்கிறார்.
அப்படியானால் தீர்வு தான் என்ன?
“ஒரே சரியான தீர்வு, பிராந்திய சுயாட்சி . அதாவது மாநில சுயாட்சி. ரஷ்யாவைப் பொறுத்தவரை தனிக் குடியரசுகளாக போலந்து, லிதுவேனியா, உக்ரைன், காகசஸ் ஆகிய ஒவ்வொரு பிரதேசத்திற்கும் பிராந்திய சுயாட்சியை உறுதிப்படுத்துவதுதான். பிராந்திய சுயாட்சி அளிப்பதன் நன்மை என்னவென்றால், இது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களின் அதிகாரமாக அல்ல; மாறாக அந்த பிரதேசத்தின் ஒட்டுமொத்த மக்களின் அதிகாரத்திற்கு வழி செய்கிறது. மேலும், இது தேசிய இன அடிப்படையில் மக்களைப் பிரிக்காது; தேசிய இனங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை வலுப்படுத்தாது; மாறாக தேசிய இனங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை உடைத்து மக்களை ஒன்று படுத்தும்; இது வேறு வகையான பிரிவினையை - அதாவது மக்களிடையே வர்க்கப் பிரிவினையை - வர்க்க முரண்பாடுகளை முன்னிறுத்தும். அந்த முரண்பாடு முன்வரும் போது அந்த பிராந்தியத்தின் செல்வ வளங்களை பயன்படுத்து வது மற்றும் உற்பத்தி சக்திகளை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கான சிறந்த சாதகமான வழியை அந்த பிராந்தியத்தின் மக்கள் சமூகம் ஆய்வு செய்து முடிவெடுக்கும். இத்தகைய அம்சங்கள் எதுவும் கலாச்சார தேசிய தன்னாட்சியில் இருக் காது” என்று விரிவாக விளக்குகிறார் ஸ்டாலின். எனவே தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் பிராந்திய சுயாட்சி அடிப்படை அம்சமாக இருக்கிறது என்பதை உறுதி செய்கிறார் ஸ்டாலின். இதை விவரிக்கும் போது, தேசிய இனம் என்பது, “பொதுவான மொழி, எல்லை, பொருளாதார வாழ்வியல் மற்றும் ஒரு பொது கலாச்சாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மனநிலை ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து வரலாற்று ரீதியாக கட்டமைக்கப்பட்ட, நிலையாக வாழும் ஒரு மக்கள் சமூகம்” என்று வரையறை செய்யும் ஸ்டாலின், பிராந்திய சுயாட்சி என்பது ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டுமோ, ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமோ அல்லாமல் தேசிய சிறுபான்மை இன மக்களும் சேர்ந்து வாழும் பிராந்தியம் என்ற அடிப்படையிலேயே சுயாட்சி உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்” என்கிறார். உதாரணத்திற்கு போலந்தில் யூதர்கள், லிதுவேனியாவில் லெட்டியர்கள், காகசஸ் பிரதேசத்தில் ரஷ்யர்கள், உக்ரைனில் போலியர்கள் என சிறுபான்மையினரும் அதே பிராந்தியத்தில் நீண்ட காலமாக வாழ்ந்து வருகிறார்கள் என சுட்டிக்காட்டுகிறார் ஸ்டாலின். இந்த சிறுபான்மை மக்கள், தேசிய பெரும்பான்மை இனத்தவரால் ஒடுக்கப்படும் அச்சம் ஏற்படக்கூடும்; ஆனால் பழைய சமூக கட்டமைப்பே நாட்டில் தொடருமானால் அந்த அச்சம் நிஜமாகிவிடும்; எனவேதான் நாடு முழுமையான ஜனநாயகமயமாக்கப்பட வேண்டும்; அப்போது இத்தகைய அச்சம் காணாமல் போய்விடும் என, முழுமையான ஜனநாயகமயமே தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு என்பதை விவரிக்கிறார்.
தேசிய சிறுபான்மை இன மக்கள்...
அதே வேளையில், தேசிய சிறுபான்மை இன மக்களின் கிளர்ச்சிகள் ஏன் நடக்கின்றன என்பதையும் அவர் விவரிக்கிறார். தேசிய சிறுபான்மை இன மக்கள், தங்களது சொந்த மொழிக்கு ஆபத்து நேரும்போது அந்த பிராந்தியத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது ஆத்திரம் அடைகிறார்கள்; தங்களுக்கு கல்வி வாய்ப்பு மறுக்கப்படும்போது உரிமை பறிக்கப்பட்டதாக உணர்கிறார்கள்; தங்களது மதச் சுதந்திரமும், இதர பல குடிமை உரிமைகளும் மறுக்கப்படும் போது தாங்கள் தனித்துவிடப்படுவதாக உணர்கிறார்கள். இவை அனைத்தும் சம உரிமைகளாக உறுதி செய்யப்பட்டால் அந்த பிரச்சனை எழுகிற பேச்சுக்கே இடமில்லை. எனவே தேசிய சிறுபான்மை இன மக்களின் அனைத்து உரிமைகளும் சமமானதாக உறுதி செய்யப்பட வேண்டியது, தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வுகளில் மிக முக்கிய அம்சமாகும் என்கிறார் ஸ்டாலின். எனவே அடிப்படையில் நாடு முழுமையான ஜனநாயகமயமாக்கப்படுவதே தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பதை மிக வலுவாக நிறுவுகிறார் ஸ்டாலின்.
செழுமைப்படுத்திய லெனின்
இந்த ஆவணத்தின் அடிப்படையில் ரஷ்ய போல்ஷ்விக் கட்சி முன் சென்றது. இதைத் தொடர்ந்து 1914ல் தோழர் லெனின், இதை இன்னும் கூர்மைப்படுத்துகிறார். “சோசலி சத்திற்கான வர்க்கப் போராட்டத்தில் பாட்டாளி களின் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டியது முதன்மையான இலக்காகும்... ஆனால் ரஷ்யாவின் ஒட்டுமொத்த அரசியல் சூழலில் ‘மகா ரஷ்ய’ தேசியவாதம் எனும் விஷம் பரவியுள்ளது. இது ஒரே தேசிய இனம் மட்டுமே என்று கூறி, இதர தேசிய இனங்களை புறந்தள்ள முயற்சிக்கிறது; இது ரஷ்யா முழுவதிலும் பிற்போக்கு சக்திகளை வலுப்படுத்தவே உதவியுள்ளது” என்று, தனது ‘தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை’ என்ற நூலில் சுட்டிக்காட்டுகிறார். “மகா ரஷ்ய தேசியவாதம் போன்ற அனைத்து வகையான குறுகிய தேசிய இனவாதத்தை எதிர்ப்பது; அனைத்து தேசிய இனங்களுக்கும் அனைத்து உரிமைகளையும் சமமாக உறுதி செய்வது; குறிப்பாக அனைத்து விதமான சமமான அரசியல் உரிமைகள், இன்னும் குறிப்பாக தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை மற்றும் பிரிந்து செல்லும் உரிமை ஆகியவற்றை உறுதி செய்வது - என்ற இரண்டு பெரும் இலக்குகளை தற்போதைய சூழலில் ரஷ்ய பாட்டாளி வர்க்கம் மேற்கொள்ள வேண்டியுள்ளது” என்றும் லெனின் அந்நூலில் கூறுகிறார்.
‘‘சோசலிசத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்று, அனைத்து தேசிய இன மக்களின் உரிமைகளை சமமாகவும், முழுமையாகவும் உத்தரவாதம் செய்வது; அனைத்து தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை முழுமையாக உத்தரவாதம் செய்வது; அனைத்து தேசிய இனங்களின் தொழிலாளர்களது ஒற்றுமையை உறுதிப்படுத்துவது - ஆகியவைதான் தேசிய இனப் பிரச்சனை தொடர்பான மார்க்சியத் திட்டம்’’ என்கிறார் லெனின். எனவே சோவியத் ஒன்றியம் என்ற நாடு மார்க்சிய - லெனினிய விழுமியங்களை உயர்த்திப் பிடித்து முழுமையாக ஜனநாயகமயமாக்கப்பட வேண்டும் என்பதுதான் சோவியத் ஒன்றியத்தின் இலக்காக இருந்தது. அதுவே லெனின் - ஸ்டாலின் ஆகியோரின் கோட்பாடு மற்றும் செயலாக்கத்தின் அடிநாதமாக இருந்தது. ஆனால் இந்த கோட்பாடுகளை அமலாக்கம் செய்ததில் பின்னாட்களில் வந்த சோவியத் ஆட்சியாளர்கள் மற்றும் அரசுக் கட்டமைப்பு இழைத்த பிழைகளின் விளைவாகவே சோவியத் ஒன்றியம் பின்னடைவை சந்தித்தது. ஆனால், மிகப் பிரம்மாண்டமான நாடு தனித்தனியாக பிரிந்தபோதிலும் துளி ரத்தம் கூட சிந்தவில்லை. தேசிய இனங்களுக்குள் எந்த மோதலும் நடக்கவில்லை. ஜனாதிபதி புடின் இன்று, பிரம்மாண்டமான ரஷ்யா என்ற நாட்டின் தலைவராக நின்று ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ முடிகிறது என்றால் அது லெனினும், ஸ்டாலினும் உருவாக்கிய சோவியத் ஒன்றியத்தால்தான்.
இன்று (மார்ச் 5) தோழர் ஜோசப் ஸ்டாலின் நினைவு நாள்