பெய்ஜிங், ரமல்லா, ஜூலை 27- பாலஸ்தீனத்தின் முதன்மையான தேசிய விடுதலை இயக்கமான பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO), காசா பகுதி போராளிகள் இயக்கமான ஹமாஸ் ஆகியவற்றுக்கு இடையே பல ஆண்டு காலமாக நீடித்து வந்த அதிகாரப் பகிர்வு மோதலையும், பிரிவினையையும் முடிவுக்கு கொண்டு வந்து, ஒற்றுமையை உருவாக்கி, சரித்திரம் படைத்துள்ளது மக்கள் சீனம்.
இஸ்ரேலும் அமெரிக்காவும் பாலஸ்தீனத்தின் மீதான தங்கள் ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள, பிரதான பாலஸ்தீன இயக்கங் களுக்கு இடையே இருந்த அதிகாரப் போட்டியையும் பயன்படுத்திக் கொண்டன.
இந்த இயக்கங்களுக்கு இடையே யான ஒற்றுமைக்காக பல ஆண்டு கால முயற்சிகள் நடந்து வந்துள்ளன. தற்போதைய உலகப் புவி அரசியல் சூழலில், இந்த வரலாற்றுத் தேவை யை துல்லியமாக உணர்ந்து, பாலஸ்தீன விடுதலை இயக்கம், ஹமாஸ் உள்ளிட்ட 14 பாலஸ்தீன இயக்கங்களை ஒன்றிணைத்து சீன தலைநகர் பெய்ஜிங்கில் 3 நாட்கள் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது சீனக் குடியரசு. இதனைத் தொடர்ந்து, ஜூலை 23 அன்று பாலஸ்தீன இயக்கங்களுக்கு இடையே நீடித்து வந்த அதிகார போட்டிக்கு முடிவுகட்டி, சீனாவின் அளப்பரிய அரசியல் துணிச்சல் மற்றும் இராஜதந்திர முயற்சிகளால் பாலஸ்தீன பிரிவுகள் இடையே தேசிய ஒற்றுமை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒற்றுமை ஒப்பந்தம் மூலம் பாலஸ்தீன இயக்கங்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்த சீனா மேற்கொண்ட முயற்சிகளுக்கும், கடந்த பல ஆண்டுகளாக பாலஸ் தீனத்திற்கு சீனா கொடுத்து வரும் ஆதரவு மற்றும் உதவிகளுக்கும் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் துணைத்தலைவர் மொஹமத் அல்-அலௌல் உணர்ச்சிப் பெருக்குடன் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் பாலஸ்தீன தேசிய ஒற்றுமையை அடைவதற்கான ஆக்கப்பூர்வ முன்னேற்றம் என ஹமாஸின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஹோசம் பத்ரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். போர் முடிவடைந்த பிறகு பாலஸ்தீனத்தை கட்டமைப்பதற்கான சிறந்த மற்றும் மிகவும் பொருத்தமான தேசியத் தீர்வை இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்
இந்த ஒற்றுமை ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, ஹமாஸ் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் பாலஸ்தீன தேசியக் கூட்டணியின் சட்டப்பூர்வ பிரதிநிதியாக பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை(பிஎல்ஓ) ஒரு மனதாக ஏற்றுக்கொண்டுள்ளன. போர் முடிந்த பிறகு அல்-குத்ஸ் நகரை பாலஸ்தீனத்தின் தலைநகராகக் கொண்டு சுதந்திர பாலஸ்தீன அரசை நிறுவுவதற்கும், பாலஸ்தீன பிரிவுகள் மற்றும் பாலஸ்தீன அதிகார சபையின் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு ஒரு இடைக்கால தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பதற்கும் இந்த ஒப்பந்தம் உறுதியளித்துள்ளது.
சொந்த நிலத்தில் இருந்து துரத்தப்பட்ட பாலஸ்தீனர்கள் திரும்பி வருவதற்கான உரிமையை உறுதி செய்ய ஐ.நா. அவை தீர்மானம் 194 இன் படி இந்த ஒப்பந்தத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டிற்கு திரும்பி வர விருப்பம் இல்லாதவர்களின் உணர்வை மதிக்கும் வகையில் அவர்கள் இழந்த சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் இதனை சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வர பாலஸ்தீன மக்களின் உரிமையையும், சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தின்படி கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளிலும் சுயநிர்ணய உரிமை மற்றும் அவர்களின் போராட்ட உரிமையும் இந்த ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்டள்ளது.
ஊடகங்கள் மறைப்பு
வழக்கம் போல, சர்வதேச ஊடகங்கள் சீனாவின் இந்த வரலாற்று முன்முயற்சி குறித்து பேசவில்லை. சாதாரண ஒப்பந்தமாக கடந்து, உலகின் அமைதிக்கான சீனாவின் இடை விடா முயற்சியை உலகின் கண் முன் இருந்து மறைக்க முயன்றுள்ளன.
அமைதியை நிலை நாட்டுவதில் புதிய மைல்கல்
இந்த ஒப்பந்தம் மூலம் மத்திய கிழக்கு பிரதேசத்தில் அமைதியை நிலைநாட்டும் சர்வதேசக் கடமையை நிறைவேற்றுவதில் புதிய மைல் கல்லை சீனா எட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஈரான் மற்றும் சவூதி அரேபியாவிற்கு இடையே பல ஆண்டுகாலமாக நீடித்து வந்த பிரச்சனை களை பேச்சுவார்த்தை மூலம் சீனா தீர்த்து வைத்தது என்பது நினைவுகூரத்தக்கது.
இதனைக் கண்டு மத்திய கிழக்கு நாடுகள், மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் பிரமித்துப் போயின. மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே பிரிவினையைத் தூண்டி அந்த பிராந்தியத்தை அமெரிக்கா தனது ஆதிக்கம் நிறைந்த பகுதியாக வைத்திருக்கும் சூழலில் தனது துல்லியமான வெளியுறவுக்கொள்கை மூலம் சீனா அந்த பேச்சுவார்த்தையில் வெற்றி கண்டது. இது மத்திய கிழக்கில் அமைதியை கொண்டு வரும் முக்கிய முன்முயற்சியாக அமைந்தது.
இந்நிலையில், பாலஸ்தீன இயக்கங்களுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒற்றுமை ஒப்பந்தம் பாலஸ்தீன - இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டு வருவதிலும் போருக்கு பிறகு பாலஸ்தீன அரசை நிறுவும் பணியிலும் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது.
இந்த ஒப்பந்தம் மூலம் பாலஸ்தீன இயக்கங்களுக்குள் தீர்க்கமான ஒற்றுமை ஏற்படுத்தப்பட்டுள்ள சூழலில் ஒருங்கிணைத்த (ஒழுங்கமைக்கப்பட்ட ) குழுவின் மூலமாக பேச்சுவார்த்தயை துரிதப்படுத்த முடியும்.
பயணிக்க வேண்டிய தூரம் அதிகம்
ஒற்றுமை ஒப்பந்தத்தின் வெற்றி, அனைவருக்கும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. பாலஸ்தீனர்களுக்கான எதிர் காலத்தைக்கொடுத்துள்ளது என சீன வெளியுற வுத்துறை செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும் “மத்திய கிழக்கில் ஒரே நாள் இரவில் அமைதியைக் கொண்டு வந்து விட முடியாது. சரியான பாதையில் பயணித்து அமைதியை அடைய நாம் இன்னும் வெகுதூரம் செல்லவேண்டும். அமைதிக்கான பாதையை நம்பிக்கை இழக்காமல் நாம் தொடர வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சமூகத்தின் வரவேற்பு
இந்த ஒற்றுமை ஒப்பந்தத்தை பாலஸ்தீன ஆதரவு நாடுகள் , அமைப்புகள், ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளன. பாலஸ்தீன ஒற்றுமையை உருவாகியுள்ள இந்த ஒப்பந்தத்தை ஐநா பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் பாராட்டி வரவேற்றுள்ளார். மேலும் “பாலஸ்தீன ஒற்றுமையை உருவாக்குவதில் இது முக்கிய முன்னெடுப்பு. பேச்சுவார்த்தை மூலம் தங்களுக்குள் உள்ள வேறுபாடு களை கைவிட்டு ஒன்றிணைந்துள்ள பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் எடுத்துள்ள முடிவில் உறுதியாக நின்று நிறை வேற்ற வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய கிழக்கு அமைதி செயல்முறைக்கான ஐரோப்பிய ஒன்றிய சிறப்பு பிரதிநிதி ஸ்வென் கூப்மன்சும் இந்த உடன்பாட்டை வரவேற்றுள்ளார். “சீனாவின் இந்த அமைதி முன்முயற்சி குறிப்பிடத்தக்க சாதனை. மத்திய கிழக்கு பகுதிகளில் அமைதிக்கான சமாதான முன்னெடுப்புகளில் சீனாதனது நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான பங்கை முழுமையாக நிரூபிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவுடனான தொடர்பை மேலும் வலுப்படுத்த எதிர்நோக்குகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மலேசியா, பாகிஸ்தான், துருக்கி,ஓமன்,நாட்டின் தலைவர்களும் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் வரவேற்றுள்ளனர்.
எந்தச் சூழலிலும் பாலஸ்தீனர்களுக்கான ஆதரவு தொடரும்
மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை நிலைநாட்டும் சீன அரசின் வெளியுறவுக் கொள்கைகளை செயல்படுத்தி வரும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, “சர்வதேச அரசியல் சூழல் எப்படி மாறினாலும் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை நிறுவவும், பாலஸ்தீனர்களின் உரிமையை நிலை நாட்டவும் சீனா தொடர்ந்து செயல்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
“காசாவில் தற்போது நடக்கும் போரால் மட்டும் பாலஸ்தீனர்கள் பாதிக்கப்படவில்லை, வரலாற்று ரீதியாகவே அவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. அவர்களது நிலம் அவர்களுக்கு சொந்தமாக வேண்டும், அதை அவர்கள் வழிநடத்த வேண்டும், அவர்கள் ஆட்சி செய்ய வேண்டும். அது தான் வரலாற்று ரீதியாக அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சரி செய்யும் வழி” எனவும் வாங் யீ குறிப்பிட்டுள்ளார்.
பீப்பிள்ஸ் டிஸ்பாட்ச் மற்றும்
பீப்பிள்ஸ் டெய்லி ஏடுகளின் விபரங்களில் இருந்து
தொகுப்பு : சேதுசிவன்