மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த செவ்வா யன்று (16.05.2023) விழுப்புரத்தில் நடைபெற்ற பட்டியலின, பழங்குடி மக்கள் மாநாட்டில் பங்கேற்க வருகைதந்த அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களிடம் இன்றைய அரசியல் நிலவரம் குறித்து தீக்கதிர் நாளிதழின் சார்பில் சில கேள்விகளை முன்வைத்தோம். இந்தக் கேள்வி களுக்கான அவரது பதில் பின்வருமாறு: கேள்வி : சமீபத்தில் வெளியான கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலிலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்? சீத்தாராம் யெச்சூரி : இந்த முடிவுகள் தேசிய அளவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உடனடியாகக் கூறிவிட முடியாது. எனினும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஒரு முன்னோட்டம்தான் இந்தத் தேர்தல் என்ற வகையில்தான் பாஜக முன்னிலைப்படுத்தியது. இது ஒரு முன்னோட்டம் என்று அவர்களே முன்வைத்த இந்தத் தேர்தலில் அவர்கள் தோற்றுள்ளனர். பாஜகவிற்கு எதிரான வாக்குகளை அணி திரட்ட வேண்டும் என்று முயற்சி செய்து வரும் மதச்சார்பற்ற- ஜனநாயக எதிர்க்கட்சிகளுக்கு இது நேர்மறையானதொரு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் 2024 தேர்தலில் பாஜக எவ்விதமான சாதகத்தையும் பெற முடியாத நிலையை உருவாக்கும்.
இரண்டாவதாக, தேர்தலில் தோற்கடிக்கப்பட முடியாதவர் மோடி என்ற பிம்பம் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளது. உண்மையில், இந்தப் பிம்பம் அவர்களே உருவாக்கியதுதான். இதற்கு முந்தைய சுற்றில் நடைபெற்ற தேர்தலில் அவர்கள் குஜராத்தில் வெற்றி பெற்ற போதிலும், ஏற்கனவே ஆட்சிப் பொறுப்பில் இருந்த இமாச்சலப் பிரதேசத்தை இழந்தார்கள். கடந்த 15 ஆண்டுகளாக அவர்கள் தங்கள் பிடியில் வைத்திருந்த தில்லி மாநகராட்சி மன்றத்தையும் அவர்கள் இழந்தார்கள். அதிகமாக வெளியில் தெரியாத வடகிழக்கு மாநில தேர்தலில் தாங்கள் ஒரு மாபெரும் சக்தி என்ற தோற்றத்தை அவர்கள் முன்வைத்து வந்தனர். மோடி என்ற மாபெரும் சக்தியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று கூறி வந்தார்கள். ஆனால் இந்தப் பகுதியின் மூன்று மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 180 இடங்களில் 46 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. நாகா லாந்தில் 60க்கு 12 இடங்களையும், மேகாலயாவில் 60க்கு 2 இடங்களை யும் அது பெற்றது. மற்ற இடங்களில் அது வைப்புத் தொகையையும் கூட இழந்தது. எனவே ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்குவதுபோல தேர்த லில் தோற்கடிக்க முடியாது என்பதொன்றும் இல்லை. இப்போது கர்நாடக தேர்தல் முடிவுகளின் மூலம் அதுவும் கூட வெட்ட வெளிச்சமாகி விட்டது. எனவே எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரையில் இந்த முடிவுகள் ஒரு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
அவர்கள் வெல்லும் நிலை இல்லை; அதனால்...
கேள்வி: ஜம்மு-காஷ்மீரில் இப்போது என்ன நடைபெற்று வரு கிறது? அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா?
பதில்: ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலைமை மிகவும் மோசமான தாகவே உள்ளது. அதாவது, அங்கு நிர்வாகம் - ஆட்சி என்று சொல்லக் கூடிய எதுவுமே இல்லை. ஒன்றிய பாஜக அரசின் ஒரே கவனம் என்பது, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் முஸ்லீம்களை சிறுபான்மையினராக மாற்றுவதை உறுதிப்படுத்தும் வகையில் ,அந்தப் பகுதியின் மக்கள்தொகையின் தன்மையை மாற்று வதில்தான் உள்ளது. இதற்காகவே அவர்கள் சட்டங்களை திருத்தி யுள்ளனர். தொகுதிச் சீரமைப்பு நடவடிக்கைகள் மட்டுமல்ல; வெளி மாநி லத்தவர்களையும் அங்கு நிலைபெற அனுமதிக்கின்றனர். இதற்கு முன்பு அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அங்குள்ள சொத்து க்களை வாங்க – விற்க முடியும். இப்போது வெளி மாநிலத்தவர்களும் சொத்துக்களை வாங்க – விற்க அனுமதிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. உண்மையில் மக்கள்தொகையின் தன்மையை மாற்றுவதுதான் அவர்களின் நோக்கம். அதில்தான் அவர்களது முழு கவனமும் இருக்கி றது. இதற்காகவே முதலில் தொகுதிச் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. முஸ்லீம் அல்லாதவர்களின் பங்கு அதிகரிப்பதை உறுதிப்படுத்தும் வகையில்தான் இந்த மாற்றமும் இருந்தது. இதை அவர்கள் செய்து முடித்துவிட்டார்கள். காஷ்மீர் மக்களை ஜனநாயகச் செயல்பாட்டிற்குள் மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதுதான் மிக முக்கியமானதாகும். என்றாலும் அதைச் செய்வதற்கான வழியாக இருக்கும் சட்டமன்றத் தேர்தலை அவர்கள் நடத்த முன்வரவில்லை. அவ்வாறு செய்யவில்லை எனில், மக்களிடையே ஏற்கனவே இருந்து வரும் அந்நியப்படும் போக்கு மேலும் அதிகரிக்கும். தங்களுக்குச் சாதக மான முடிவை தேர்தல்கள் கொண்டுவரும் என்ற நிச்சயம் இல்லாத நிலையில்தான் அவர்கள் சட்டமன்றத் தேர்தலை நடத்த முன்வர வில்லை.
சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்கு அவர்கள் முன்வைத்த மூன்று முன்நிபந்தனைகளும் இப்போது நிறைவேற்றப்பட்டுவிட்டன. முதலாவது, தொகுதிச் சீரமைப்பு வேலைகள் நிறைவு பெற்றுவிட்டன. இரண்டாவது, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு. அதுவும் முடிந்து விட்டது. மூன்றாவது, பயங்கரவாத நடவடிக்கைகள் ஏதுமின்றி இயல்பு நிலை நிலவ வேண்டும். ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, அங்கு இயல்பு நிலைதான் நிலவுகிறது. அப்படியிருக்கையில், அவர்கள் ஏன் தேர்தலை நடத்த முன்வரவில்லை? ஏனென்றால், அங்கு நிச்சயமற்ற நிலை நிலவுகிறது என்பது மிகத் தெளிவாகவே தெரிகிறது. முடிவு எப்படியிருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாத நிலையில் இருப்பதால்தான், அவர்கள் தேர்தலை நடத்த முன்வரவில்லை.
சுயேச்சையான நீதித்துறை ஜனநாயகத்தின் முதுகெலும்பு
கேள்வி: ஒன்றிய அரசு நீதித்துறையை தவறாகப் பயன்படுத்து வது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. முற்றிலும் தவறாகப் பயன் படுத்தப்படுகிறது என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் நிச்சயமாக, ஆட்சியில் உள்ள நிர்வாகத் துறைக்கு கட்டுப்பட வேண்டும் என்ற நிர்ப்பந்தம், நெருக்கடி நீதித்துறையின் மீது சுமத்தப்படுகிறது. நீதித்துறை நியமனங்களின் மூலம் இது நடைபெறுகிறது. உச்சநீதிமன்றத்தில் கொலிஜியம் எதை பரிந்துரைத்தாலும், அதில் பாஜகவிற்கு சாதகமாக எவை உள்ளதோ, அவை மட்டுமே உடனடியாக அரசால் ஏற்றுக் கொள் ளப்படுகின்றன. அவ்வாறு அவர்களுக்குப் பிடித்தமில்லாதவை, ஏதாவ தொரு வகையில் பயனற்றதாகப் போகும் வகையில் கிடப்பில் போடப்படு கின்றன. இவ்வகையில்தான் நீதித்துறையின் மீது நிர்ப்பந்தம் செலுத்தப்படு கிறது. அது அதிகரித்துக் கொண்டும் வருகிறது. இது இந்திய ஜனநாய கத்திற்கு மிகவும் அபாயகரமானதும் கூட. ஏனெனில், சுயேச்சைத் தன்மை கொண்டதொரு நீதித்துறை என்பது ஜனநாயகத்தின் முதுகெலும்பா கும்.
மீண்டும் ஒரு பனிப்போரை அமெரிக்கா உருவாக்குகிறது
கேள்வி: சர்வதேச நிலைமைகளில் ரஷ்ய-உக்ரைன் போர் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?
பதில்: அதன் இறுதி விளைவைத்தான் நாம் பார்க்க வேண்டும். எனினும் இப்போது என்ன நடக்கிறது எனில், உலகின் மீதான தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவும், உலகத்தை தனது கட்டுப்பாட் டிற்குள் கொண்டுவரவுமான அரசியல்ரீதியான, யுத்த தந்திரரீதியான ராணுவக் கூட்டணியை அமெரிக்க ஏகாதிபத்தியம் வலுப்படுத்தி வருகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. மறுபுறத்தில், நேட்டோவை வலுப்படுத்தி, ஐரோப்பிய அரசியலின் மீது தாக்கம் ஏற்படுத்துவது என்பதன் மூலம் ரஷ்யாவை தனிமைப்படுத்தவும் அது முயற்சிக்கிறது. மறுபுறத்தில், அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை வலுப்படுத்த, சீனாவை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் அனைத்தும் உலகில் மீண்டுமொரு பனிப்போராகவும் மாற்றியுள்ளன. உண்மையில் இது மிகவும் அபாயகரமானது என்பது மட்டுமின்றி, உலகின் மீது எதிர்மறை யான தாக்கத்தையும் ஏற்படுத்தும். தனது உலகளாவிய மேலா திக்கத்தை வலுப்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதற்கேயுரிய வகையில் விளைவுகளை ஏற்படுத்து வதோடு, ஜனநாயக விரோத, உலக மக்களின் மீது மேலும் மேலும் அதிகமான அளவில் ஒடுக்குமுறையும் சுரண்டலும் அதிகரிக்கவும் வழிவகுக்கின்றன.
சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பு
கேள்வி: சீனாவின் சர்வதேச அளவிலான செல்வாக்கு எதிர்காலத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
பதில் : ஏற்கனவே அது நேர்மறையானதொரு தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. சீனாவின் தலையீட்டின் விளைவாக, ஈரானும் சவூதி அரேபியா வும் இப்போது ஒன்றுபட்டுள்ளன. மத்தியக் கிழக்குப் பகுதியில் இது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, தொடர்ந்து ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். மேற்கு ஆசியப் பகுதி யில், அமெரிக்காவின் வற்புறுத்தலின் விளைவாக, அரேபியக் கூட்டணி யிலிருந்து வெளியேற்றப்பட்ட சிரியா, இப்போது மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே இந்தப் பகுதியில் அமெரிக்கா விரும்பு வது போன்ற வகையில் அமெரிக்காவின் மேலாதிக்கம் இருக்கவில்லை. எனினும் இந்தப் பகுதியில் ஈரானின் நுழைவு என்பது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய பிரச்சனைகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். மேலும் இஸ்ரேல் இப்போது மிகப்பெரியதொரு நெருக்கடியில் உள்ளது. நீதித்துறையின் மீது நெருக்கடி தரும் நெதன்யாஹுவிற்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். எனவே எப்போதுமே கிளர்ச்சி யான சூழலில் நீடித்திருக்கும் மத்தியக் கிழக்குப் பகுதி இப்போது ஜன நாயக மயமாகும் செயல்முறையில் இறங்கியுள்ளது. எனவே தனிமைப் படுத்தலும் பொருளாதார ரீதியான தடைகளும் குறைவதற்கான வாய்ப்புள்ளது. லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளிலும் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. ஆப்பிரிக்காவிலுள்ள பல நாடுகளும் இதுவரையில் கண்டிராத வகையில் நிபந்தனையற்ற உதவியை பெறுகின்றன. இதற்கு முன்பு நிபந்தனைகளுடன் கூடிய உதவியையே இந்த நாடுகள் அமெரிக்காவிடமிருந்து பெற்று வந்தன. இந்த நிலை, உண்மையில் சீனாவின் செல்வாக்கை மேலும் உயர்த்துகிறது. எனவே சீனாவின் உலகளாவிய செல்வாக்கு அதிகரிப்பதென்பது அதன் நிலையை மேலும் உயர்த்துவதாகவே இருக்கும்.
வாக்குறுதிகளை நிறைவேற்ற செயல்பாடு தொடர்கிறது
கேள்வி: கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சியின் இரண்டு ஆண்டுக்கால சாதனைகள் குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில் : அவை மிகவும் நேர்மறையான சாதனைகள்தான். இடது ஜனநாயக முன்னணியின் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டிருந்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக அமலாக்கப்படுகின்றன. இந்த அரசை நிலைகுலையச் செய்ய ஒன்றிய அரசும் அதன் முகமைகளும் மேற்கொண்ட பல முயற்சிகளையும் அதனால் தடுக்க முடிந்துள்ளது. இடது ஜனநாயக முன்னணிக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் தத்துவார்த்த ரீதியான தாக்குதல்களின் ஒரு பகுதிதான் ‘கேரளா ஸ்டோரீஸ்’ என்ற பிரச்சாரப்படம். மக்கள் தாமாகவே முன்வந்து இந்தப் படத்தைப் புறக்கணித்துள்ளது நல்லதொரு அறிகுறியே. ஒருவகையில் கூறுவதானால், இஜமுன்னணி மற்றும் அதன் அரசுட னான மக்களின் தொடர்பு உண்மையில் மேலும் வலுவாகிக் கொண்டு வருகிறது. எனவே கடந்த இரண்டு ஆண்டுகள் நன்றாகவே இருந்தன. தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை மக்க ளுக்கு நிறைவேற்றும் வகையில் இந்தச் செயல்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
அபாயமான சூழ்நிலை
கேள்வி : திரிபுராவில் தற்போதைய அரசியல் நிலைமை எப்படி உள்ளது?
பதில் : இரண்டு இடங்களை மட்டுமே அதிகமாகப் பெற்று பாஜக திரிபுராவில் ஆட்சியைக் கைப்பற்றியது. எனினும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வேலைகளில்தான் அது ஈடுபட்டு வருகிறது. சட்ட மன்றத்தில் வலுவான எதிர்க்கட்சி இருந்த போதிலும், தனது அதிகா ரத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத நிலையை உறுதிப்படுத்து வதில்தான் அது, ஈடுபட்டு வருகிறது. இந்த முறை நேரடியான தாக்குதல்கள் எதும் நடைபெறவில்லை என்றபோதிலும், கைப்பற்றுவது, அடித்துப் பிடுங்குவது போன்றவற்றின் மூலம் திரிபுரா மக்களின், குறிப்பாக தங்களை ஆதரிக்காத பிரிவின ரின், பொருளாதார வாழ்நிலையை சீரழிக்கும் வேலையில் அது ஈடுபட்டு வருகிறது. எனவே அந்த மாநிலத்தில் ஜனநாயகத்திற்கு மிகவும் அபாயகரமானதொரு சூழ்நிலையே நிலவி வருகிறது.
அரசுகளின் செயல்பாடுகளுக்கு தடை போட ஆளுநர்கள் முயற்சி
கேள்வி: கேரளா, தமிழ்நாடு மாநில ஆளுநர்கள் தங்களது பதவியை தவறாகப் பயன்படுத்தி வருவது குறித்து என்ன கருதுகிறீர்கள்?
பதில் : ஆளுநரின் அரசியல் அமைப்புச்சட்டரீதியான பதவியை தவறாகப் பயன்படுத்துவதென்பது நாடு முழுவதிலும், குறிப்பாக பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில், தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மாநிலங்களில், அரசியல் ரீதியாக நேரடியாகத் தலையீடு செய்வது மற்றும் தனது அரசியல் நிகழ்ச்சிநிரலை அரங்கேற்று வது ஆகியவற்றுக்காக ஆளுநர் பதவியை பாஜக பயன்படுத்தி வருகிறது. சில மாநிலங்களில் மாநில அரசினை மீறி, அவ்வாறு அழைப்ப தற்கான தேவை எதுவும் இல்லாத போதிலும், அதிகாரிகளை வரவழைத்து உரையாடுவது போன்ற அளவிற்கும் கூட அவர்கள் வெளிப்படையாகவே நடந்து கொள்கின்றனர். எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களில், அவை நிலைபெறாத வகையில் ஆளுநர்களை பயன்படுத்தி, அந்த மாநி லங்களின் செயல்பாடுகளுக்குத் தடைபோடவும் செய்கின்றனர். இப்போது மாநில அரசு நிறைவேற்றியுள்ள மசோதாக்களை ஏற்றுக் கொள்ளவோ அல்லது மறுதலிக்கவோ ஒரு குறிப்பிட்ட கால அளவை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற நிலைபாட்டை கேரளாவும் தமிழ்நாடும் எடுத்துள்ளன. நீண்ட நாட்களுக்கு இந்த மசோதாக்களை கிடப்பில் போட்டு வைக்க முடியாது என்பதே அவற்றின் நிலைபாடாகும். உச்சநீதி மன்றமும் கூட இதைத்தான் சுட்டிக் காட்டியுள்ளது. நியாயமான ஒரு கால அளவிற்குள் ஆளுநர் செயல்பட வேண்டும் என்று அது குறிப்பிட்டுள் ளது. இது குறித்த அரசியல் அமைப்புச் சட்ட விதிகளையும் அது சுட்டிக் காட்டியுள்ளது. இந்தக் கால அளவு வரையறுக்கப்பட வேண்டும். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கும் இதேபோன்ற விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இது முறைப்படுத்தப்பட்டு, விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
பாசிச இந்துத்துவா தேவைகளுக்கேற்ப திருத்தம்
கேள்வி: இந்தியாவின் வரலாற்றைத் திரிக்கும் வகையில் சிபிஎஸ்இ பாடத் திட்டங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில் : இது மிகவும் பாதகமான ஒன்று. அது மட்டுமல்ல; இந்தியாவின் வரலாற்றை திருத்தி எழுதுவது என்ற மிகப்பெரும் திட்டத்தின் ஒரு பகுதியே இது. பாசிச இந்துத்துவாவின் தேவைகளுக்கு ஏற்றவகையில் இத்தகைய திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுதான் நடக்கிறது. எனவே வருங்காலத் தலைமுறையினர், பல்வேறு நாகரீகங்க ளின் கலவையில் உருவான ஒரு வரலாற்றை, இந்தியாவின் ஒன்றி ணைந்த வரலாற்றை, தெரியாதவர்களாக இருப்பார்கள். அதுவும் கூட, உண்மையான வரலாறாக இல்லாத, பல நேரங்களில் வரலாற்றுப் புனைவுகளின் மூலம் இந்து மதம் என்ற ஒற்றை மதத்தை முன்வைப்பது என்பதாகவே அது இருக்கும். இதுதான் இப்போது நடந்து வருகிறது. எனவே, இதில் முதலாவது அம்சம் என்பது தங்களது பாசிச வழிப்பட்ட திட்டத்திற்கு உகந்த வகையில் இந்திய வரலாற்றைத் திருத்தி எழுதும் வகையில்தான் இந்தப் பாடத்திட்ட மாற்றங்கள் உள்ளன. இரண்டாவதாக, வரலாற்றைப் படிக்கையில் பகுத்தறிவு, உண்மை ஆகிய வற்றின் மீது தாக்குதல் தொடுக்கிறது. எனவே, இது பகுத்தறிவின் மீதும், உண்மையின் மீதுமான தாக்குதலே ஆகும். எனவே, அறிவியல் தன்மை அற்றதுமாகும். அடிப்படையில் இது அறிவியல்பூர்வமான உணர்வின் மீது தொடுக்கப்பட்டுள்ள ஒரு தாக்குதலே ஆகும். டார்வின் பற்றிய பாடங்கள் கூட நீக்கப்பட்டுள்ளன. அறிவியல்பூர்வமான உணர்வு, அறிவி யல்பூர்வமான வழிமுறைகள் ஆகியவற்றின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல் இது என்பது மிக நன்றாகவே தெரிகிறது.
முன்பை விட பிரகாசமே
கேள்வி :தமிழ்நாட்டில் பாஜகவிற்கு எதிராக ஐக்கிய முன்னணிக்கான வாய்ப்புகள் எவ்வாறு உள்ளன?
பதில் : தமிழ்நாட்டில் ஏற்கனவே பாஜகவிற்கு எதிரான ஓர் ஐக்கிய முன்னணி இருந்துவருகிறது. கடந்த தேர்தலின்போது இதற்கான வாய்ப்பு மிகச் சிறப்பாக இருந்தது. இது மேலும் மேம்பட வேண்டும் என்றுதான் நான் கருதுகிறேன். இதற்கு முன்பிருந்ததை விட இதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளன. இந்த முறை நாற்பது தொகுதி களிலும் வெற்றி பெற வேண்டும். கேரளாவில் பாஜகவிற்கு ஒரு சட்ட மன்ற உறுப்பினர் கூட இல்லை என்பதைப் போல, தமிழ்நாட்டிலும் பாஜக வேட்பாளர்கள் எவரும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறக் கூடாது என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும்.
நேர்காணல் : வீ.பா.கணேசன்