articles

img

இந்திய மண்ணில் சிங்காரவேலர் தூவிய மே தின விதை - மதுக்கூர் இராமலிங்கம்

1923 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறை யாக மே தின விழாவை சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் சென்னையில் கொண்டாடியுள்ளார். இந்தியாவில் மே தினம் முதன்முறையாக கொண்டாடப்பட்டதன் நூற்றாண்டு இது.  சென்னையில் மே தின விழாவை கொண்டாடுவதற்கு முன்பு 1923 ஏப்ரல் 26ல்  சுவாமி தீனானந்த்க்கு அனுப்பிய தந்தியில்  இந்தியா முழுவதும் மே தினத்தை கொண்டாட வேண்டும் என்று  அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தீனானந்த் கயா காங்கிரசில் அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரசுக்கு உதவி செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் ஆவார்.  சிங்காரவேலர் அனுப்பிய தந்தியில் ‘உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மே தினத்தை கொண்டாடுவதால், இந்திய தொழிலாளரும் அவ்வாறு கொண்டாட வேண்டும் என்றும், நாடு சுதந்திரம் பெற்ற பிறகு பொருளாதார ஏற்றத்தாழ்வு கள் குறையவும் தொழிலாளர்களின் உரிமைகள் நிலைநாட்டப் படவும் மே தின விழா உத்வேகமூட்டும் என்றும் குறிப்பிட்டுள் ளார். அன்று நாடு முழுவதும் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடைபெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த சிங்காரவேலர், சென்னையில் மே தினத்தை கொண்டாடும்படி விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விவசாயி - தொழிலாளி

1923 ஆம் ஆண்டு மே தினத்தன்று சிங்காரவேலர் இந்துஸ் தான் தொழிலாளர்-விவசாயிகள் கட்சியைத் துவக்கியுள்ளார். அக்கட்சியின் கொள்கை விளக்கக் குறிப்பை தமிழில் வெளியிட்டுள் ளார். வர்க்கப் புரட்சிக்கு தொழிலாளர்கள்-விவசாயிகள் ஒற்றுமையை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால்தான், தன்னுடைய கட்சிக்கு அவ்வாறு பெயரிட்டிருக்கிறார். 1923 ஆம் ஆண்டு மே தின விழா சென்னையில் இரண்டு  இடங்களில் நடைபெற்றுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத் திற்கு எதிரே உள்ள கடற்கரையில் வடசென்னை தொழிலாளர் கள் சார்பாக பெரும் ஊர்வலமும், பொதுக் கூட்டமும் நடை பெற்றுள்ளது. தென் சென்னை தொழிலாளர்கள் சார்பில் நடை பெற்ற ஊர்வலம் திருவல்லிக்கேணி கடற்கரையில் முடிவுற்று பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது.  உயர்நீதிமன்ற கடற்கரை கூட்டத்தில் சிங்காரவேலர் மற்றும் தொழிலாளர் தலைவர் பி.நடேச முதலியாரும், திருவல்லிக் கேணி கடற்கரைக் கூட்டத்தில் சுப்பிரமணிய சிவா, கிருஷ்ண சாமி சர்மா, எம்.பி.எஸ். வேலாயுதம், சங்கர்லால் ஆகியோரும் பேசியுள்ளனர். இவ்விரு கூட்டங்களிலும் தொழிலாளர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர் என்று அன்றைய இந்து மற்றும் சுதேசமித்ரன் ஏடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.  சிங்காரவேலர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நெஞ்சம் நெகிழ, இடி முழக்கமென உரை நிகழ்த்தியதாக குறிப்புகள் உள்ளன. சாதி-மதங்களை கடந்து தொழிலாளர்கள் என்கிற  உணர்வுவோடு ஒன்றுபட வேண்டுமென்றும் நாட்டின் விடு தலைக்காகவும் விடுதலை பெறுகிற நாட்டின் சமத்துவத்திற் காகவும் பணியாற்ற வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள் ளார். அவரது உரை துண்டுப் பிரசுரமாக வெளியிடப்பட்டிருக்கிறது. 

புனிதமான நாள்

முதல் மேதின கொண்டாட்டம் குறித்து மே 2ஆம் தேதி வெளி யான ‘தி இந்து’ ஆங்கில ஏட்டில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரில் உள்ள கடற்கரையில் நடைபெற்ற மே தினக்கூட்டத்துக்கு சிங்கார வேலர் தலைமையேற்றதாகவும், ஆர்வமிக்க தொழிலாளர்கள் பெருமளவு கூடியிருந்ததாக கூறப்பட்டுள்ளது. சிங்கார வேலர் தனது உரையில் மே முதல் நாள் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு புனிதமான நாள் என்றும் இந்தியாவில் உள்ள தொழிலாளர்களும் தங்கள் நிலைமைக்கு பொருந்தும் வகையில் கொண்டாடி உலகின் பிற பகுதிகளில் உள்ள தொழிலாளர்களுடன் ஒத்துழைக்க விரும்புவதை தெரி விக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் வருங்காலத்தில் முழு வளர்ச்சியுற்று இந்நாட்டில் துன்புறுகின்ற தொழிலாளர்களுக்கு ஆற்றலைத்தரும் ஆதார மாக தொழிலாளர்கள் திடமான அமைப்பின் அடித்தளத்தை நிறுவ வேண்டுமென்றும் அவர்கள் ஒரு வர்க்கத்தை சேர்ந்த வர்கள் என்பதை உணர்த்த வேண்டுமென்றும் குறிப்பிட்டுள் ளார். தொழிலாளர்கள் சுயராஜ்யத்தை தமது இலக்காககொள்ள  வேண்டும். அந்த சுயராஜ்ஜியத்தை அவர்கள் பெற்றால் ஒழிய அவர்கள் நிலைமை திருந்தாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

புதிய கட்சி துவங்கப்படுவது குறித்து அன்றைய ‘மெட்ராஸ்  மெயில்’ ஏடு விமர்சனம் செய்துள்ளது. அதை குறிப்பிட்டு பதி லளித்த சிங்காரவேலர் உண்மையான தொழிலாளர்களே மே தினத்தை கொண்டாடுகிறார்கள். எனவே பீதி கொள்ளக்  காரணம் எதுவும் இல்லை. இந்தக் கட்சி பொது நோக்கத் திற்காக தொழிலாளர்கள் ஒன்று கூடுவதை குறிக்கோளாகக் கொண்டது. தேசிய பரிணாம வளர்ச்சிப் போக்கில் தொழிலாளர்  உலகம் மாபெரும் போராட்டத்திற்கு பிறகு இறுதி அதிகாரம் செலுத்தும் என சிங்கார வேலர் பேசியதாக இந்து ஏடு குறிப்பிடுகிறது.  இந்துஸ்தான் தொழிலாளர் விவசாயிகள் கட்சியில் செயல்திட்டத்தில் சிங்காரவேலர் மற்றும் வேலாயுதம் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். சிங்காரவேலர் பெயருக்கு  பின்பு இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் என்றும், வேலாயுதம் பெயருக்கு பின்பு இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முதல் மே தினம் குறித்து வேன்கார்டு தொகுதி 2 எண். 3ல்  இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக பாட்டாளி வர்க்கத்தின் விடுமுறையாக மே முதல் நாள் கொண்டாடப்பட்டது. பழுத்த இந்திய சோசலிஸ்ட்டாகிய சிங்காரவேலரின் அழைப்புக்கிணங்க சென்னையில் இரண்டு இடங்களில் திறந்தவெளியில் மே தின கொண்டாட்டங்கள் நடை பெற்றன. அரசாங்கம் முதலாளிகளை ஆதரித்து அதிகார நலக் கும்பலை பாதுகாக்கும் வரை தொழிலாளர் அமைப்புகள் உடமை பறிக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்தின் நிலையை மாற்ற  இயலாது.  உலகத் தொழிலாளர்களுடன் இணைந்து இந்திய தொழிலாளர்கள் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும். அரசாங்க அமைப்புகளுக்கெதிராக விரிவான பரப்புரை செய்ய வேண்டுமென்றும் காங்கிரசுக்குள் ஒரு  தனித்த பாட்டாளி வர்க்க கட்சியாக செயல்பட வேண்டுமென்றும் கூட்டத்தில் சிங்காரவேலர் பேசியதாக கூறப்பட்டுள்ளது.  

வீட்டு விழா

முன்னதாக, மே தினத்தன்று காலையில் தன்னுடைய வீட்டில் தொழிலாளர்களுக்கு உணவு பரிமாறியதோடு, புத்தகங் களையும் வழங்கியுள்ளார் சிங்காரவேலர். மே தினத்தை நாட்டு விழாவாக மட்டுமின்றி, வீட்டு விழாவாகவும் நடத்திய பேரா ளுமை அவர். அது மட்டுமின்றி, அவர் நடத்திய மே தின  விழாக்கள் அனைத்திலும் புத்தகங்களை தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளார். அதன்பிறகு, ஒவ்வொரு ஆண்டும் சிங்காரவேலரின் முன்முயற்சியில், சென்னையில் மே தின விழா நடைபெற்றுள் ளது. 1927 ஆம் ஆண்டு சென்னையில் 22, தென்கடற்கரைச் சாலை யில் உள்ள சிங்காரவேலரின் இல்லத்தில், தொழிலாளர் களுக்கும், தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் பிற்பகல் விருந்து நடைபெற்றுள்ளது. மாலையில், சென்னைத் தொழிலாளர் களின் மாபெரும் பேரணிக்குப் பிறகு டாக்டர் பி.வரதராஜூலு நாயுடு தலைமையில், பொதுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த மே தின விழாவில் இந்தியா முழுவதும் போராடும் தொழிலாளர் களுக்கு சென்னை தொழிலாளர்கள் தங்களது ஒருமைப்பா ட்டை தெரிவித்துக் கொள்கிறார்கள் என்ற தீர்மானத்தை சிங்கார வேலர் முன்மொழிந்துள்ளார். சென்னையில் அப்போது பர்மா  எண்ணெய் நிறுவனத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வந்தனர். அதைக் குறிப்பிட்டதோடு, மண்ணெண்ணெய் தொழிலாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தினர்களுக்கும் அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்தார். அன்று, பக்கிங்காம் ஆலையில் பணி யாற்றிய 105 சிறுவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர் களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.  1932 - 1933 ஆகிய ஆண்டுகளில் திருவல்லிக்கேணி கடற்கரை யில் நடந்த மே தின கூட்டங்களுக்கு சிங்காரவேலர் தலைமை யேற்றுள்ளார். 1933 ஆம் ஆண்டு மே தின விழாவிற்கு தந்தை  பெரியார் தலைமையேற்பதாக இருந்தது. தவிர்க்க இயலாத காரணத்தால் அவர் வர இயலாத நிலையில் சிங்காரவேலர் தலைமையுரை நிகழ்த்தினார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசும் போது கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் அராஜகவாதிகள் அல்ல,  பொருட்களை சேதப்படுத்துபவர்களோ, வீண் கலகக்காரர்களோ அல்ல, உலக பொருட்களை சரிசமமாக, சரி சமத்துவமாக விநியோகிக்க வேண்டிய பல துறைகளிலும் நுழைந்து பாடுபடுபவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

வாசியுங்கள் தோழர்களே!

அந்த உரையில் சிங்காரவேலர் முத்தாய்ப்பாக குறிப்பிட்டுள் ளது முக்கியமானது. அவர் கூறுகிறார்: ‘தோழர்களே! சம தர்மத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள். தைரியத்துடன் புத்த கங்களை வாசியுங்கள். புத்தகங்களைப் படிப்பதை யாராலும் தடுக்க முடியாது. ரோமாபுரியில் கத்தோலிய கோயிலில் பைபிளைப் பாமர மக்கள் படிக்கப்படாதென்று இரும்பு சங்கிலி யால் கட்டி, ரத்த நாய்கள் காவல் வைக்கப்பட்டிருந்தன. இன்று  காலணாவுக்கு ஆப்பிரிக்காவிலும், அமெரிக்காவிலும் இங்கும் எங்கும் உலக முழுமையும் பைபிள் கிடைக்கின்றன. பிராமண ஆதிக்கத்தில் வேதங்களைப் படிக்கும் சூத்திரனுடைய நாக்கை அறுப்பதாகவும் கேட்ட காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊத்துவ தாகவும் திட்டம் செய்தார்கள்! இன்று அந்த வேதங்களை சூத்திரர்களுக்கும் கேவலமாக பிராமணர்களால் கருதப்படும். மிலேச்சர்கள் காமஸ்காட்கா விலும் ஸைபிராவிலும், மாஸ்கோவிலும், அந்த வேதங்களைப் படித்து வியாக்கியானம் செய்கின்றார்கள். தோழர்களே படிக்க  வேண்டிய புத்தகங்களை அடக்கினால், அடக்கிய புத்த கத்தைப் பதின்மடங்கு அதிகமானவர்கள் படிக்கின்றார்கள். எம்.என்.ராய் ஒரு காலத்தில் ஒரு புத்தகம் போட்டார். அது தடுக்கப்பட்டது. ஆனால் புதுவையிலிருந்து ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இந்தியாவிற்கு அனுப்பியதாகக் கேள்வி ஞானத்தைப் பெறுவதை எந்தக் காலத்திலும யாராலும் தடுக்க  முடியாதென அறிக. தோழர்களே சமதர்மம் ஒன்றால்தான் உலகம் உய்யும்; அதனை விளங்குமாறு நீங்கள் கற்குமாறு வேண்டிக் கொள்கின்றேன்.

 1933 ஆம் ஆண்டு மே தினத்திற்கு சில நாட்கள் முன்பு அவரது  வீடு போலீசாரால் சோதனையிடப்பட்டது. இதுகுறித்து தன்னு டைய தலைமையுரையில் குறிப்பிட்ட சிங்காரவேலர், கம்யூனிஸ்டுகளை கண்டு அரசாங்கம் அஞ்சுகிறது. அதனால் தான் அதிகாரிகள் தன்னுடைய வீட்டை அடிக்கடி சோதனையிடு கிறார்கள். மேலும் உழைக்கும் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் திறம் கம்யூனிசத் தத்துவத்திற்கு மட்டுமே உண்டு  என்றும் அவர் தீர்க்கமாக எடுத்துரைத்துள்ளார். சிங்காரவேலர் முதன்முதலாக மே தினத்தை கொண்டாடிய இடத்தில்தான் 1956 ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சிக்காலத்தில் உழைப்பாளர் சிலை நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதார நூல்கள்: ம.சிங்கார வேலரின் சிந்தனை களஞ்சியம்-தொகுதி II
தொகுப்பாசிரியர்கள்: பா.வீரமணி முத்து குணசேகரன்
சிந்தனை சிற்பி சிங்காரவேலர், வாழ்வும், சிந்தனையும், கே.முருகேசன்,  சி.எஸ்.சுப்பிரமணியம்