articles

செயலால் தாங்கிடு! - கோவி.பால.முருகு

பாரதிப் பாடலைப் பாடிடு - அவன்
    பாட்டின் சுவையை நாடிடு! 
 பாரத விடுதலைப் பேசிடு - அவன்
    பாட்டால் வெற்றிப் போரிடு! 

ஓடிவி ளையாடச் சொன்னான்-நீ
    ஓதா திருக்காதே என்றான்!
கூடி மகிழ்ந்திடச் சொன்னான் -அதில்
    குவலய வேற்றுமை வென்றான்!

பூனை பாட்டைப் பாடினான்-நாட்டில்
    பூணும் ஒற்றுமை நாடினான்!
தேன்சுவைத் ததும்பப் பாடினான்-அதில்
    தேள்போல் பகையதைச் சாடினான்!

அன்பே சிவமெனப் பாடினான் -வீணில்
    ஆயிரம் தெய்வம் சாடினான்!
துன்புறும் அடிமைப் போக்கினான்-விடுதலைத்
    தூணினை நாட்டில் ஆக்கினான்!

இயற்கை தன்னை நேசித்தான்-அதை
    இனிய பாடலால் பூசித்தான்!
செயற்கை சாதியை வெறுத்தான்-அதைச்
    சேராது இருக்க உரைத்தான்! 

எண்ணருங் கனவுகள் தாங்கினான்-இந்தியா
    ஏற்றம் பெற்றிட ஏங்கினான்!
கண்ட  கனவுகள்  ஓங்கிட-நீ
    காட்டிடு செயலால் தாங்கிட!