articles

img

நீரவ் மோடி, விஜய் மல்லையாவுக்காக விதிகளை மாற்றியுள்ளதா - ராகவேந்திர ராவ்

கடனை வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாதவர்களுடன் வங்கி நிர்வாகங்கள் சமரச முயற்சியை மேற்கொள்ளும் வாய்ப்பை ஆர்பிஐ அளிக்கக் கூடாது. மாறாக, கடன் மோசடியாளர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

வங்கிக் கடனை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்கள் மற்றும் கடன் மோச டியில் ஈடுபட்டவர்கள், தங்களின் கடன் நிலுவைத் தொகையை திரும்ப செலுத்த வழிவகை செய்யும் இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) சமீபத்திய அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. “சமரச தீர்வு மற்றும் தொழில்நுட்ப ரீதியான கடன் தள்ளுபடிக்கான நடவடிக்கை” (Framework for Compromise settlements and Technical Write  -offs) என்ற தலைப்பில் இந்திய ரிசர்வ் வங்கி கடந்த  8 ஆம் தேதி அறிவிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “வங்கிக் கடன்களை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்கள் மற்றும் கடன் மோசடி களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பாரபட்சமற்ற குற்ற வியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடன் நிலுவைத் தொகையை திரும்பப் பெறுவது தொடர்பாக, சமரசத் தீர்வையும் வங்கிகள் காணலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 மாதங்களுக்குப் பின்  புதிய கடன்

அத்துடன், ஆர்பிஐயின் இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர் அல்லது மோசடியில் ஈடுபட்ட நிறு வனம், வங்கி உடன் சமரச தீர்வு ஏற்படுத்திக் கொண்ட தேதியில் இருந்து 12 மாதங்களுக்கு பிறகு மீண்டும் புதிதாக கடன் பெறலாம். ஆர்பிஐயின் இந்த அறிவிக்கை, இதுதொடர்பாக ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்த அறிவிக்கையில் இருந்து முரண்பட்டு இருப்பது பல்வேறு கேள்வி களை எழுப்பி உள்ளது. வங்கிக் கடன்களை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதோர், வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட வர்கள் ஆகியோருடன் வங்கிகளின் நிர்வாகம் எவ்வித சமரச முயற்சியிலும் இறங்காது என்று 2019 ஜூன் 7அன்று வெளியிட்டிருந்த அறிக்கையில் ஆர்பிஐ தெளிவுபடுத்தி இருந்தது.

2022 மார்ச் மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட தகவலின்படி, ‘வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாத 50 பெரிய கடனாளிக ளிடம் இருந்து வங்கிகளுக்கு மொத்தம் 92 ஆயிரத்து 570 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வர வேண்டி யுள்ளது. இவற்றில் மெகுல் சோக்சியின் நிறுவன வங்கிக் கடன் நிலுவைத் தொகை மட்டும் 7,848 கோடி ரூபாய்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி, 2022 டிசம்பர் வரை, வங்கிக் கடனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்கள் தொடர்பாக மட்டும் நாட்டில் மொத்தம் 15, 778 வங்கிக் கணக்குகள் இருந்தன. இந்த கணக்குகளின் மொத்த கடன் தொகை மதிப்பு 3 லட்சத்து 40 ஆயிரத்து 570 கோடி ரூபாய் என்று மதிப் பிடப்பட்டிருந்தது. இவற்றில் 85 சதவீதம் அளவிலான கடன்கள் எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளை சேர்ந்தவை.

விதிமுறைகளில்  திடீர் மாற்றம் ஏன்?

ஆர்பிஐயின் இந்த நடவடிக்கையை வைத்து ஒன்றிய பாஜக அரசை காங்கிரஸ் கடுமையாகச் சாடியுள்ளது. “வங்கிக் கடனை திட்டமிட்டு திரும்பச் செலுத்தாத வர்கள் மற்றும் மோசடியாளர்கள் குறித்த விதிமுறை கள் திடீரென தற்போது ஏன் மாற்றப்பட்டுள்ளன என்பது குறித்து ஆர்பிஐ உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ், அண்மையில் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில் வலியுறுத்தியிருந்தார். “கடன் மோசடியாளர்கள் தொடர்பான ஆர்பிஐ யின் விதிமுறை மாற்றம், வங்கிகள் மீதான பொது மக்கள் மற்றும் வைப்புத்தொகை செலுத்துவோரின் நம்பிக்கையை சீர்குலைத்து விடும் என்று அனைத் திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் கவலை தெரிவித்தி ருந்தன” என்றும் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார்.

மேலும், “விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர், சிறு, குறு தொழில் முனைவோர் போன்ற வங்கிக் கடனை  நேர்மையாக திரும்பச் செலுத்துவோர், மாதந்தோறும் செலுத்த வேண்டிய கடன் தொகையால் (இஎம்ஐ) நிதிச் சுமைக்கு ஆளாக நேர்ந்தால், அந்த சுமையை குறைக்கும் விதத்தில் அவர்களுக்கு ஒருபோதும் இது போன்ற சமரச வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. ஆனால், பணக்கார முதலாளிகளான நீரவ் மோடி. மெகுல் சோக்சி, விஜய் மல்லையா போன்ற மோசடி யாளர்களுக்கு சமரச தீர்வை ஆர்பிஐ தற்போது வழங்கி உள்ளது” என்றும் ஜெய்ராம் ரமேஷ் அண்மை யில் வெளியிட்டிருந்த அறிக்கையில் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். அத்துடன், “வங்கிக் கடன் மோசடியாளர்களுக்கு சாதகமான இந்த முடிவை எடுக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தல்கள் மற்றும் எச்சரிக்கைகளை மீறி, தற்போது இந்த அறிவிப்பை வெளியிட என்ன காரணம் என்பதை ஆர்பிஐ விளக்க வேண்டும். இந்த நடவ டிக்கையை எடுக்குமாறு பிரதமர் மோடி தலைமையி லான ஒன்றிய பாஜக அரசு ஏதேனும் அழுத்தம் கொடுத்ததா? என்பது குறித்தும் ஆர்பிஐ விளக்க மளிக்க வேண்டும்” என்றும் ஜெய்ராம் ரமேஷ் வலி யுறுத்தி இருந்தார்.

மோசடியாளர்களின் தவறுகளை மன்னிப்பதாகிடும்

வங்கிக் கடன் மோசடியாளர்களுக்கு சமரச தீர்வு எனும் வாய்ப்பை வழங்கும் ஆர்பிஐயின் நடவடிக்கை க்கு அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆறு லட்சம் வங்கிப் பணியாளர்களின் ஒட்டுமொத்த குரலாக, தங்களது கண்டனத்தை இவ்விரு சங்கங்களும் ஒலித்துள்ளன. ஆர்பிஐயின் இந்த நடவடிக்கை, வங்கிக் கடனை வாங்கிக் கொண்டு நேர்மையற்ற முறையில் செயல் படுவோருக்கு வெகுமதி அளிப்பது போல் அமைந்து விடும். அதுமட்டுமின்றி, ஒழுங்காக கடனை திருப்பிச் செலுத்துபவர்களுக்கும் தவறான செய்தியை உணர்த்துவதாகிவிடும் என்று இரு வங்கிப் பணியா ளர்கள் அமைப்புகளும் சுட்டிக்காட்டி உள்ளன.

கடன் மோசடியாளர்களை சமரசத் தீர்வுக்கு அனு மதிப்பதன் மூலம், அவர்களின் தவறுகளை ஆர்பிஐ மன்னிப்பதுடன், அவர்களால் ஏற்படும் நிதிச் சுமையை சாதாரண குடிமக்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் சுமக்க கூடும் எனவும் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும், வங்கிக் கடனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு ஆர்பிஐ காட்டும் இந்த கருணை, வங்கிகளின் நிதி நிலைமை மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது எனவும் இந்தச் சங்கம் எச்சரித்துள்ளது. ஆர்பிஐயின் இந்த நடவடிக்கை தேர்ந்தெடுக்கப் பட்ட சிலருக்கு பயனளிக்கும் முயற்சி என்று விமர்சித் துள்ளார் பொருளாதார நிபுணரும், ஜேஎன்யு பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான அருண் குமார்.

விவசாயிகளுக்கு இத்தகைய வாய்ப்பு தரப்படவில்லை

“விவசாயிகள் வங்கிக் கடனை திரும்பச் செலுத்த முடியாதபோது அவர்களுக்கு இதுபோன்ற சமரச வாய்ப்பு தரப்படுவதில்லை. இப்படியொரு வாய்ப்பை தருவது சரியான அணுகுமுறையாகத் தெரிய வில்லை” என்றார் அவர். தாங்கள் வாங்கிய கடனை முறையாக திரும்பச் செலுத்தி வந்த நிலையில், பொருளாதார மந்த நிலை யின் காரணமாக, கடனைத் திருப்பிச் செலுத்துவதில் உண்மையில் சிக்கலை சந்திக்கும் நிறுவனங்களுக்கு வேண்டுமானால் இதுபோன்ற வாய்ப்பு அளிக்கப்பட லாம். ஆனால், கடனை வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாதவர்களுடன் வங்கி நிர்வாகங்கள் சமரச முயற்சியை மேற்கொள்ளும் வாய்ப்பை ஆர்பிஐ  அளிக்கக் கூடாது. மாறாக, கடன் மோசடியாளர்கள் மீது  கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையெனில், வங்கிக் கடன் வாங்குவோர் மத்தியில் சமரசத் தீர்வு எண்ணம் வளர்ந்து கொண்டே தான் போகும் என்கிறார் பேராசிரி யர் அருண் குமார்.

வங்கியில் வாங்கிய கடனை வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாதவர்கள் பெரும்பாலும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாக உள்ளனர். மேலும் தொழி லதிபர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இடையே யான பரஸ்பர உறவால் இந்தியாவில் ‘க்ரோனி கேப்பிடலிசம்’ வளர்ந்துள்ளது. இவற்றின் விளைவாக வங்கிகளின் வராக்கடன் அதிகரித்து, ஒரு கட்டத்தில் கடன் கொடுக்க முடியாத சூழலுக்கு வங்கிகள் தள்ளப்படுகின்றன. இது வங்கிகளின் வணிக சூழலை பாதிப்பதுடன், நாட்டின் பொருளாதாரத்தில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கிறார் அவர். அதேநேரம், சிக்கலில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு பயனளிக்கும் விதத்தில் ஆர்பிஐ இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிகிறது எனக் கூறும் அருண் குமார், அடுத்த பொதுத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

நன்றி : பிபிசி தமிழ் கட்டுரை