articles

img

நீதியும், சட்டமும் பணம் படைத்தவருக்கு மட்டுமா? - இரா.வேல்முருகன்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக மான அளவில் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. அதாவது 8 ஆயிரத்திற்கும் மேற் பட்ட ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழக அரசாங்கம் உடனடியாக இந்த ஆக்கிரமிப்புகளை எல்லாம் அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறுகிறது. இந்த தீர்ப்பு நீதியானதா? அநீதி யானதா? நீதிமன்றம் என்பதாலேயே அவர்கள் சொல்லும் அனைத்தையும் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு அமல்படுத்த முடியுமா? தமிழகத்தில் உள்ளது போல் விவசாய தேவைக் காக ஏரி அமைப்பு  முறை வேறு எங்காவது உள்ளதா?  இந்தியாவிலேயே தமிழகம் போன்று நகர்மயமாதல் அதிகமாக உள்ளதா? விவசாயமே இல்லாத எந்த பயன்பாட்டுக்கும் இல்லாத ஏரியை வைத்துக் கொண்டு  என்ன செய்வது? சரி அவர்களின் வாதத்திற்கே வந்தாலும் சுமார் 30 லட்சம் குடியிருப்புகளை தகர்த் தெறிந்துவிட்டு குப்பைகளை போல் எல்லோரையும் நகரத்திற்கு வெளியே கொண்டு கொட்ட முடியுமா? குடியிருப்புகளை அகற்றிய பகுதிகளில் மீண்டும் நீர்ப் பிடிப்புகளை உருவாக்கிட முடியுமா? சாதாரண குடி மக்களை ஆக்கிரமிப்பு என அகற்றத் துடிக்கும் நீதிமன்றமும், அரசும் ஏன் தங்களது ஆக்கிரமிப்புக ளையும், பணம் படைத்தவர்களின் ஆக்கிரமிப்புகளை யும் கண்டுகொள்ளாமல் உள்ளது. தலை காய்ந்த மக்க ளுக்கு மட்டும் மின்சாரம், குடிநீர் போன்றவற்றை நிறுத்திவிட்டு கறார்த் தன்மையோடு காவல்துறை யின் அடக்குமுறை அத்துமீறலோடு காட்டுமிராண்டித் தனமாக வெளியேற்றுகிறது.

நீதிமன்றமும், தமிழக அரசும் மேற்கண்ட கேள்வி களை எல்லாம் நிதானமாக சார்புத் தன்மை இல்லா மல் மனிதாபிமான அடிப்படையில் ஆராய்ந்து விடை தேடினால் ஒரு வீட்டையும் இடிக்க மனம் வராது. மாறாக, அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புகளை எல்லாம் ஒழுங்குபடுத்திடவே தோன்றும். ஆனால் நீதி மன்றமும் அரசும் அத்தகைய தன்மையோடு இதை அணுகினார்களா என்பதுதான் முதல் கேள்வி? தமிழக அரசின் கீழ் செயல்படக் கூடிய தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரியம் (தற்போது தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுக்கழகம்) தனது நூற்றுக்க ணக்கான திட்டங்களை ஏரியில் தான் அமலாக்கி உள்ளது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் போடப் பட்ட ஆயிரக்கணக்கான குடியிருப்பு மனைகள் ஏரியில் தான் உள்ளன. தமிழக அரசின் அலுவலகங்கள், மதுரை உயர்நீதிமன்ற கட்டிடம், விழுப்புரம் நீதிமன்ற கட்டிடம், மாநிலம் முழுவதும் உள்ள புதிய பேருந்து  நிலையங்கள், ஒருங்கிணைந்த திட்ட வளாகங்கள், நீதிமன்ற வளாகங்கள் அனைத்துமே ஏரியை துருத்திக் கொண்டுதானே இருக்கிறது.

தனியார் கல்வி நிறுவனங்கள், பெரிய பெரிய மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், தனியார் பல்கலைக் கழகங்கள் எங்குள்ளன? ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியும் மருத்துவமனையும் போரூர் ஏரியை ஆக்கிரமித்துதானே உள்ளது. எஸ்ஆர்எம் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ராமா புரம் ஏரியில்தானே உள்ளது. எஸ்ஆர்எம் நிகர்நிலை பல்கலைக்கழகம் பொத்தேரியை ஆக்கிரமித்துதானே உள்ளது. சாஸ்தா பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும் என தீர்ப்பு வழங்கியும் அரசு அந்தப் பக்கம் எட்டிக் கூட  பார்க்கவில்லையே. தாம்பரம் நேஷனல் பள்ளி முழுவதும் ஏரியில் தானே உள்ளது. சென்னை அடையாறில் உள்ள போட் கிளப் முழுவதும் நீர்ப்பிடிப்புதானே. சென்னை வள்ளுவர் கோட்டம் ஏரியில்தானே கட்டப்பட்டது. சென்னை அண்ணாநகரில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி களின் குடியிருப்புக்கள் ஏரியில்தானே உள்ளன. வசதி படைத்தவர்களும் அரசும் ஏரிகளை ஆக்கிரமிப்பதை நீதிமன்றமும் அரசாங்கமும் கண்டுகொள்ளாமல் தலைகாய்ந்தவர்களை துடிக்கத் துடிக்க அடித்து விரட்டி வீடுகளை இடிப்பது நீதிதானா?இப்படி ஆயிரம் கேள்வி உள்ளது. நீதிமன்றம் இவைகளைப் பற்றியெல் லாம் ஆழமாக விவாதிக்காமல் ஆக்கிரமிப்பு என பொது நலவழக்கு போட்டவுடன், அதில் சம்பந்தப்பட்ட குடி யிருப்புகளுக்கு சம்மனை கூட அனுப்பாமல் ஒருதலைப் பட்சமாக தீர்ப்பு வழங்குவது நியாயம்தானா?

ஏரியின் நோக்கமே விவசாயத் தேவைக்கு நீரை சேமித்து வைத்து பயன்படுத்துவதுதான். தமிழகத்தில் மற்ற மாநிலங்களைப் போல அணை கட்ட முடி யாது. ஏனென்றால் ஆறு இரண்டு மலைகளுக்கு ஊடாக வரும்போதுதான் அணை கட்டினால் தண்ணீர் கரைபுரளாது. ஆனால் தமிழகத்தில் அத்தகைய நிலப் பரப்பு கிடையாது. எனவே, விவசாயத்தின் தேவைக் காகவும் கால்நடைகளின் நீர்த் தேவைக்காகவும்தான் ஏரி உருவாக்கப்பட்டது. ஆனால், தற்போது நகர்மயமாதல் அதிகமானதால் தமிழக மக்கள் தொகையில் பெரும்பகுதியினர் அதா வது 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் நகரங்களை நோக்கி புலம்பெயர்ந்து வந்துவிட்டனர். இதுமட்டும் அல்லாமல் வட மாநிலங்களிலிருந்து தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்தவண்ணம் உள்ளனர்.திட்டமிடப்படாத நகர அமைப்பு உள்ளதால், மக்கள் வாய்ப்புள்ள இடங்களில் (எங்கு மலிவாக இடம் கிடைக்கிறதோ) குடியேறுகின்றனர். இதில் ஒரு இடம் கூட மக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இடம் கிடையாது. அந்தந்த ஆட்சிக் காலத்தில் அந்தந்த ஆளும் கட்சியி னரால் விற்கப்பட்டவைதான்.

இதற்கு ஆளும் கட்சியும் அதிகாரிகளும் உடந்தை யாக இருந்துதான் எல்லாம் நடந்தது. 

ஆக்கிரமிப்பு என புல்டோசர்களை கொண்டுவந்து இடிக்க முயலும் அனைத்துப் பகுதிகளும் மக்கள் மூன்று நான்கு தலைமுறையாக வாழ்ந்து வரும் பகுதிகளா கும். இதில் குடிசை மாற்றுவாரிய இடங்கள் உள்ளன. மேய்க்கால் வகை உள்ளது. நத்தம் வகை உள்ளது. பல்வேறு வகையினங்களில் உள்ளன. இங்குள்ள மக்க ளுக்கு ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, மின் இணைப்பு,  குடிநீர் இணைப்பு கொடுத்து, தரமான தார்ச்சாலை கள், பாதாளச் சாக்கடைகள், மழைநீர்க் கால்வாய்கள் அமைத்து, சொத்து வரி, குடிநீர் வரி வசூல் செய்யப் படுகிறது. பள்ளமாகக் கிடந்த பகுதிகளை மக்கள் மேம்படுத்தி வாழத் தொடங்கியதும், சில நூறு கோடி களை அரசும் செலவிட்டுள்ளது. இப்படி தலைமுறை தலைமுறையாக குருவி சேமிப்பது போல் சேமித்து வைத்த எங்கள் வாழ்நாள் சேமிப்பை தகர்த்து, எங்களை குப்பைகளை போல எங்கோ கொட்டுவது நீதி யாகுமா?

நகர்ப்புறத்தில் விவசாய நிலம் இல்லை, கால்நடை கள் இல்லை. எதுவும் இல்லை. இந்தப் பகுதியில் ஏரியின் நீரை எதற்கு பயன்படுத்துவீர்கள் என்ற கேள்வி இயற்கையானதுதானே? ஏரிக்கு மூன்று முக்கியப் பகுதிகள் உண்டு 1. நீர்வரத்துக் கால்வாய், 2. நீர்பிடிப்புப் பகுதி 3. நீர் பயன்பாட்டுப் பகுதி அதாவது விவசாய நிலம். இன்றைக்கு இவை எதுவும் தற்போது இல்லை. அதுமட்டுமல்லாமல் நீர்வரத்துக் கால்வாய்ப் பகுதிகள் அனைத்துமே கட்டிடங்களாக உள்ளன. அதே போல் பயன்பாட்டுப் பகுதியான விவசாயப் பகுதி எதுவும் இல்லை. அப்படி என்றால் சேமித்து வைத்த நீரை என்ன செய்யப் போகிறீர்கள். சென்னை போன்ற பெருநகரங்களில் இப்படி பயன்படாமல் உள்ள  ஏரிகளை, நீர் நிலைகளை மக்களின் குடியிருப்புக ளுக்கு கொடுப்பதுதானே இன்றைய நகர்மயமாதல் சூழலுக்கு சரியானதாக இருக்க முடியும்.

தமிழகத்தில் சுமார் 30 லட்சம் குடியிருப்புகளை ஒரு கோடிக்கும் அதிகமான மக்களை ஏதோ குப்பை களை கொட்டுவதைப் போல கொட்டி விட முடியாது? ஏரிகளை மீட்கிறோம் என்று சென்னை உள்பட தமிழ கம் முழுவதும் உள்ள மக்களை பெயர்த்தெடுத்து விட்டு, மீண்டும் அந்தப் பகுதியில் ஏரியை உருவாக்க முடியாது. அப்படி உருவாக்க வாய்ப்பே இல்லை. அப்படி என்றால் இந்த ஏழை மக்களை அகற்றிவிட்டு அந்த இடங்களை என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு உங்களிடம் விடை உண்டா?  

தமிழக அரசு  செய்ய வேண்டியது என்ன?

1. தமிழகத்தில் நீண்ட காலமாக பயன்பாடில்லாத நீர்நிலைகள் உள்ளிட்ட அனைத்து வகை அரசு புறம் போக்கு நிலங்களில் வசிக்கும் சுமார் 30 லட்சம் மக்க ளுக்கு வகைமாற்றி பட்டா வழங்கிட சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

 2. மாநில அரசுக்கு எந்த வகையான நிலங்களாக இருந்தாலும் வகை மாற்றி பட்டா கொடுக்க உரிமை உண்டு என்பதை கறாராக நீதிமன்றத்தில் வாதிட வேண்டும். அதைவிடுத்து நீதிமன்றம் சொன்னது என புல்டோசர்களை கொண்டு வந்தால் அதற்கு எதிராக லட்சக்கணக்கான மக்கள் ஆக்ரோஷமாக வரு வார்கள்.

3. பொதுநலன் என்ற பெயரில் தமிழகத்தில் சில ரியல் எஸ்டேட் மாஃபியாக்களின் அடியாட்கள் புனை  பெயரில் நல்லவர்களைப்போல் வழக்குகளை போடு கின்றனர். அவர்களுக்கு பின்னால் உள்ள புரோக்கர் வேலையை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்.

கட்டுரையாளர்: தென் சென்னை மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்)