“கம்யூனிசம் எனும் பூதம் ஐரோப்பாவை ஆட்டிப்படைத்து கொண்டுள்ளது” எனும் வாசகங்களுடன் கம்யூனிஸ்ட் அறிக்கை தொடங்குகிறது. 21.02.2023 அன்று கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிட்ட 175ஆவது ஆண்டு. 175 ஆண்டு களுக்கு பின்னரும் முதலாளித்துவத்தை “கம்யூனிசம் எனும் பூதம்” பயமுறுத்தி கொண்டுதான் உள்ளது. கடந்த 02.02.2023 அன்று அமெரிக்க நாடாளு மன்றம் சோசலிசத்தை அனைத்து வடிவங்களிலும் நிராகரிப்பதாகவும் அமெரிக்காவில் சோசலிசக் கொள்கைகளை அமலாக்குவதை முற்றிலும் எதிர்ப்ப தாகவும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 328 பேரும் எதிர்த்து 86 பேரும் வாக்களித்தனர். 14 பேர் நடுநிலை வகித்தனர். சோசலிசத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏன் அமெரிக்க நாடாளு மன்றத்துக்கு ஏற்பட்டது? ஏனெனில் அமெரிக்க மக்களிடையே குறிப்பாக இளைய தலைமுறையி னரிடம் சோசலிசத்துக்கு ஆதரவான கருத்தோட்டம் அதிகரித்துள்ளது. “கம்யூனிச பூதம்” அமெரிக்கா மற்றும் ஏனைய முதலாளித்துவ ஆதரவாளர்களின் தூக்கத்தை 175 ஆண்டுகளுக்கு பின்னரும் கெடுத்துக் கொண்டுள்ளது.
பெரியாரின் பெருமை
1847ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் லீக் எனும் அமைப்பு கம்யூனிஸ்ட் கட்சிக்கான ஒரு வேலைத் திட்டத்தை உருவாக்கித் தருமாறு மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சை பணித்தது. இதன் அடிப்படையில் ஏங்கெல்ஸ் “நம்பிக்கை குறித்த ஒரு கம்யூனிஸ்டின் ஒப்புதல் வாக்குமூலம்” எனும் ஆவணத்தையும் பின்னர் “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” எனும் ஒரு ஆவணத்தையும் கேள்வி - பதில் வடிவில் உருவாக்கி னார். எனினும் கூடுதல் கூர்மையுடன் இந்த கோட்பாடு இருக்க வேண்டும் என ஏங்கெல்ஸ் கருதினார். எனவே இந்த கோட்பாடுகளை உருவாக்கும் பொறுப்பு காரல் மார்க்சிடம் சென்றடைந்தது. ஏங்கெல்சின் அடிப்படை உள்ளடக்கங்களும் மார்க்சின் மகத்தான தத்துவம்/ அரசியல்/பொருளாதாரம்/இலக்கிய அழகியல் ஆகிய கோட்பாடுகள் அடங்கிய கை வண்ணமும் இணைந்து 1848ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெர்மானிய மொழியில் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்டது. ஒரு இடைவெளிக்கு பின்னர் 1870களுக்கு பிறகு இந்த அறிக்கை ஏராளமான மொழிகளில் வெளி யிடப்பட்டது. பைபிளுக்கும் குர் ஆனுக்கும் அடுத்த படியாக மிக அதிக மொழிகளில் அதிக எண்ணிக்கை யில் வெளியிடப்பட்ட ஆவணம் கம்யூனிஸ்ட் அறிக்கைதான்! நவம்பர் புரட்சிக்கு முன்பே 35 ஐரோப் பிய மொழிகளில் 544 முறை இந்த மகத்தான ஆவணம் வெளியிடப்பட்டது. நவம்பர் புரட்சிக்கு பின்பு இந்த எண்ணிக்கை கணக்கில் அடங்காது.
விடுதலைக்கு முன்பே இந்தியாவில் அனேகமாக அனைத்து முக்கிய மொழிகளிலும் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்டது. 1930ஆம் ஆண்டு தமிழில் இதனை முதலில் சமதர்ம அறிக்கை எனும் பெயரில் வெளியிட்ட பெருமை தந்தை பெரியாரை சாரும். பின்னர் இஸ்மத் பாஷாவும் தமிழில் மொழி பெயர்த்தார். 175 ஆண்டுகளுக்கு பின்னரும் உலகம் முழுவதும் உள்ள உழைப்பாளிகளுக்கும் முற்போக்காளர்களுக்கும் கலங்கரை விளக்கம் போல வழிகாட்டியாக உத்வேகம் ஊட்டக்கூடியதாக இந்த மகத்தான ஆவணம் விளங்குகிறது எனில் மிகை அல்ல.
அசமத்துவம் பற்றி அறிக்கை அன்றே எச்சரித்தது
முதலாளித்துவம் “…..உற்பத்திசாதனங்களை ஒரு சிலரிடத்தில் மையப்படுத்துகிறது. (அதன் விளை வாக) சொத்துக்களும் அபரிமிதமாக ஒரு சிலரின் கைகளில் குவிகிறது” என அறிக்கை குறிப்பிடுகிறது. இது எவ்வளவு பெரிய உண்மை என்பதை இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்பட்ட ஆக்ஸ்பாம் அறிக்கையின் கீழ்க்கண்ட தரவுகள் வெளிப்படுத்து கின்றன. கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து உலகம் முழு வதும் உருவான புதிய சொத்துக்களில் 67 சதவீதத்தை பணக்கார 1சதவீதம் பேர் வளைத்துக் கொண்டுள்ளனர். மீதமுள்ள 99 சதவீதம் பேர் பெற்றது வெறும் 33சதவீதம்தான்! கீழ்மட்டத்தில் 90 சதவீதம் ஆக உள்ள உழைப்பாளிகள் ஈட்டிய ஒவ்வொரு டாலருக்கும் இணையாக பில்லியனர்கள் 17,00,000 டாலர்கள் வருமானம் ஈட்டியுள்ளனர். '
உலகின் முதல் நிலை செல்வந்தர் எலான் மஸ்க் 3சதவீத வரி கட்டுகிறார். ஆனால் உகாண்டாவில் வாழும் அபேர் கிரிஸ்டைன் எனும் சாதாரண கோதுமை மாவு வியாபாரி 40சதவீத வரி கட்டுகிறார். உலக அளவில் மிகப்பெரிய 26 பில்லியனர்களின் சொத்து, கீழ்மட்ட 380 கோடி பேரின் சொத்துக்கு சமமாக உள்ளது. உலக செல்வந்தர்கள் மீது ஆண்டுக்கு வெறும் 5சதவீத சொத்து வரி போட்டால் 1.7 டிரில்லியன் டாலர்க ளை (ரூ. 1,44,50,000 கோடிகள்) அரசுகள் பெறும். இதன் மூலம் உலகில் உள்ள 200 கோடி ஏழை மக்களின் வறுமையை போக்க முடியும். அடுத்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பசி யின்மையை ஒழிக்கலாம். சூழலியல் ஆபத்துகளால் பாதிக்கப்பட்ட ஏழை தேசங்களின் துன்பங்களை அகற்ற முடியும். ஏழை தேசங்களில் வாழும் கோடிக்க ணக்கான மக்களுக்கு மருத்துவ பாதுகாப்பும் சமூக பாதுகாப்பும் அளிக்க முடியும்.
இந்தியாவில் அசமத்துவம்
இத்தகைய அசமத்துவ நிலைதான் இந்தியா விலும் உருவாகியுள்ளது. 1சதவீத முதல் நிலை செல்வந்தர்களிடம் 40.6 சதவீத சொத்து உள்ளது. ஆனால் அடிமட்ட 50சதவீத மக்களிடம் 3சதவீத சொத்துதான் உள்ளது. இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் சொத்து ரூ. 54.12 லட்சம் கோடியாகவும் முதல் 10 பணக் காரர்களின் சொத்து 27.52 கோடியாகவும் உள்ளது. அதே சமயத்தில் சுமார் 22 கோடி இந்தியர்கள் பரம ஏழைகளாக அதாவது ஒரு நாளைக்கு 2 டாலருக்கும் (ரூ. 170) குறைவாகவே வருமானம் ஈட்ட முடிகிறது. முதல் 11 பணக்காரர்கள் சென்ற ஒரு ஆண்டு மட்டும் ஈட்டிய வருமானத்தை கொண்டு 100 நாள் வேலைத் திட்டத்தை நாடு முழுவதும் 10 ஆண்டுக ளுக்கு செயல்படுத்த முடியும்.
மையப்படுத்தும் சர்வாதிகாரம்
செல்வம் ஒரு சிலரிடத்தில் குவிமையமாக உருவா வதன் விளைவாக அரசியலும் சர்வாதிகார முறையில் மையப்படுத்தப்படுகிறது என்கிறது கம்யூனிஸ்ட் அறிக்கை. “சுயேச்சையாக தமது தனிப்பட்ட நலன்கள், சட்டம், வரிவிதிப்பு முறைகள் அரசு நிர்வாக முறைகள் என இயங்கும் பல பகுதிகளை ஒன்றிணைக்க நிர் பந்தித்து ஒரே தேசம்/ஒரே வரி/ஒரே அரசாங்கம்/ஒரே எல்லை/ ஒரே சுங்க வரி என சர்வாதிகார முறையில் அதிகாரங்களை முதலாளித்துவம் மையப்படுத்து கிறது” உற்பத்தி சாதனங்கள் ஒரு சிலரிடம் குவிந்தால் எத்தகைய பொருளாதார அசமத்துவமும் அரசியல் சர்வாதிகாரமும் விளையும் என்பதை கம்யூனிஸ்ட் அறிக்கை 175 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தது. அது இன்றும் நடந்து கொண்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு
முதலாளித்துவம் உற்பத்திக் கருவிகளில் இடை விடாத மாற்றங்களை ஏன் செய்கிறது? அறிக்கை கூறுகிறது: “உற்பத்திக் கருவிகளையும் அதன் மூலம் உற்பத்தி உறவுகளையும் அதனுடன் ஒட்டு மொத்த சமுதாய உறவுகளையும் இடையறாது புரட்சிகரமாக மாற்றி அமைத்திடாமல் முதலாளித்துவம் உயிர்வாழ முடியாது.” உற்பத்திக் கருவிகளில் (அதாவது தொழில் நுட்பத்தில்) ஏன் இடையறாத மாற்றங்களை முத லாளித்துவம் அரங்கேற்றிக் கொண்டே இருக்கிறது? ஏன் அது முதலாளித்துவத்திற்கு வாழ்வா-சாவா போராட்டமாக உள்ளது? முதலாளிகள் தமக்கி டையே உள்ள போட்டியில் இலாபக் கொள்ளையில் முன்நிற்க சந்தை முழுவதையும் தன் நுகத்தடியின் கீழ் கொண்டு வர முனைகின்றனர். இதற்கு உற்பத்திக் கருவிகளில் இடைவிடாத மாற்றங்களை அதி வேகமாக அரங்கேற்றுவது அவசியமாகிறது.
உதாரணத்திற்கு அலைபேசியில் தொடு திரையை அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம். இதன் மூலம் அலைபேசி சந்தையில் பெரும் பகு தியை ஆப்பிள் தன்வசமாக்கியது. இதன் இன்னொரு பகுதி நோக்கியாவின் திவால் ஆகும். நோக்கியா திவால் காரணமாக எத்தனை வேலை இழப்புகள்? எவ்வளவு பணம் நட்டம்? எவ்வளவு குடும்பங்கள் பாதிப்பு? இப்படி பல உதாரணங்களை சுட்டிக் காட்ட முடியும். உற்பத்திக் கருவிகளின் தற்போதைய வளர்ச்சிக் கட்டத்தில் செயற்கை நுண்ணறிவும் ரோபோக்களும் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளன.
இந்த ரோபோக்கள் குறித்து சில விவரங்கள்:
2019ஆம் ஆண்டு 22.5 இலட்சம் ரோபோக்கள் உற்பத்தி துறையில் உள்ளதாகவும் இது 2030ஆம் ஆண்டு 200 இலட்சமாக உயரும் எனவும் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் ஃபானுக் (FANUC) எனும் ஆலை முழுதுமே ரோபோக்களால் இயங்குகிறது. ஒரு மனித உழைப்பாளி கூட இல்லை. இத்தகைய உற்பத்தி முறை லைட்ஸ் அவுட் (Lights Out) என அழைக்கப்படு கிறது. 2030ஆம் ஆண்டு ரோபோக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு காரணமாக சுமார் 80 கோடி வேலை வாய்ப்புகள் பறி போகும் என மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது. இந்தியாவில் மாருதி/மகிந்திரா போன்ற பல நிறு வனங்களில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆற்றலை இழந்த சூனியக்காரன்
இத்தகைய மாற்றங்களின் விளைவாக சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் முதலாளித்து வம் சீர்குலைவை உருவாக்குகிறது. உற்பத்தியில் தொடர்ந்து இடைவிடாத மாற்றங்கள், சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் இடைவிடாத பாதிப்பு கள், முடிவே இல்லாத நிலையற்ற தன்மை- இது முதலாளித்துவம் தொடர்ந்து அரங்கேற்றும் செயல் முறைகள் ஆகும். புதியதாக உருவானவை நிலைப்ப தற்கு முன்பே பழமையாகி மறைந்துவிடுகின்றன. முத லாளித்துவம்தான் மனிதகுலம் கண்டிராத அளவுக்கு உற்பத்திக் கருவிகளை உருவாக்குகிறது; ஆனால் அவற்றை கட்டுப்படுத்தும் அல்லது முறைப்படுத்தும் ஆற்றலை முதலாளித்துவம் இழந்துவிடுகிறது. இதனை கம்யூனிஸ்ட் அறிக்கை கீழ்க்கண்டவாறு அழகாக மிகச் சரியாகச் சித்தரிக்கிறது: “தான் வெளிக் கொண்டு வந்த தீய சக்திகளை அடக்கும் ஆற்றலை இழந்துவிட்ட சூனியக்காரன் போல முதலாளித்துவத்தின் நிலை ஆகிவிடுகிறது” முதலாளித்துவமும் நெருக்கடியும் பிரிக்க முடியாத இரட்டைப் பிறவிகள் என அறிக்கை கூறுகிறது. அது இன்றளவும் தொடர்கிறது. நெருக்கடி நிரந்தர மாக அகற்ற வேண்டுமானால் முதலாளித்துவத்தையே அகற்ற வேண்டும் எனும் பாடத்தையும் கம்யூனிஸ்ட் அறிக்கை நமக்கு போதிக்கிறது.
தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமை
தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமை பற்றி அறிக்கை குறிப்பிடுகிறது: “முதலாளி வர்க்கம் தனது சாவுக்கு வழிவகுக்கும் ஆயுதங்களை தானே வடிவமைத்து கொண்டது மட்டு மல்ல; அந்த ஆயுதங்களை தனக்கு எதிராக பயன் படுத்தும் மனிதர்களையும் அது உருவாக்கிவிடுகிறது. அந்த மனிதர்கள்தான் நவீன தொழிலாளி வர்க்கம்- பாட்டாளிகள்” முதலாளி வர்க்கம் உற்பத்திக் களத்திற்கு வரும் பொழுது தொழிலாளி வர்க்கத்தையும் அழைத்துக் கொண்டுதான் வருகிறது. ஏனெனில் தொழிலாளியின் உழைப்பு இல்லாமல் மூலப்பொருட்கள் விற்பனைப் பொருட்களாக பரிணாமம் அடையாது. தொழிலாளி வர்க்கம் இல்லாமல் இலாபக் கொள்ளையும் மூல தனத்தின் வளர்ச்சியும் முதலாளிக்கு சாத்தியம் இல்லை. பொருள் உற்பத்தியில் முதலாளி வர்க்கத்திற்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் உள்ள பிணைப்பு என்ன? அறிக்கையிலும் பின்னர் விரிவாக மூலதனத்திலும் மார்க்ஸ் குறிப்பிடுகிறார்:
“தனது உழைப்பு சக்தியை விற்காமல் தொழி லாளி உயிர்வாழ முடியாது. ஏனெனில் உழைப்பு சக்தியை தவிர வேறு எதுவும் அவரிடம் இல்லை. அந்த உழைப்பு சக்தியை வாங்காமல் முதலாளி தனது இலாபக் கொள்ளையை உத்தரவாதம் செய்ய முடி யாது. இந்த உழைப்பு சக்திதான் உபரிமதிப்பை உரு வாக்குகிறது. உபரிமதிப்பை முழுமையாக அபகரிக்க முதலாளித்துவம் முயல்கிறது. உபரி மதிப்பின் ஒரு சிறு பகுதியையாவது பெறாமல் தொழிலாளி வர்க்கம் உயிர்வாழ முடியாது. உபரிமதிப்பிற்காக நடக்கும் இந்த போராட்டம்தான் வர்க்கப் போராட்டம்.”
உபரி மதிப்பில்லாமல்...
உபரி மதிப்பு இல்லாமல் முதலாளித்துவ உற்பத்தி முறையே இல்லை; உபரிமதிப்பிற்கான வர்க்கப் போராட்டம் இல்லாமல் தொழிலாளி வர்க்கம் இல்லை. எனவே முதலாளி வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் முரண்பாடு என்பது தவிர்க்க இயலாத ஒன்று. வர்க்க சமரசம் என்பது சாத்தியமற்ற ஒன்று! பாட்டாளி கூலி உழைப்பாளியாகவே அதா வது மறைமுகமான அடிமையாகவே இருக்கிறார் என்கிறது அறிக்கை. இந்த கூலி அடிமை நிலையி லிருந்து நிரந்தரமாக விடுதலை பெற வேண்டும் எனில் பாட்டாளி வர்க்கம் முன் உள்ள ஒரே வழி முதலாளித்துவ உற்பத்திமுறையை முற்றிலுமாக அகற்றுவதுதான்! “எல்லாவற்றிற்கும் மேலாக முதலாளி வர்க்கம் எதை உற்பத்தி செய்கிறது எனில் தனது சவக்குழியை தோண்டும் பாட்டாளிகளை உற்பத்தி செய்கிறது. (எனவே)முதலாளித்துவத்தின் வீழ்ச்சியும் பாட்டாளி களின் வெற்றியும் தவிர்க்க இயலாத ஒன்று!” என அறிக்கை அழுத்தமாக முன்வைக்கிறது. தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமை முதலாளித்துவ உற்பத்தி முறையை முற்றிலும் அகற்றுவது ஆகும். எனினும் இந்த வெற்றி தானாகவே வந்துவிடுமா? மார்க்ஸ் இன்னொரு ஆவணத்தில் குறிப்பிடுகிறார்: “எவ்வளவு சாதகமான அரசியல் சூழல் இருந்தாலும் தொழிலாளர் வர்க்கத்தின் வெற்றி அந்த வர்க்கத்தை பயிற்றுவிக்கும் ஸ்தாபனத்தின் பக்குவத்தை பொறுத்தும் எவ்வாறு தனது சக்திகளை அது ஒருங்கி ணைக்கிறது எனும் திறமை மூலமே அமைகிறது.”
தொழிலாளி வர்க்கத்தை பயிற்றுவிக்கும் அமைப்பு தான் கம்யூனிஸ்ட் கட்சி. தொழிலாளி வர்க்கத்தை யும் அதன் தலைமையின் கீழ் ஏனைய உழைப்பாளி களையும் அணிதிரட்டி பயிற்றுவிக்கும் கடமை கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளது. அந்த கடமையை நிறைவேற்றும் உறுதி மொழியை கம்யூனிஸ்ட் அறிக்கையின் 175வது ஆண்டில் மீண்டும் ஒரு முறை எடுத்து கொள்வோம்.