தமிழக அரசு உடனே நடவடிக்கை மேற்கொள்ள சிபிஎம் மாநிலக்குழு வலியுறுத்தல் நூறு நாள் திட்ட நிதியை கட்டுமானப் பணிக்கு ஒதுக்குவதை கைவிடவும் வேண்டுகோள்
பயிர்க்காப்பீடு செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் ஜூலை 21, 22 ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது தலைமையில் தர்மபுரியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஜூலை 22 அன்று கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
பயிர் காப்பீடு செய்ய நடவடிக்கை எடுத்திடுக!
நடப்பாண்டு குறுவை சாகுபடி செய்துள்ள நெற்பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய இதுவரை அரசின் சார்பில் அறிவிப்பு வராமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு இதேபோன்ற நிலை நீடித்ததால் குறுவை பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இம்மாதம் 31ந் தேதிக்குள் குறுவை பயிருக்கான காப்பீடு செய்ய வேண்டுமென்று ஏற்கனவே ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிலையில், காப்பீடு செய்வதற்கான நிறுவனம் எது என்று தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் உள்ளது. இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் கடந்த 11.7.2022 அன்று தமிழக முதல்வரிடமே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இக்கோரிக்கையை முன் வைத்துள்ளனர். இரண்டு நாட்களில் பயிர் காப்பீடு செய்வதற்கான அறிவிப்பு வரும் என தமிழக அரசின் சார்பில் உறுதியளித்திருந்த நிலையில் இதுவரை அறிவிப்பு இல்லாமல் உள்ளது ஏற்புடையதில்லை.
எனவே, தமிழக அரசு குறுவை பயிர் காப்பீடு செய்வதற்கான காப்பீட்டு நிறுவனம் எது என்ற அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும். எந்த நிறுவனமும் காப்பீடு பெற வரவில்லையென்றால் தமிழக அரசே தனியாக பயிர் காப்பீடு செய்வதற்கான நிறுவனத்தை துவக்கிட வேண்டும். மேலும் குறுவை பயிர் காப்பீடு செய்வதற்கான காலத்தை ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
நூறுநாள் திட்ட நிதியை கட்டுமானப் பணிக்கு ஒதுக்குவதை கைவிடுக!
வறுமை ஒழிப்பை முதன்மை நோக்கமாகக் கொண்டு கடந்த 15-ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வரும் ஊரக வேலைத்திட்டத்திற்கு, ஆண்டிற்கு குடும்பத்திற்கு 100 நபர்கள் வேலை வழங்கிட வேண்டுமென்ற சட்டவிதியை கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றிய பாஜக அரசும் - தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக அரசும் படிப்படியாகச் சிதைத்தது. கடந்த ஆண்டு ஒன்றிய அரசு ரூ. 98 ஆயிரம் கோடி ஒதுக்கியது. ஆனால் நடப்பு ஆண்டிற்கு ரூ.73 ஆயிரம் கோடியாக குறைத்ததோடு மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு வைத்துள்ள சம்பள பாக்கி ரூ.12 ஆயிரம் கோடியையும் இதிலிருந்து எடுத்து வழங்கிட வேண்டுமென அறிவித்துள்ளது. இதுபோன்று ஒன்றிய பாஜக அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீட்டை குறைப்பதால் ஆண்டுக்கு 30 நாள், 40 நாள் மட்டுமே இத்திட்டத்தில் வேலை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்ட விதிகளுக்குப் புறம்பாக, சட்டமன்றத்தில் அவை விதி 110ன் கீழ் அறிவிப்பு என்ற பெயரிலும், பயனாளிகளுக்கு கூலியாக கிடைக்க வேண்டிய நிதியை கட்டுமானப் பணிகளுக்கு ஒதுக்கி ஆளுங்கட்சி ஒப்பந்ததாரர்கள் கொள்ளையடிக்கப் பயன்படுத்தப்பட்டது. ரூ.4 ஆயிரம் கோடி முறைகேடு நடைபெற்றதை அரசின் சமூகத்தணிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த முறைகேடுகள் சீர்செய்யப்பட்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் தேர்தல் காலத்தில் அறிவித்தார். கிராமப்புற ஏழை மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் வேலையும் - கூலியும், கூடுதலாக 50 நாள் வேலையும் கிடைக்கும் என இருந்தனர். ஆனால் கடந்த காலத்தில் திட்ட அமலாக்கத்தில் இருந்த குறைபாடுகள் தொடர்வதுடன் வேலையும், தினக்கூலியும் முழுமையாக கிடைக்கவில்லை. அத்தோடு கடந்தகால அரசைப் போலவே அவை விதி 110-ன்படி, 3-அரசாணைகள் மூலமாக, திட்டத்தின் பயனாளிகளுக்கு கூலியாக கிடைக்க வேண்டிய நிதி ரூ. 4 ஆயிரம் கோடியை ஊரக வேலைத்திட்டத்தில் பொருள்கள் செலவினம் (Material Cost) என்ற பெயரில், வேறு துறைகளின் கட்டுமானப் பணிகளுக்கு மடைமாற்றம் செய்யும் நிலை தொடர்கிறது. தற்போது கூட தமிழக அரசு ஊரக வளர்ச்சித்துறை அரசாணை எண்.62 மூலமாக, ஊரக வேலைத்திட்ட நிதி ரூ.3006 கோடியை கப்பி சாலை அமைப்பது உள்ளிட்டப் பணிகளுக்கு எடுத்து பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆகவே, தமிழக முதலமைச்சர், ஊரக வேலைத்திட்ட அமலாக்கத்தில் உடன் தலையிட்டு, முழுமையாக வேலை, கூலி கிடைக்கவும், தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட கூடுதல் வேலை நாள் 50-ஐயும் சேர்த்து 150 நாள் வேலை வழங்கிடவும், கட்டுமானப் பணிகளுக்கு ஊரக வேலைத் திட்ட நிதியைப் பயன்படுத்துவதை கைவிடவும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தர்மபுரியில் காவிரி உபரிநீரை நீர்நிலைகளுக்கு வழங்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிடுக!
கர்நாடகாவில் பெய்த மழையினால் இவ்வாண்டும் தினசரி 1.25 லட்சம் கன அடிக்கும் மேல் உபரி நீர் திறந்து விடப்பட்டு வீணாக கடலில் கலக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. காவிரியில் மழைக்காலங்களில் ஓடும் உபரி நீரை நீரேற்றம் மூலம் கொண்டு வந்து தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களில் நிரப்பி நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் ஜூலை 21 அன்று தர்மபுரி மாவட்டத்திற்கு ஆய்வு செய்ய வந்த வேளாண் -உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் , இத்திட்டம் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு தருமபுரி மாவட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் அறிவிப்பை சிபிஎம் மாநிலக்குழு வரவேற்பதுடன், உடனடியாக ஆய்வு செய்து இத்திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது. மேலும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஈச்சம்பாடி அணையின் நீரை நீரேற்றம் மூலம் மொரப்பூர், கடத்தூர் பகுதி ஏரிகளில் நிரப்ப தமிழக அரசு அறிவித்துள்ள திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட வேண்டுமெனவும், அதுபோல் மாவட்டத்தில் ஓடும் சின்னாறு, வேப்படி ஆறு உள்ளிட்ட சிற்றாறுகளின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்க வேண்டுமெனவும், தர்மபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான செனாக்கல் அணைக்கட்டு திட்டத்தையும் தமிழக அரசு நிறைவேற்றித்தர வேண்டும்.
குமரியில் தாது மணல் எடுக்கும் உத்தரவை திரும்பப்பெறுக!
கன்னியாகுமரி மாவட்டத்தில் எட்டு வருவாய் கிராமங்களில் 1144 ஹெக்டேர் நில பரப்பில் கனிமவள தாதுக்களை ஐஆர்இஎல் (IREL) மூலம் எடுத்திட ஒன்றிய பாஜக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பாக, கீழ்மிடாலம் ஏ கிராமத்தில் 75 சர்வேயில் 204.6 ஹெக்டேர் நிலத்திலும், மிடாலம் பி கிராமத்தில் 108 சர்வேயில் 202.96 ஹெக்டேர் நிலத்திலும், இணையம் புத்தன்துறை கிராமத்தில் 91 சர்வேயில் 137.5 ஹெக்டேர் நிலத்திலும், ஏழுதேசம் ஏ கிராமத்தில் 23 சர்வேயில் 41.10 ஹெக்டேர் நிலத்திலும், ஏழுதேசம் பி கிராமத்தில் 34 சர்வேயில் 82.90 ஹெக்டேர் நிலத்திலும், கொல்லங்கோடு ஏ கிராமத்தில் 11 சர்வேயில் 171.77 ஹெக்டேர் நிலத்திலும், கொல்லங்கோடு பி கிராமத்தில் 68 சர்வேயில் 171.77 ஹெக்டேர் நிலத்திலும், தாது மணல் எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் 80 ஹெக்டேர் புறம்போக்கு நிலமாகவும், 1064 ஹெக்டேர் நிலம் பட்டா நிலமாகவும் உள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான வீடுகளும், நீர் நிலைகளும், விளை நிலங்களும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும். எனவே, மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் இத்திட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டுமென சிபிஎம் மாநிலக்குழு ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.