articles

img

வெல்ல விவசாயிகளுக்கு மிஞ்சியது கசப்பும், கடனும் மட்டுமே! - பி.தங்கவேலு

வீடு இருக்கிறதோ இல்லையோ. குறைந்தது வீட்டுக்கு ஒருவருக்கு சர்க்கரை குறை பாடு இருக்கிறது. அதை குறைக்க, ஆம், ஒழிக்க அல்ல, மருத்துவர்களும் பாவம் படாதபாடு பட்டு வருகிறார்கள். சொல்லாத ஆலோசனையே இல்லை. கொடுக்காத மருந்தே இல்லை. மருத்து வர்களை விட மற்றவர்களின் ஆலோசனை அதைவிட அதிகம். அவற்றில் முக்கிய ஒரு ஆலோசனை “நாட்டுச் சர்க்கரை உபயோகப்படுத்துங்கள்; அஸ்கா சர்க்கரை வேண்டாம்; அதில் அதிக வேதியல் கலப்பும், இனிப்பும் இருக்கிறது” என கூறப்படுகிறது தான். குறிப்பாக சமீப காலங்களில் டீ கடைகளில் இருவகை டீ அல்லது காபி இருக்கிறது. அதில் ஒருவகை தான் நாட்டுச் சர்க்கரை டீ மற்றும் காபி. அந்த நாட்டு சர்க்கரையை சமீப காலங்களில் எப்படி தயா ரிக்கிறார்கள் என்பதையும், அந்த விவசாயிகளின் பாடுகளையும் பார்ப்போமா?

கரும்பு உற்பத்திச் செலவு

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் காமலாபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாட்டு வெல்லம் அதாவது குண்டுவெல்லம் தயாரிக்கும் சிறுசிறு சர்க்கரை ஆலைகள் இருக்கின்றன. காமலாபுரம் சுற்று வட்டாரப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கரும்பாலைகள் தற்போது இருக்கின்றன. கடந்த காலத்தில் இதைவிட பன்மடங்கு இருக்கும். ஒரு பொங்கல் விழாவின் போது எடப்பாடி பழனி சாமிகூட ‘ஒழுகும் குண்டு வெல்லம் கொடுத்த அரசு’ என கேலி பேசினாரே, அந்த குண்டு வெல்லம் இப்படி தான் தயாரிக்கப்படுகிறது. வெல்லம், உற்பத்தி விலை க்கும் கீழே விலை வீழ்ந்து கொண்டே வந்த நிலையில் எந்த புண்ணியவான் இதை கண்டு பிடித்தாரோ தெரிய வில்லை. சுத்தக் குண்டுவெல்லம் தயாரிப்பில் வேட்டு வைத்துவிட்டனர். கரும்பு ஓராண்டு பணப்பயிர். கரும்பைப் பொங்கலுக்கு நேரடியாக பயன் படுத்துவ தும் உண்டு. அது வேறு ரகம். கரும்பைச் சர்க்கரை மற்றும் வெல்லம் தயாரிக்க பயன்படுத்துவதும் உண்டு.

ஒரு ஏக்கருக்கு சுமார் 40 டன் கரும்பு மகசூல் ஆகும். பெரும்பகுதி கரும்பு விவசாயியே கரும்பாலையும் வைத்திருக்கிறார்கள். ஒரு சிறுபகுதி விவசாயிகள் மட்டும் கரும்பு உற்பத்தி செய்வதோடு நின்று கொள்கி றார்கள். இந்த கரும்பு டன் சுமார் ரூ.2000 வீதம் (2000>40=80000) ரூ.80,000 அளவிற்கு கூடக் குறையக் கிடைக்கும். இதற்கு ஆகும் செலவு... ஆலைக்கு கரும்பு கொண்டு போக வண்டி வாடகை  ரூ.10,000; வெட்டுக்கூலி ரூ.20,000; உழவு ரூ.5,000; நடவு ரூ.12,000; உரம் யூரியா ரூ.2,500; தண்ணீர் கட்ட கூலி ரூ.5,000; களையெடுக்க ரூ.10,000; மொத்தம் ரூ.64,400. இதில் கரும்பு விவசாயி குடும்பத்தினர் உழைப்பு, மருந்து அடித்தல் போன்றவை சேர்க்கப் படவில்லை. இதெல்லாம் சேர்த்ததால்தான், கரும்புக்கு மருந்து அடிக்காமல், தனக்குத்தானே மருந்து அடித்துக்கொண்டு விவசாயிகள் தற்கொலைச் செய்து கொள்கிறார்கள் போலும். 

வெல்லம் உற்பத்திச் செலவு

நாட்டு வெல்லம் காய்ச்சிடுவதைப் பார்ப்போம். கரும்பு ஒரு டன் ரூ.2,000. சோடா கால் கிலோ ரூ.25; ஹைட்ரோஸ் கால் கிலோ ரூ.100; சூப்பர் பாஸ்பேட் ஒரு கிலோ ரூ.50; சல்பர் ஹைட்ரோஸ் கால் கிலோ ரூ.50; அழுக்கெடுக்கும் மருந்து 10 கிராம் ரூ.20; வெல்லம் கலர் ரூ.10; தேங்காய் எண்ணெய் கால் லிட்டர் ரூ.25; வெல்லம் மார்க்கெட் கொண்டு போக டன் ரூ.400; சாக்கு ரூ.40; டொய்ன் ரூ.10; லேபர் ரூ.50; டீசல் ரூ.100. ஆக மொத்தம் ரூ.4,230. இதில் 120 கிலோ வெல்லம் வரும். ஒரு கிலோ வெல்லம் ரூ.40. 120>40=4800.  கரும்பு உற்பத்தியிலும் நட்டம் வருகிறது; வெல்லம் அல்லது சர்க்கரை உற்பத்தியிலும் நட்டம் வருகிறது. என்ன செய்யலாம்? என்று ரூம் போட்டு சிந்திக்கிற போது தான், ஒரு குறுக்குவழி அகப்படுகிறது. அது என்ன? வெல்லம் காய்ச்சி டும்போது அல்லது சர்க்கரை உருவாக்கப்படும்போது கரும்பு பாகுவில் அஸ்கா சர்க்கரை கலந்தால், லாபம் வருமா என்று. அந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெறுகிறார் அல்லது நட்டமில்லாமல் தப்பிக்கிறார். அது எப்படி?

அஸ்கா கலப்பு சர்க்கரை

அதாவது ஒரு டன் கரும்பில் சுமார் 3000 லிட்டர் கரும்புச்சாறு கிடைக்கும். அதில் ஒரு 500 லிட்டரை எடுத்துக்கொண்டு, அதில் 10 சிப்பம் 500 கிலோ அஸ்கா சர்க்கரையைக் கலந்து காய்ச்சினால், அதில் 480 கிலோ வெல்லம் வரும். அந்த 500 லிட்டர் கரும்புச் சாறுக்கு 20 கிலோ வெல்லம் வரும். இப்பொழுது 500 கிலோ வெல்லம் அல்லது சர்க்கரை கிடைக்கும். 500>40=20000. நேரடியாக வெல்லம் காய்ச்சினாலும் இதுதான் நிலைமைதான். நிலைமை இவ்வாறு இருக்க, ஏன் புதிய நிலைக்கு விவசாயிகள் மாறினார்கள் என்றால், “இந்த அஸ்கா சர்க்கரை கலக்காமல் வெல்லம் காய்ச்சப்படும் காலத்தில், கரும்பு வயலில் 12 மாதம் 13 மாதம் என்றுகூட வெட்டாமல் கிடந்து விடும். இரு வருசத்திற்கு ஒரு போகம்தான் வெள்ளாமை. இந்த அஸ்கா சர்க்கரையைக் கலந்து தயாரிக்கும்போது, 7 மாதம் 8 மாதங்களிலேயே கரும்பு வெட்டப்பட்டு விடுகிறது. இரண்டு வருடத்திற்கு 3 வெள்ளாமை எடுத்து விடுகிறோம்” என்றார் காமலா புரத்தைச் சார்ந்த ஒரு விவசாயி.

இடியாப்பச் சிக்கல்

இப்போது இரண்டுமே இடியாப்பச் சிக்கலில் இருக்கிறது. ஆம், எதை தின்றால் பித்தம் தெளியும் என்கிற நிலையில் வெல்ல கரும்பு விவசாயிகள் இருக்கிறார்கள். நேரடியாக தயாரிக்கும் வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரைக்கு விலை இல்லாதபோது, அஸ்கா கலந்து நாட்டு சர்க்கரை, வெல்லம் தயா ரித்தால் லாபம் வருமென்று எல்லா விவசாயியும் ஓடி ஓடி அஸ்கா சக்கரையை லோடு லோடாக வாங்கி  வந்தார்கள். வெல்லப்பாகில் கலந்து தயாரித்தார்கள். ஆரம்பத்தில் சிலருக்கு கையைக் கடிக்காமல் போயிருக்கிறது. ஆனால் இப்போது, புலி வாலைப் பிடித்தக் கதையாக விவசாயிகள் இருக்கிறார்கள். அஸ்கா சர்க்கரை வாங்கிய மொத்த விற்பனைக் கடை யில் மாளாக்கடன். ஆரம்பத்தில் கிலோ ரூ.50 வரை விற்றது; இப்போது நாற்பதுக்கு இறங்கிவிட்டது. அதனால் நட்டம். என்ன செய்வதென்று விவசாயிகள் தவிக்கிறார்கள்.