articles

img

அமலாக்கத்துறை: எதிர்க்கட்சிகளுக்கு எதிரான ஆயுதம்

எதிர்க்கட்சியினர் எதிர்கொண்டுள்ள பொதுவான அச்சுறுத்தல், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது அனைத்து எதிர்க்கட்சியினரையும் ஒரே அணியில் அணிதிரள வைத்திருக்கிறது.  பதினெட்டு எதிர்க்கட்சிகளைச்சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தை  நோக்கி பேரணியாகச் சென்றிருக்கிறார்கள். எதிர்க்கட்சியினர் மீது பாய்ந்திடும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்றும், ஹிண்டன்பர்க் அறிக்கையின் அடிப்படையில் அதானி மீது புலன்விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரி இருக்கிறார்கள்.

மோடி அரசாங்கம், எதிர்க்கட்சிகளுக்கு எதிராகப் புதியதொரு தாக்குதல் முறையை ஏவியுள்ளது. புலனாய்வு முகமைகளாக விளங்கும் மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம்  (சிபிஐ) மற்றும் அமலாக்கத் துறை (Enforcement Directorate) ஆகிய இரண்டையும் எதிர்க்கட்சி யினருக்கு எதிராக ஏவிவிடும் செயலில் இறங்கியிருக் கிறது. கடந்த இரண்டு வாரங்களில், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம், தில்லி மாநிலத்தின் துணை முதலமைச்சரான மணீஷ் சிசோடியாவிற்கு விசாரிக்க  ஆஜராகுமாறு கூறி, பின்னர் அவரைக் கைது செய்திருக்கிறது. அதன்பின்னர், அவர் சிறையிலிருந்த சமயத்தில், அமலாக்கத் துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதேபோன்றே மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம், பீகார் முத லமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் மனைவியும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரு மாகிய ரப்ரி தேவியைக் கேள்வி கேட்க வேண்டும் என்று வரவழைத்திருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்னால் நடைபெற்றதாகக் கூறப்படும் ‘வேலை களுக்கு நிலம் பெற்றதாகக் கூறப்பட்ட ஊழல்’ சம்பந்த மாக லாலு பிரசாத் விசாரிக்கப்படுவதைத்தொடர்ந்து, ரப்ரி தேவி மீதான விசாரணையும் நடந்திருக்கிறது.

கொடூரமான விதிகள்

அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளை அடுத்து, மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம், தில்லியில் உள்ள தேஜஸ்வி யாதவ் வீடு மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் 24 இருப்பிடங்களில் சோதனைகள் செய்திருக்கிறது. இதுதான் மோடி அரசாங்கத்தின் செயல்முறைத் தந்திரமாக (modus operandi) இப்போது இருந்து வருகிறது. அதாவது, முதலில் மத்தியக் குற்றப்புல னாய்வுக் கழகம் ஒரு வழக்கைப் பதிவு செய்யும். அதனைத் தொடர்ந்து அதன் மீது அமலாக்கத்துறை தன்னுடைய பண மோசடித் தடைச் சட்டத்தை (PMLA-Prevention of Money Laundering Act)ப் பிரயோகித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.  பண மோசடித் தடைச் சட்டத்தின் ஷரத்துக்கள் மிகவும் கொடூரமானவைகளாகும். இச்சட்டம் அமலாக்கத்துறையினருக்கு ஒருவரைக் கைது செய்வதற்கும், அவர் வீட்டைச் சோதனை செய்வதற்கும், சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கும், அவரைச் சிறையில் அடைத்து வைப்பதற்கும் உதவிடும் விதத்தில் வானளாவிய அதிகாரங்களைக் கொண்டதாகும். இச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்படுபவர்கள் பிணையில் வெளிவருவது மிகவும் சிரமம்.

மோடி அரசாங்கம், ஒன்றியப் புலனாய்வு முகமைகளை, அதிலும் குறிப்பாக அமலாக்கத் துறையை எதிர்க்கட்சியினருக்கு எதிராக ஏவியிருக்கிறது. அமலாக்கத் துறையையும், மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகத்தையும் தங்கள் அரசியல் எதிரிகளை வஞ்சம் தீர்க்கும் கருவிகளாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அவற்றை இரு விதங்களில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. முதலாவதாக, எதிர்க்கட்சிகளின் முக்கியமான தலை வர்களை நீண்ட காலத்திற்கு எவ்வித விசாரணையோ அல்லது தண்டனையோ இன்றி சிறையில் அடைத்து வைக்கப் பயன்படுத்துகிறது. இவ்வாறு சிறையில் அடைத்து வைத்திருப்பதே ஒரு தண்டனையாக மாறிவிடுகிறது. அதன் இரண்டாவது நோக்கம், தங்களுடன் சமரசம் செய்துகொள்ளாத எதிர்க்கட்சி களை உடைத்து, அவற்றில் சிலருக்கு வலைவீசி, தங்கள் கட்சியில் சேரச் செய்வதற்கு, மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் மற்றும் அமலாக்கத்துறை யின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

சிறையில் அடைக்கப்பட்டவர்கள்

இப்போது ஆம் ஆத்மி கட்சி பாஜகவின் பிரதான எதிரிகளில் ஒன்றாக மாறி இருக்கிறது. தில்லியில் 2022 டிசம்பரில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் பாஜகவினால் ஆம் ஆத்மி கட்சியை அரசியல் ரீதியாகத் தோற்கடிக்க முடியவில்லை. ஆம்  ஆத்மி கட்சியைச் சேர்ந்தவரும், தில்லி அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராகவும் உள்ள சத்யேந்திர சிங் என்பவரை 2022 மே மாதத்தில் பண மோசடித் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தது. அவர் கடந்த ஒன்பது மாதங்களாக சிறையில்தான் இருந்து வரு கிறார். அடுத்து, இப்போது ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மணீஷ் சிசோடியாவைக் கைது செய்திருக்கிறது. அவர்மீது மது பாட்டில்கள் விற்பனை ஊழலில் குற்றஞ்சாட்டி, முதலில் மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகத்தால் கைது செய்யப்பட்டு, பின்னர் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுடன் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இவரும் பிணையில் வருவது மிகவும் சிரமமாகும்.  

கவிதாவுக்கு குறி 

இந்த ஆண்டின் இறுதி வாக்கில் தெலங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இம்மாநி லத்தில் தடம் பதித்திட பாஜக சகலவிதமான நட வடிக்கைகளிலும் இறங்கி இருக்கிறது. அமலாக்கத் துறையினர் தெலுங்கானா மாநில முதலமைச்சரின் மகளும், பாரத் ராஷ்ட்ரிய சமிதி (முந்தைய பெயர்: தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி)யின் தலைவருமான கே.கவிதாவிற்கு, தில்லி மதுபாட்டில்கள் விற்பனை ஊழல் சம்பந்தமாக விசாரிக்க வேண்டும் என்று கோரி அழைப்பாணை அனுப்பியிருக்கிறார்கள். பாஜக,  தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக ஒன்றியப் புலனாய்வு முகமைகளை எப்படியெல்லாம் பயன்படுத்தும் என்பதற்கு இரு ஓர் உதாரணமாகும்.

லாலு குடும்பத்தின் மீது வன்மம்

பீகாரில், நிதிஷ்குமாரும், அவருடைய ஐக்கிய ஜனதா தளமும் பாஜக-வைக் கழற்றிவிட்டுவிட்டு, அவர் பீகாரில் உள்ள மகாகத்பந்தன் கூட்டணியில் இடம்பெற்றதைத் தொடர்ந்து, இப்போது பாஜக, லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவர் குடும்பத்தின் மீது போடப்பட்டிருந்த பழைய வழக்குகளை மீண்டும் புதுப்பித்திருக்கிறது. இதன்மூலம் பீகார் மகாகத்பந்தன் கூட்டணியை பலவீனப்படுத்திடலாம் என பாஜக நம்புகிறது.

பாஜகவில் சேர்ந்தால் வாழ்வு

பல்வேறு எதிர்க்கட்சிகளில் உள்ள தலைவர்களை நிர்ப்பந்தம் செய்தும், ஆசை காட்டியும் தன் பக்கம் தாவச் செய்வதற்கு, ஒன்றிய புலனாய்வு முகமை களைப் பயன்படுத்துவது பாஜகவிற்கு ‘நல்ல பலனை’ அளித்திருக்கிறது. இதற்கு மிகச் சரி யான எடுத்துக்காட்டு இப்போதைய அஸ்ஸாம் முத லமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா என்பவர். இந்த நபர், காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, சாரதா ஊழல் வழக்கில் மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகத்தினால் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தார். பாஜகவில் இவர் சேர்ந்தபின் அவர்மீது தொடுக்கப் பட்டிருந்த வழக்குகள் என்னவாயின என்றே தெரிய வில்லை. அதேபோன்றுதான், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜக விற்குத் தாவியுள்ள சுவெந்து அதிகாரி மற்றும் மகாராஷ்டிராவில் நாராயண் ரானே என்பவர் மீதான வழக்குகளின் நிலைமைகளுமாகும். மகாராஷ்டிராவில் இருந்த மகாராஷ்டிரா விகாஷ் அகாதி (மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி) அரசாங்கம் வீழ்வதற்கு சிவசேனைக் கட்சியில் பிளவினை ஏற்படுத்திடவும், அமலாக்கத்துறை மிகவும் திட்டமிட்டு வேலை செய்ததன் ஒரு பகுதியே யாகும். சிவசேனைக் கட்சியில் இருந்த எம்எல்ஏ-க்களான பிரதாப் சர்நாயக், யாமினி ஜாதவ், மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினரான பவனா கவாலி போன்றவர்கள் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு கள் பதிவு செய்து, அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ததை அடுத்து அவர்கள் ஏக்நாத் ஷிண்டேயின் கோஷ்டியில் சேரத் தள்ளப்பட்டார்கள்.  

பாதுகாக்கப்பட்ட பாஜக எம்எல்ஏ

இவ்வாறாக ஒன்றிய பாஜக அரசாங்கத்தின்கீழ் இயங்கும் புலனாய்வு அமைப்புகள் ஒரு தலைப் பட்சமாகவே செயல்பட்டுவருவதற்கு மற்றுமொரு உதாரணம் கர்நாடகாவில் நடைபெற்றுள்ள சமீபத்திய ஊழல் வழக்காகும். இங்கே, பாஜக அரசாங்கத்தின்கீழ், ஆளும் கட்சி எம்எல்ஏ-வான  மாதலு விருப்பக்சப்பா என்பவரின் மகன் லஞ்சப் பணத்தை வாங்கிக்கொண்டிருக்கும் சமயத்தில் லஞ்ச  ஒழிப்புத்துறை காவல்துறையினரால் கையும் களவு மாகப் பிடிபட்டார். அவருடைய அலுவலகத்தி லிருந்தும், வீட்டிலிருந்தும் மொத்தம் 6 கோடியே 73 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. மாதலு விருப்பக்சப்பா தலைவராகவுள்ள மாநகராட்சியில் சில  சலுகைகள் செய்வதற்காக லஞ்சமாகக் கொடுக்கப் பட்ட பணமே அவ்வாறு கைப்பற்றப்பட்டது. ஆயினும்,  மிகவும் ஆச்சரியகரமான முறையில், 24 மணி  நேரத்திற்குள்ளாகவே, அந்த எம்எல்ஏ-விற்கு  கர்நாடக உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்குகிறது, அதன்பின்னர் அவர்மீது எவ்விதமான தொடர் நடவடிக்கையும் இல்லை. இதுவே அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருந்தால், மத்தியக் குற்றப் புல னாய்வுக் கழகமும், அமலாக்கத்துறையும் உடனடி யாக அவர்மீது பாய்ந்திருக்கும். இப்போதுள்ள நிலையின்படி அமலாக்கத்துறை யினர் பதிவு செய்துள்ள வழக்குகளில் 95 விழுக்காடு, எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிரானவைகளாகும். மீதம்  உள்ள 5 விழுக்காட்டினர் மீதான வழக்குகளும் விசாரிக்கப்படுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வானளாவிய அதிகாரம்

இவ்வாறு அமலாக்கத்துறை எதேச்சதிகார அரசின் நிகரற்ற ஆயுதமாக மாறியிருக்கிறது. 2020இல் பணமோசடித் தடைச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட திருத்தங்கள், அமலாக்கத் துறை யினருக்கு வானளாவிய அதிகாரங்களை வழங்கி  இருக்கிறது. இந்தச் சட்டத்தின்கீழ் ஒருவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுவிட்டால் அமலாக்கத்துறை யினர் அவரைக் கைது செய்யலாம், அவர் வீட்டைச் சோதனை செய்யலாம், அவர் சொத்துக்களைப் பறிமுதல் செய்யலாம். துரதிர்ஷ்டவசமாக, நீதிபதி  ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான உச்சநீதி மன்றம் அமர்வாயம், 2022 ஜூலையில் இந்தத் திருத்தங்களை சரி என்று கூறியிருக்கிறது. அமலாக்கத் துறையினர் பதிவு செய்திடும் அமலாக்க வழக்குத் தகவல் அறிக்கையை (ECIR-Enforcement Case  Information Report), காவல்துறையினர் பதிவு  செய்திடும் முதல் தகவல் அறிக்கைக்கு இணை யானது என்றும் கூறியிருக்கிறது. இந்த அரசானது இத்துடன் திருப்தியடைந்துவிட வில்லை. ஒருவாரத்திற்கு முன்பு மார்ச் 7 அன்று ஒன்றிய அரசின் நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருவாய்த்துறை ஓர் அரசிதழ் அறி விக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், அரசியல் ரீதியாக வுள்ள நபர்கள் (PEPs-Politically Exposed Persons) மற்றும் அரசுசாரா அமைப்புகள் (NGOs) பண மோசடித் தடைச் சட்டத்தின் வரையறைக்குள் கொண்டுவரப்பட முடியும் என்று கூறியிருக்கிறது. இதன் பொருள், அமலாக்கத் துறையானது நாட்டி லுள்ள மூத்த அரசியல்வாதிகள், அரசாங்கம், நீதித்துறை அல்லது ராணுவ அதிகாரிகள் மீது, அவர்களின் நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்திட ஏவப்படலாம் என்பதேயாகும்.

காங்கிரஸ்-ஆம் ஆத்மி மோதல்  

இவ்வாறு ஒன்றிய அரசாங்கம் ஒன்றிய புலனாய்வு  முகமைகளை துஷ்பிரயோகம் செய்வது அதிகரித்துக் கொண்டிருக்கிற அதே சமயத்தில், இதுபோன்ற பாஜக அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்குக் கடும் எதிர்ப்பு அளிப்பதற்குப் பதிலாக, சில கட்சிகள் அதனை வரவேற்று, நிலை எடுத்திருக்கின்றன. ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மணீஷ் சிசோடியா மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகத்தால் கைது செய்யப் பட்டபோது, காங்கிரஸ் கட்சியின் தில்லிப் பிரிவு அதனை வரவேற்றிருப்பது மட்டுமல்லாமல், முத லமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராகவும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருக்கிறது.  இதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் ஆம் ஆத்மி கட்சி, பத்தாண்டுகளுக்கு முன்பே வழக்குப் பதிவு செய்துள்ள நேஷனல் ஹெரால்டு வழக்கை மீண்டும் திறந்து, ஏன் ராகுல் காந்தியைக் கைது செய்யக்கூடாது என்று கோரியிருக்கிறது.    தங்களுக்கு எதிராக உள்ள ஒவ்வொரு கட்சி மீதும் பாஜக அரசாங்கத்தின் ஒன்றிய புலனாய்வு முகமைகள் பாய வேண்டும் என்று ஒவ்வொரு கட்சியும் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஜனநாயக அமைப்பில் ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறு விதமான அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டுதான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு கட்சியின் அரசியல் நிலைப்பாடு மற்றொரு கட்சிக்கு ஒவ்வாததாக இருக்கக்கூடும். எனினும் அவை ஒன்றுக்கொன்று போட்டிபோட சுதந்திரம் உண்டு. ஆயினும் மோடி அரசாங்கம் ஒரு கட்சியின்மீது எதேச்சதிகார - பாசிசத்தன்மை கொண்ட முறையில் தாக்குதலைத் தொடுக்கும்போது, குறைந்தபட்சம் தங்கள் குறுகிய வேற்றுமைகளை மறந்து, நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக, எதிர்க்கட்சிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, அனைத்துக் கட்சிகளும் அணி திரள வேண்டும் என்றுதானே ஒருவர் எதிர்பார்க்க முடியும். வேறுவிதத்தில் நிலை எடுத்தால் அது தனக்குத் தானே குழிதோண்டிக் கொள்வது போன்றதேயாகும்.

ஓரணியில் திரள்க!

எனினும், எதிர்க்கட்சியினர் எதிர்கொண்டுள்ள பொதுவான அச்சுறுத்தல், நாடாளுமன்ற பட்ஜெட்  கூட்டத்தொடரின்போது அனைத்து எதிர்க்கட்சி யினரையும் ஒரே அணியில் அணிதிரள வைத்திருக் கிறது. பதினெட்டு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்கள் அமலாக்கத்துறை அலுவல கத்தை நோக்கி பேரணியாகச் சென்றிருக்கிறார்கள். எதிர்க்கட்சியினர் மீது பாய்ந்திடும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்றும், ஹிண்டன்பர்க் அறிக்கையின் அடிப்படையில் அதானி  மீது புலன் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரி இருக்கிறார்கள். இந்தக் கிளர்ச்சிப் பேரணி - போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாரத் ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகளும் இடம்பெற்றிருந்தது நல்ல அம்சமாகும். இத்தகைய ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையுடன், உச்ச நீதிமன்றம் பண மோசடித் தடைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள கொடூர மான ஷரத்துகள் குறித்து மறு ஆய்வு செய்திட வேண்டும் என்பதை அவசரகதியில் அணுகிட வேண்டும். அப்போதுதான், அமலாக்கத்துறை தனக்கு  அளிக்கப்பட்டுள்ள சட்டத்திற்கு அப்பாற்பட்ட, தான்தோன்றித்தனமான ஷரத்துக்களை துஷ்பிரயோகம் செய்யவிடாமல் தடுத்திட முடியும்.  

மார்ச் 15, 2023
- தமிழில்: ச.வீரமணி