articles

img

கீழடி, மொகஞ்சதாரோ கால செயற்கை நுண்ணறிவு புகைப்படங்கள் இலமு திண்டுக்கல்

    வைகை நதி  நாகரீகம் என்று கீழடியை நாம் போற்றுகிறோம். 2015ஆம் ஆண்டு கீழடியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. கி.மு. 6ம் நூற்றாண்டைச் சேர்ந்த கலைப்பொருட்கள் கண்டறியப்பட்டதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் கூறும் நல்லுலகம் பெருமிதம் கொண்டது.  

     இரும்பு காலம் என்று சொல்லப்படுகின்ற கி.மு.12ஆம் நூற்றாண்டுக்கும் கி.மு.6ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட நாகரீகத்தைச் சேர்ந்தது கீழடி என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த அகழாய்வுகளில் மணிகள், கண்ணாடி, மணி கற்கள், இரும்புக் கருவிகள், இரும்புக் கருவியின் பாகங்கள், டெரகோட்டா சிலைகள், விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள், செப்பு பொருட்கள், பிளின்ட் துண்டுகள், பிளின்ட் காதணிகள், உருண்டை சில்லுகள், பழைய மண்பாண்டங்கள், புடவைகள, அணிகலன்கள் என அரிய பொருட்கள் கிடைத்தன. இந்த தொல் பொருட்களைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது.  

     சிவகங்கை மாவட்டத்தில் கீழடியில் கடந்த 2018ஆம் ஆண்டு 2 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.18.43 கோடி செலவில் கட்டப்பட்ட அருங்காட்சியகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மாநில தொல்லியல் துறையின் கீழ் 4 மற்றும் 8ஆம் கட்ட அகழாய்வில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனித்துவமான பொருட்கள் கண்டறியப்பட்டன. அவை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது கீழடி குறித்த செயற்கை நுண்ணறிவு படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

    கீழடியில் சேகரிக்கப்பட்ட பொருட்களின்  படங்களை வைத்து நாம் தருகிற தகவல்கள் மூலம் கீழடி மக்கள் எப்படி இருப்பார்கள், அவர்கள் வாழ்நிலை எப்படி இருந்தது. அவர்களின் குழந்தைகள் என்ன வகையான விளையாட்டுப் பொருட்களைக்கொண்டு விளையாடின.  

    பெண்கள், ஆண்கள் என்ன வகையான அணிகலன்களை அணிந்திருந்தனர், அவர்களது வீடுகள் எப்படி இருந்தன. அவர்களது விவசாயம் எப்படி இருந்தது என்பன பற்றியெல்லாம் செயற்கை நுண்ணறிவு மூலம் தயாரிக்கப்பட்ட படங்கள் வெளியிடப்பட்டன. இந்த படங்கள் குறித்து சில விமர்சனங்கள் உள்ளன. ஆனாலும் படங்கள் நம்மை ஈர்க்காமலில்லை.  

    இதே போல மொகஞ்சாதாரோ படங்களும் வெளியாகி உள்ளன. பார்ப்பதற்கு மனதை கொள்ளை கொள்ளும் படங்களாக அழகுற உள்ளன. அறிவியலின் அளப்பரிய இந்த கண்டுபிடிப்பை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.