பூமியின் ஆழமான பகுதியை ஆராய சீனா உலகின் ஆழமான ஆழ் துளையைப் போடும் பணியைத் தொடங்கியுள்ளது. சீனாவின் வட மேற்கு ஜிங்ஜியாங் (Zinjiang) மாகாணத்தில் இருக்கும் டாரிம் பாலைவனத்தில் இந்த ஆழ்துளை அமைக்கப்படுகிறது என்று ஜிங்ஹுவா (Xinhua)செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த துளை பூமியின் தரைப்பரப்பில் இருந்து 11,100 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்படுகிறது.
இந்த குறுகலான துளை போடும் கருவியின் தண்டுப்பகுதி (shaft) பத்திற்கும் மேற்பட்ட கண்ட அடுக்குகளை (strata) ஊடுருவிச் சென்று பூமியின் மேலோடை (crust) அடையும். இப்பகுதியில் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான பாறைகள் உள்ளன என்று கருதப்படுகிறது. இத்திட்டம் 467 நாட்களில் முடிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. பூமியின் ஆழமான பகுதிகளை ஆராயும் சீனாவின் முயற்சியில் இது ஒரு மைல்கல் என்று போற்றப்படுகிறது.
பூமியின் உட்புற அமைப்பு, அதன் பரிணாமம் பற்றி அறிய இந்த ஆழ்குழாய் துளை உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். புவி அறிவியல் பிரிவில் புதிய தரவுகளை இத்திட்டம் வழங்கும் என்று திட்டத்தை தலைமையேற்று நடத்தும் சீனாவின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் வாயு நிறுவனமான சீன தேசிய பெட்ரோலியக் கழகத்தின் அறிக்கை கூறுகிறது.
கம்பிகளுக்கு நடுவில் வாகனம் ஓட்டுவது
துணிச்சலான இந்த திட்டம் இதுவரை அறியப்படாத ஆழ் புவிப்பரப்பைப் பற்றி ஆராய்ந்து அறிய, மனித அறிவின் எல்லைகளை விரிவாக்க உதவும் என்று திட்டத்தின் தொழில்நுட்ப நிபுணர்களில் ஒருவரான வாங் சன்செங் (Wang Chunsheng) கூறுகிறார். என்றாலும் இது சுலபமான செயல் இல்லை.
சிக்கல்கள் நிறைந்த துளையின் கட்டுமானப் பணிகள் பெரிய டிரக் வாகனம் ஒன்றை இரண்டு மெல்லிய எஃகு கம்பிகளுக்கு இடையில் ஓட்டுவது போன்றது என்று சீன அறிவியல் அகாடமி விஞ்ஞானி சன் ஜின்ஷெங் கூறுகிறார்.
பூமிக்கடியில் 200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும் மேற்பரப்பில் இருப்பதை விட 1,300 மடங்கு அதிக அழுத்தத்தையும் தாக்குப்பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த துளை போடும் இயந்திரம் 2,000 டன் எடையுடையது. சீனாவின் மிக வெப்பமான பகுதியான டாரிம் பாலைவனத்தின் கடுமையான சூழ்நிலை இந்த பணியை மேலும் சவால் நிறைந்ததாக்குகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
விண்ணிலும் மண்ணிலும்
புதிய எல்லைகள் தேடி விண்ணிலும் மண்ணிலும் புதிய உச்சத்தை அடைய முயலும் சீனாவின் தீவிர முயற்சியில் இத்திட்டமும் ஒன்று. 2021இல் சீன ஜனாதிபதி பூமியின் ஆழமான பகுதிகளை ஆராய்வது உட்பட பல்வேறு துறைகளிலும் புதிய உயரங்களை அடையவேண்டும் என்று விஞ்ஞானிகளுக்கு அழைப்பு விடுத்தார். மேலும் சீன தலைவர் ஜி ஜின்பிங் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி நாட்டின் ஆற்றல் விநியோகத்தை அதிகரிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஜின்ஜியாங் மாகாணம் தாது மற்றும் எண்ணெய் வளம் மிக்கது. சீனாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான சினோபெக் நிறுவனம்2023 மேயில் டாரிம் பாலைவனப்பகுதியில் 8,500 மீட்டர் ஆழத்தில் நடத்திய ஆய்வில் அங்கு கணிசமான அளவு எண்ணெய் மற்றும் வாயு இருப்பதை கண்டுபிடித்தது.
ரஷ்யாவில் 12,262 மீட்டர் ஆழத்தில் உள்ள கோலா ஆழ்துளையே (Kola Superdeep Borehole) மனிதனால் இதுவரை பூமியில் போடப்பட்ட மிக ஆழமான ஆழ் துளை. சீனாவின் டாரிம் பாலைவனத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய முயற்சி இதுவரை விஞ்ஞானிகள் அறியாத பூமியின் உள்ளமைப்பு பற்றிய பல புதிய தகவல்களை வெளிக்கொணரும் என்று நம்பப்படுகிறது.