world

img

உலகின் அழிவுசக்தி அமெரிக்கா 800 ராணுவ முகாம்கள்; 150 போர்கள்

“ஜனாதிபதி பைடனுடன் இணைந்து  2023 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முன்வைப்பதில் பெருமையடைகிறேன்... 773 பில்லியன் டாலருக்கான கோரிக்கை என்பது உலக முழுவதுமுள்ள நமது முன்னுரிமைகளின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கானதாகும்”

- அமெரிக்க ராணுவ அமைச்சர் லாயிட் ஜே ஆஸ்டின்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன்பாகத் தனது கோரிக்கையை வைக்கும்போது ஆஸ்டின் இவ்வாறு தெரிவித்தார். அவர் பேசியபோது, நான்கு நாடுகளைப் பெயர் சொல்லிக் குறிப்பிடவும் செய்தார். சீனா, ரஷ்யா, வடகொரியா மற்றும் ஈரான் ஆகியவையே அந்த நான்கு நாடுகளாகும். அதிலும் குறிப்பாக, சீனாவின் சவாலை எதிர்கொள்வது என்பதை முக்கியமானதாக சொல்லியிருக்கிறார். விடுதலை பெற்ற அமெரிக்காவிற்கு 250 வயது என்றால், அதில் வெறும் 20 ஆண்டுகள்தான் அவர்கள் போரிடாமல் இருந்திருக்கிறார்கள். 

உள்நாட்டில் சண்டை, நேரடியாகப் போர், பிற நாடுகளின் மீது தாக்குதல்கள் மற்றும் பிறர் தோள் மீது ஏறி நின்று சண்டை என்று அமெரிக்காவின் போர் நடவடிக்கைகளுக்குப் பஞ்சமேயில்லை. மனித உரிமைகளுக்கான சீனப்பயிலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் திகைக்க வைக்கிறது. 1945 ஆம் ஆண்டு முதல், அதாவது இரண்டாம் உலகப் போர் நிறைவு பெற்றபின்னர், 2001 ஆம் ஆண்டு வரையில், உலகின் 150 பகுதிகளில் 248 சண்டைகள் நிகழ்ந்துள்ளன. அதில் 201 சண்டைகளில், நேரடியாகவோ அல்லது மறைமுகவாகவோ அமெரிக்கா தொடர்பு கொண்டிருக்கிறது. இந்தக காலகட்டத்தில் நடந்த சண்டைகளில் 81 விழுக்காட்டிற்கு அமெரிக்காவே காரணமாக இருந்துள்ளது.

போரால் கொழிப்பு

முதல் உலகக் போரில் ஆயுதங்களை விற்றதால் அமெரிக்காவுக்குக் கொள்ளை லாபம் கிடைத்தது. பிரான்சும், பிரிட்டனும் ஆயுதங்கள், போர் விமானங்களுக்கான எந்திரங்கள், கச்சா எண்ணெய் உள்ளிட்ட அனைத்தையும் வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், இருந்து வாங்கின. பத்திரங்களை அமெரிக்கர்களுக்கு டாலரில் விற்று இதற்கான பணத்தை  திரட்டின. அவற்றின் மதிப்பு 50 பில்லியன் டாலராக இருந்தது. இதன் தற்போதைய மதிப்பு 560 பில்லியன் டாலராக இருக்கும். தற்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 42 லட்சம் கோடி ரூபாயாகும்.

இந்தக் கொள்ளைக்குப் பிறகு, ராணுவம்-தொழில்துறை கூட்டு உருவானது. இரண்டாம் உலகப்போரின்போது இரண்டு துறைகளும் கைகோர்த்துப் பயணித்தன. 1939 ஆம் ஆண்டில் 88.6 பில்லியன் டாலராக இருந்த அமெரிக்காவின் மொத்த தேசிய உற்பத்தி, 1944 ஆம் ஆண்டில் 135 பில்லியன் டாலராக எகிறியது. இதில் போர்த் தளவாடங்களின் உற்பத்தி பெரும பங்கு வகித்தது. 1939ல் மொத்த தேசிய உற்பத்தியில் 2 விழுக்காடாக இருந்த இந்த ஆயுத உற்பத்தி, 1943 ஆம் ஆண்டில் 40 விழுக்காடாக அதிகரித்தது. உற்பத்தி செய்யப்பட்ட ராணுவ விமானங்களின் எண்ணிக்கை மட்டுமே 1 லட்சத்து 27 ஆயிரத்து 766 ஆகும். போருக்குப் பிறகு இவை அமெரிக்க மேலாதிக்கத்தின் முக்கியமான தூண்களாக மாறின.  ராணுவ-தொழில்துறை தொடங்கி, வாக்காளர்கள், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் வர்த்தகர்கள் என்று ஒரு அரசியல் சங்கிலி உருவாக்கப்பட்டது. போர் இல்லை என்றால், போரை உருவாக்குவார்கள். இதன் மூலம் ஆயுத வர்த்தகத்துறை தன்னைத் திடப்படுத்திக் கொள்ளும். இந்த வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் பலன்களுக்காக பல்வேறு குழுக்கள் காத்திருக்கின்றன. அந்தக் குழுக்களுக்குத் தேவையான தீனியும் இதிலிருந்து கிடைத்தே வருகிறது. கூட்டாளிகள் தனது நிலைபாட்டை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று நினைக்கும் அமெரிக்கா, தனது கூட்டாளிகள் நெருக்கடியில் சிக்கினால் மகிழ்ச்சி அடைந்து கொள்கிறது. இப்போது கூட உக்ரைனை மாட்டிவிட்டு, சுற்றியுள்ள அனைத்து நாடுகளுக்கும் ஆயுத விற்பனையைச் செய்வதில் முழுக்கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால், பெரும்பாலான அமெரிக்க மக்கள் தங்களை அமைதி விரும்பிகளாகவே வரித்துக் கொள்கிறார்கள். தங்கள் நாடு வன்முறையை பிரயோகிக்கும் ஒன்றாக அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை. உலக அமைதிக்காகவே அமெரிக்க அரசியல்வாதிகள், அந்நாட்டின் ராணுவம் மற்றும் ஆயுதங்களைத் தயாரிக்கும் பெரு நிறுவனங்கள் ஆகியவை அயராது உழைப்பதாக அவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். 1945 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையில் 70 நாடுகளில் சுமார் 800 ராணுவ முகாம்களை அமெரிக்கா அமைத்திருக்கிறது. பிரிட்டன் அரசியல் வல்லுநர்களில் ஒருவரான ஸ்டீபன் வால்ட், “மிகவும் பாதுகாப்பான நிலையில் அமெரிக்காவின் ராணுவம் உள்ளது. அதை எதிர்கொள்ளும் வகையிலான எதிரிகள் இல்லை. ஆனால், இந்த இரண்டு காரணங்களுக்காகவே அமெரிக்கா போரில் இறங்குகிறது” என்கிறார். உள்நாட்டில் நெருக்கடி இத்தனைக்கும் உள்நாட்டில் நிலைமை அப்படியொன்றும் சாதகமாக இல்லை. சமூகப் பிரச்சனைகளில் இருந்து பொருளாதார நெருக்கடி வரையில் கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் அதிகாரபூர்வ புள்ளிவிபரங்களின்படி, வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை 2019ல் 10.5 விழுக்காடு என்றிருந்தது. இந்த எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டில் 11.4 விழுக்காடாக எகிறியிருக்கிறது. கிட்டத்தட்ட 33 லட்சம் பேர் வறுமையில் வாடுபவர்களின் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கிறார்கள். ஜனவரி 2022-ஐ அமெரிக்க நாட்டின் வறுமை குறித்த விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

சமூக ரீதியில் கறுப்பின மக்கள் இரண்டாம் பட்சமாக நடத்தப்படுகிறார்கள். அவர்கள் மீதான வெறுப்பை அரசு எந்திரமே கக்குகிறது. 1800களில் பழங்குடியினர் மீது எத்தகைய வெறுப்பை உமிழ்ந்து, அவர்களை இல்லாமலேயே செய்தார்களோ, அத்தகைய வெறுப்பை கறுப்பின மக்கள் மீது தற்போது காட்டுகிறார்கள். ஜார்ஜ் பிளாய்ட் கொலை அமெரிக்க மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தினாலும், நிறவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான மக்கள் எழுச்சி உருவாகவில்லை. நிறவெறித் தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் வலதுசாரிப் பொருளாதாரக் கொள்கையை முன்னிறுத்துவது யாருடைய புருவங்களையும் உயர்த்தவில்லை. அது இயற்கையான கூட்டணி என்றுதான் முடிவுக்கு  வரவேண்டியுள்ளது.

- கணேஷ்

புள்ளி விபர ஆதாரங்கள் - சின்குவா, டெலிகிராப்(கொல்கத்தா), டெலிசூர், அமெரிக்க அரசு சென்சஸ் ஆகிய  இணைய தளங்கள்