உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்து வரும் நிலையில், விளையாட்டு உலகமும் தன்பங்கிற்கு ரஷ்யா மீது அடுத்த டுத்து தடை உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. வரும் நவம்பர் மாதம் கத்தாரில் நடைபெறும் ஆடவர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்களும், ஐரோப்பிய யூனியனில் உள்ள கால்பந்து அணிகள் ரஷ்யாவுடன் விளையாடக்கூடாது எனவும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், விளையாட்டு தொடர்பான எந்தவிதமான நடவடிக்கைகளிலும் ரஷ்யா பங்கேற்கக் கூடாது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்துள்ளது. இதனால் பேட்மிண்டன், ஹாக்கி, கூடைப்பந்து, குளிர்கால விளையாட்டு, நீர் விளையாட்டு சம்மேளனங்கள் ரஷ்யாவை தங்களது விளையாட்டு நிகழ்வுகளில் இருந்து நீக்கியுள்ளன. பெலாரஸிற்கும் தடை உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்யாவிற்கு ஆதரவாக தாக்குதல் நடத்த தயாராக இருக்கும் பெலாரஸ் நாடு இனி சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்கக் கூடாது (ரஷ்யாவுடன் சேர்த்து) என சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் அறிவித்துள்ளது. விளையாட்டு நிகழ்வுகளில் பெலாரஸ் நாட்டிற்கு விதிக்கப்படும் முதல் தடை (அதிகாரப்பூர்வமாக) இதுவாகும்.