பிரேசிலியா, அக்.20- தனது பதவிக்காலத்தில் எத்தனை கல்வி நிலையங்களை ஜனாதிபதி போல்சோனாரோ உருவாக்கினார் என்று பிரேசில் மாணவர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
அக்டோபர் மாதத் துவக்கத்தில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் 46 கோடி அமெரிக்க டாலரை போல்சோனாரோவின் நிர்வாகம் வெட்டிவிட்டது. தேர்தல் நேரத்தில் கூட கல்வித்துறையை சீர்குலைக்கும் நடவடிக்கையை எடுக்கும் போல்சோனாரோவின் செயல்பாடுகளை எதிர்த்து மாணவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள பெரிய நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.
தேசிய மாணவர்கள் சங்கத்தின் தலைவரான புருனா பிரெலாஸ், "கல்வியில் அக்கறை செலுத்தும் ஜனாதிபதியே எங்களுக்குத் தேவை. லூலா ஜனாதிபதியாக இருந்தபோது 181 கல்லூரி வளங்களை உருவாக்கினார். எவ்வளவு கல்வி நிலையங்களை போல்சோனாரோ உருவாக்கினார்?. ஒன்றன் பின் ஒன்றாகக் கல்வி நிலையங்கள் நிதி நெருக்கடியால் சிரமப்படுகின்றன. கல்வியை மேம்படுத்த இந்த நிர்வாகத்திடம் எந்தவிதமாக திட்டமும் இல்லை" என்று குற்றம் சாட்டினார்.
மாணவர்களின் போராட்டம் அரசியலாகவும் மாறியுள்ளது. இதுபோன்ற நிதி ஒதுக்கீடுகளை வெட்டுவதற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று மாணவர்கள் சங்கங்களின் தலைவர்கள் கோரியுள்ளனர். அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இரண்டாவது சுற்றுத் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் லூலாவுக்கு ஆதரவாக மாணவர்கள் வாக்களிப்பார்கள் என்று மாணவர் சங்கங்களின் தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.