world

img

மன்னராட்சி ஒழியட்டும்: பிரிட்டனில் அதிகரிக்கும் மக்கள் குரல்

பிரிட்டனின் அரசியாக இருந்த எலிசபெத் மரணத்திற்குப் பிறகு, மன்னராட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்ற குரல் அதிகமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

பிரிட்டனின் சிவில் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வரும் அமைப்புகள் மன்னராட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தப் பிரச்சாரத்திற்கு எதிராகக் காவல்துறையினர் கடுமையான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். புதிய அரசராக சார்லஸ் பதவியேற்க இருக்கையில் இந்தப் போராட்டங்கள் நடக்கக்கூடாது என்பதில் அவர்கள் குறியாக இருக்கிறார்கள். ஆனால், மன்னராட்சிக்கு எதிரான குரல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கண்டனக் குரல்கள் அதிகரித்துள்ளதால், காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மக்கள் உரிமைக்குக் குரல் எழுப்பி வரும் அமைப்புகளில் ஒன்றாக லிபர்ட்டி, கைது நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. செய்தியாளர்களைச் சந்தித்த அந்த அமைப்பின் கொள்கைப் பிரச்சாரத்திற்கான நிர்வாகிகளில் ஒருவரான ஜோடி பெக், "நாட்டில் பேச்சுரிமை கரைந்து போயுள்ளதையே இந்த சட்டவிரோதக் கைதுகள் காட்டுகின்றன" என்றார்.

மேலும் பேசிய அவர், "நீங்கள் யாராக இருந்தாலும் சரி, உங்கள் குரல்  எதற்காக ஒலித்தாலும் சரி. ஆனால் எழுந்து நின்று உங்களால் அதைச் சொல்ல முடிகிறதா என்பதுதான் முக்கியம். அதைக் குற்றமாகக் கருதுவது கவலையளிக்கும் விஷயமாகும். தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விரிவான அதிகாரங்களை பேச்சுரிமைக்கு எதிராக காவல்துறையினர் பயன்படுத்துவதும் கவலையளிக்கிறது" என்று குறிப்பிட்டார். மன்னராட்சிக்கு எதிரான குரல்கள், குடியரசுக்கு ஆதரவானவை என்று பல சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் நான்கு ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆக்ஸ்போர்டில் நடந்த கூட்டமொன்றில் சைமன் ஹில் என்ற மனித உரிமைப் போராளி, "ஒரு நாட்டின் தலைவர் நம் மீது திணிக்கப்பட்டிருக்கிறார். நமது சம்மதத்தைக் கேட்கவில்லை" என்று குரல் கொடுத்தார். கூட்டத்தில் பங்கேற்ற சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆதரவுக் குரல்களும் எழும்பின. உடனடியாகக் காவல்துறை அரங்கின் உள்ளே நுழைந்தது. அவரைக் குண்டுகட்டாகக் கட்டி தூக்கிச் சென்று, காவல்துறை வாகனத்தில் எறிந்து காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.

காவல்துறையினர் தங்கள் அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார்கள் என்று சைமன் ஹில் குற்றம் சாட்டியுள்ளார். பேச்சுரிமையையும், ஜனநாயகத்தையும் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ள புதிய அதிகாரங்கள் சேதப்படுத்தி விட்டன என்று, புதிய அதிகாரங்களைக் காவல்துறையினர் சுட்டிக்காட்டியபோது பதிலளித்தார்.

குடியரசு தேவை

அதேபோல் ஸ்காட்லாந்தின் தலைநகர் எடின்பர்க்கில் நடந்த கூட்டமொன்றில் எழுந்து நின்ற 22 வயது பெண் மரியன்கெலா, "இப்போதைய தேவை குடியரசுதான்" என்று குரல் கொடுத்தார். அவரைக் காவல்துறையினர் கைது செய்தபோது, "அவரைப் போக விடுங்கள். இது அவரின் பேச்சுரிமை. கைது செய்யாதீர்கள்" என்று சிலர் கண்டித்தனர். 52 வயதாகும் ஒருவரும் மன்னராட்சிக்கு எதிராக முழக்கமிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார். அமைதியைக் குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாக இவர்கள் இருவர் மீதும் ஸ்காட்லாந்து காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.

பிரிட்டனின் மணிமுடியின் பெயரால் அநீதி, சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பதைத் தாங்கள் கண்டிப்பதாகப் பல்வேறு ஜனநாயக அமைப்புகள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. தெற்கு காவென்ட்ரியின் நாடாளுமன்ற உறுப்பினரான சாரா சுல்தானா, "குடியரசு பற்றிக் கருத்துத் தெரிவிப்பதற்காக யாரும் கைது செய்யப்படக்கூடாது" என்று கோரியுள்ளார். பால் போலெஸ்லேண்டு  என்பவர் வெற்றுக் காகிதத்தைக் கைகளில் ஏந்தியவாறு, நாடாளுமன்றச் சதுக்கத்திற்கு சென்றிருக்கிறார். அதில், "இவர் என்னுடைய மன்னர் அல்ல" என்று எழுதினால் கைது செய்யப்படுவார் என்று காவல்துறை மிரட்டியுள்ளது.

ராணிக்கு அஞ்சலி செலுத்துவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் இதைப் பயன்படுத்திக் கொண்டு சார்லசை அரசாக்குவது மற்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை ஒடுக்குவரும் கொடுமையானது என்று அவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இவரது கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.

 

;