காசா, அக்.26- பாலஸ்தீனப்பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள இஸ்ரேல், அப்பகுதிகளில் நடத்தி வரும் வெறியாட்டத்தால் 2020ல் மட்டும் இதுவரையில் 180 பாலஸ்தீன மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
பாலஸ்தீனத்திற்குச் சொந்தமான மேற்குக் கரைப்பகுதியில் இஸ்ரேல் சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகளை செய்துள்ளது. இஸ்ரேலியர்களை இப்பகுதிகளில் குடியேற்றம் செய்யும் வேலையை வலுக்கட்டாயமாக செய்து வருகிறார்கள். பாலஸ்தீனக் குடியிருப்புகளைத் தரைமட்டமாக்கி விட்டு, அங்கெல்லாம் இஸ்ரேலியர்களுக்கான குடியிருப்புகளை உருவாக்குகின்றனர். இந்த வேலைகளை ராணுவம் மேற்பார்வை செய்கிறது.
தனது ஆக்கிரமிப்பு வேலைகளுக்கு வரும் எதிர்ப்பை அடக்குமுறை மூலமாக இஸ்ரேல் எதிர்கொள்கிறது. அதோடு, அவ்வப்போது ஏவுகணைகளை ஏவியும், துப்பாக்கிகளால் சுட்டும் கொலைகள் நடக்கின்றன. நடப்பாண்டில் இதுவரையில் மட்டும் குறைந்தது 180 பாலஸ்தீன மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. தனது ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரைப்பகுதிகளில் மட்டுமல்லாமல், ஹமாஸ் அமைப்பின் நிர்வாகத்தில் உள்ள காசாத்திட்டுப்பகுதிகளிலும் புகுந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்துகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பாக ஆக்கிரமிப்புப் பகுதிகளில் ஒன்றான நேப்ளஸ் நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு பாலஸ்தீன அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். இது பாலஸ்தீன மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட வாடி அல் ஹோ, ஹாம்டி ஷரப், அலி அன்டர், ஹாம்டி கய்யிம் மற்றும் மிஷால் பாக்தாதி ஆகிய அனைவரும் 35 வயதுக்கு உட்பட்டவர்களாவர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மற்ற 20 பேரும் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நேப்ளஸ் நகரத்தில் கொல்லப்பட்ட இளைஞர்களின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் கொலைகள் மற்றும் வன்முறை நடவடிக்கைகளைக் கண்டிக்கும் முழக்கங்கள் இறுதி ஊர்வலத்தில் எழுப்பப்பட்டன. பாலஸ்தீனக் கொடிகளையும், கறுப்புக் கொடிகளையும் ஏந்தியவாறு ஏராளமானோர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
அடக்குமுறை அதோடு நிற்கவில்லை. ரமல்லா நகருக்கு வடபுறம் உள்ள நபி சலே கிராமத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மக்களின் கூட்டத்தைப் பார்த்து மிரண்ட இஸ்ரேலிய ராணுவம் மக்களைக் கடுமையாகத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் குசாய் தமிமி என்ற 19 வயது வாலிபர் கொல்லப்பட்டார். பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் துப்பாக்கிகளால் சுடும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருப்பதாக வஃபா செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. கொலையானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோதல்கள்
எதிர்ப்புகளை அடக்க முயலும் இஸ்ரேலிய ராணுவத்துடன் பல இடங்களில் பாலஸ்தீன மக்கள் எதிர்த்தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர். கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் பயன்படுத்தி மக்களோடு ராணுவமும், காவல்துறையும் மோதி வருகிறது. இதில் ஏராளமான மக்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். நேப்ளஸ் நகருக்கும் புகுந்து கண்மூடித்தனமாக இஸ்ரேல் ராணுவம் தாக்கியதாக மேற்குக்கரைப் பகுதியின் பாலஸ்தீன நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.
வேலை நிறுத்தம்
ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் காசாத் திட்டுப் பகுதியில் வேலை நிறுத்தத்திற்குப் பல்வேறு பாலஸ்தீன அமைப்புகள் இணைந்து வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விட்டுள்ளன. காசாத்திட்டுப் பகுதியில் இருப்பதைப் போன்றதொரு எதிர்ப்பு அமைப்பு மேற்குக் கரையில் உருவாகிவிடக்கூடாது என்பதே இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அண்மையில் அனைத்து பாலஸ்தீன அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட முடிவெடுத்ததும் இஸ்ரேலைப் பதட்டமடைய வைத்திருக்கிறது.