world

img

பாகிஸ்தான் கப்பலில் இருந்தது அணுசக்தி இயந்திரமா? தொடரும் விசாரணை

பாகிஸ்தான் செல்லும் வழியில் இந்தியாவால் மும்பை அருகில் கைப்பற்றப்பட்ட கப்பலில் இருந்தது “வணிகப்” பொருட்களே; அணுசக்தி திட்டத்திற்கான இயந்திரங்கள் அல்ல என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.  அணுசக்தி இயந்திரங்களை பாகிஸ்தானுக்கு கொண்டு சென்றதாக ஒரு கப்பலை இந்திய அதிகாரிகள் மும்பை அருகே கைப்பற்றியதாக செய்திகள் வெளியானது. இதைத் தொடர்ந்து, அது அணுசக்தி திட்டத்திற்கான இயந்திரங்கள் இல்லை என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அலுவலகம் மறுத்துள்ளது.  ஜனவரி 23 அன்று சீனாவில் இருந்து சிஎம்ஏ சிஜிஎம் அட்டிலா என்ற கப்பல் பாகிஸ்தானுக்கு  புறப்பட்டது. அக்கப்பல் மும்பையின் நவா ஷேவா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) குழுவால்  ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அந்த கப்பலில் அணுசக்தி திட்டத்திற்கு பயன்படுத்தும் வகையில் எண் கட்டுப்பாட்டு இயந்திரம் (CNC)  இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.  ஆனால் இதை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. மேலும் அது கராச்சியில் இருந்து  ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை தயாரிக்கும் ஒரு நிறுவனத்திற்கு  கொண்டு செல்லப்பட்ட லேத் இயந்திரம் என்றும் விளக்கம் கொடுத்துள்ளது.  மேலும் அந்த இயந்திரத்தில் உள்ள விவரக்குறிப்புகள் அதனுடைய வணிகப் பயன்பாட்டை தெளிவாகக் குறிப்பிடுகிறது என்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் வெளிப்படையாக உள்ளன என்றும் அதற்கான பரிவர்த்தனை அனைத்தும் வெளிப்படையாக வங்கி வழி நடத்தப்பட்டது என்றும் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் வணிகப் பொருட்களை தன்னிச்சையாக கைப்பற்றியது  சர்வதேச சட்டங்களை மீறுவதாகும்  எனவும் கண்டித்துள்ளது.  இந்நிலையில்  அந்த இயந்திரம்  யாருக்காக எதற்காக  வாங்கப்பட்டுள்ளது என கண்டறிய விசாரணை  தொடர்ந்து நடந்து வருகிறது.