சிந்து நதியின் வெள்ளப் பெருக்கால் பாகிஸ்தானின் தென்பகுதி மேலும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று சிந்து மாகாண அரசின் செய்தித் தொடர்பாளர் முர்தாசா வகாப் எச்சரித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "வடக்கில் இருந்து வரும் வெள்ளப் பெருக்கு இன்னும் சில நாட்களில் மாகாணத்திற்குள் நுழையப் போகிறது. அவ்வாறு வரும் நீர்வரத்தை எதிர்கொள்ளும் வகையில் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒவ்வொரு நொடியும் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே போவதால், வெள்ளத்தைத் தடுக்கும் கட்டமைப்புகளும் சேதமடையும் வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வீடுகளை விட்டு வெளியேறியுள்ள மக்கள் சாலைகளில்தான் தங்கியிருக்கிறார்கள். நீர் இல்லாத இடமாக இப்போதைக்கு அவர்களுக்கு சாலைகள்தான் உள்ளன. வானிலை மையத்தின் கணிப்போ நல்ல செய்தியைத் தருவதாக இல்லை. செப்டம்பரில் மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், திடீர் வெள்ளப் பெருக்கு இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்கள். வட மேற்கு பஞ்சாப் மாகாணத்திலும், தெற்கு சிந்து மாகாணத்திலும் வழக்கத்தை விட அதிகமான மழைப் பொழிவு இருக்கப் போகிறது. திடீர் மழைப்பொழிவு, திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கிறது.
கடந்த 30 ஆண்டுகாலத்தில் பெய்த மழையின் சராசரியோடு ஒப்பிடுகையில் தற்போது 190 விழுக்காடு அதிகமான மழை பெய்துள்ளது. சிந்து மாகாணம்தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 30 ஆண்டு சராசரியோடு ஒப்பிட்டால் 466 விழுக்காடு அதிக மழைப் பொழிவு இருந்திருக்கிறது. இந்த மாகாணத்தின் பல பகுதிகள் தீவுகளைப் போன்று காணப்படுகின்றன. இதுவரையில் 400 குழந்தைகள் உள்ளிட்டு 1,190 பேர் இந்த இயற்கைச் சீற்றத்திற்குப் பலியாகியிருக்கிறார்கள் என்று அதிகாரபூர்வப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.