world

img

லாகூர் சந்தையில் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி – 20 பேர் படுகாயம்  

லாகூரில் அனார்கலி சந்தையில் இன்று குண்டு வெடித்ததில் 3 பேர் பலியாகியுள்ளனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  

இதுகுறித்து லாகூர் காவல்துறை செய்தித்தொடர்பாளர் ராணா ஆரிப் கூறுகையில், லாகூரின் பிரபல அனார்கலி சந்தை அருகேதான் இந்திய பொருள்கள் விற்கப்படும். இங்கு குண்டு வெடித்ததால் அருகில் உள்ள கடைகள் மற்றும் கட்டிடங்களின் கண்ணாடிகள் வெடித்து சிதறின.  மேலும் மோட்டார் சைக்கிளில் இருந்த நேரத்தைக் கட்டுப்படுத்தும் சாதனமே குண்டுவெடிப்புக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பிற்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் அரசாங்கத்திற்கும் பாகிஸ்தானின் தலிபான்களுக்கும் இடையேயான ஒரு போர் நிறுத்த உடன்பாடு, டிசம்பரில் முடிவுக்கு வந்தததை அடுத்து காவல்துறைக்கு எதிராக தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு நிகழ்வுகளும் தாக்குதல்களும் நடந்து வருகின்றன என்றார்.  

அதனைதொடர்ந்து காவல்துறை துணை இயக்குநர் முகமது அப்யாத் கூறுகையில், வெடிப்பின் தன்மையை நாங்கள் கண்டறிந்து வருகிறோம். குண்டுவெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தீவிரவாத தடுப்பு பிரிவு மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து குண்டுவெடிப்பின் தன்மையை ஆய்வு செய்து வருகின்றனர் என்று அவர் கூறினார்.

இதையடுத்து மாயோ மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் இப்திகார் தெரிவிக்கையில், ஒரு சிறுவன் உட்பட 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 20 பேர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவர் கூறினார். குண்டுவெடிப்புக்கு பிறகு அனார்கலி சந்தை முழுவதும் மூடப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.