நேபாளத்தின் திரிபுவன் பல்கலைக்கழக வளாகங்களில் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தல்களில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(ஐக்கிய மார்க்சிஸ்டு லெனினிஸ்டு) மற்றும் நேபாள காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்துள்ள மாணவர் அமைப்புகள் வெற்றி பெற்றுள்ளன.
அனைத்து நேபாள தேசிய சுதந்திர மாணவர்கள் அமைப்பானது, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(ஐக்கிய மார்க்சிஸ்டு லெவினிஸ்டு)யுடன் இணைந்ததாகும். மொத்தமுள்ள 44 வளாகங்களில் 19 வளாகங்களில் இந்த அமைப்பு வெற்றி பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேபாள காங்கிரஸ் கட்சியுடன் இணைந்துள்ள நேபாள மாணவர் அமைப்பு 18 வளாகங்களிலும், மாவோயிஸ்டு மையத்துடன் இணைந்து செயல்படும் மாணவர் அமைப்பு நான்கு வளாகங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
சிறிய அரசியல் கட்சிகளில் ஒன்றான ஜனதா சமாஜ்வாதி கட்சியின் மாணவர் அமைப்பு இரண்டு வளாகங்களிலும், மற்றொரு கடசியான ஜனாமத் கட்சியின் மாணவர் அமைப்பு ஒரு வளாகத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு வளாகங்களில் போட்டியின்றி பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டு வளாகங்களில் மட்டுமே கட்சி சார்ந்த மாணவர் அமைப்புகள் பொறுப்புக்கு வரவில்லை.
நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(ஐக்கிய மார்க்சிஸ்டு லெனினிஸ்டு), மாணவர் பேரவைத் தேர்தலிலும் தனது மாணவர் அமைப்பின் மூலம் தனிப்பெரும் சக்தியாக வெளிப்பட்டுள்ளது. மேலும், மாணவர் அமைப்புகளும் அரசியல் பங்கேற்பு உள்ளவர்களாகவே இருப்பதையும் இந்தத் தேர்தல் காட்டுகிறது.