ஜனாதிபதியைச் சந்திக்கச் செல்லும் முன்பாக பிரச்சந்தாவும், முன்னாள் பிரதமரும் நேபாள கம்யூனிஸ்ட்(ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் தலைவருமான கே.பி.ஓலியும் இணைந்து ஆதரவாளர்களைச் சந்தித்த காட்சி.
காத்மண்டு, டிச.26- நவம்பர் மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் திடீர் மாற்றமாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி - மாவோயிஸ்ட் மையத்தின் தலைவர் புஷ்ப குமார் தஹல் என்ற பிரச்சந்தா புதிய பிரதமராகப் பொறுப்பேற்கிறார். இடதுசாரிக் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட பிளவால் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) யின் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து தேர்தல் நடத்தப்பட்டது. பிரச்சந்தா தலைமையிலான மாவோயிஸ்டு மையம், நேபாள காங்கிரசுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிட்டது. இந்தக் கூட்டணி வெற்றி பெற்றாலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மாவோயிஸ்ட் மையமும் இழப்பைச் சந்தித்திருந்தது. இந்நிலையில், சுழற்சி முறையில் நேபாள காங்கிரசும், மாவோயிஸ்டு மையமும் பிரதமர் பொறுப்பைப் பகிர்ந்து கொள்வது என்று முடிவெடுத்தனர். இதில் யார் முதலில் பிரதமர் ஆவது என்ற பிரச்சனை எழுந்தது. முதலில் பிரச்சந்தா பிரதமர் என்பதை நேபாள காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்ததால், டிசம்பர் 25 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முடிவைச் சொல்லுமாறு அனைத்துக் கட்சிகளிடமும் ஜனாதிபதி வித்யாதேவி பண்டாரி தெரிவித்தார். இதையடுத்து, கூட்டணியிலிருந்து விலகி நேபாள கம்யூனிஸ்ட் (ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியுடன் கைகோர்ப்பது என்று மாவோயிஸ்ட் மையம் முடிவெடுத்தது. சுழற்சி முறையில் பிரதமர் பொறுப்பை பகிர்ந்து கொள்ள லாம் என்றும், முதலில் மாவோயிஸ்ட் மையத்திற்கு வாய்ப்பு வழங்குவது என்றும் முடிவெடுத்தனர். இந்தப் புதிய கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைந்துள்ளன.