world

img

நம்பிக்கையான நண்பராக திகழ்வோம் : ஈரானுக்கு சீனா ஆதரவு

நியூயார்க்,செப்.25-  ஈரான் எல்லைக்கு வெளியில் இருந்து தாக்குதலோ ஆபத்தோ ஏற்பட்டால் ஈரானுக்கு ஆதரவாகவும் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் சீன அரசு உறுதியாக இருக்கும் என  சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ உறுதி கொடுத்துள்ளார்

ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை  பாதுகாப்பதில் சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும். எப்போதும் ஈரானின் நம்பிக்கையான நண்பனாக சீனா திகழும் என அவர் பேசியதாக சீனா வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. 

நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற பொது அவை கூட்டத்திற்கு இடையே ஈரானின் புதிய ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் கொலைவெறித் தாக்குதலை துவங்கியுள்ள நிலையில் சீனாவின் உறுதியான ஈரான் ஆதரவு கருத்து வெளிப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் மீதான போரை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் ஈரான் இஸ்ரேலுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்த போதும் ஈரானுக்கான தனது ஆதரவை சீனா உறுதியாக வெளிப்படுத்தியுள்ளது.

ஈரான் மீது விதிக்கப்படும் எந்த ஒரு வகையிலான பொருளாதாரத் தடைகளையும் சீனா எதிர்ப்பதாகவும் வாங் யீ சுட்டிக்காட்டியுள்ளார்.

திங்கள் கிழமை முதல்   ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய கமாண்டர்கள், 50 குழந்தைகள் உட்பட 550 க்கும் மேற்பட்ட அப்பாவி  மக்களை  இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.