பெய்ஜிங், மார்ச் 31- உலகம் முழுவதும் ஒற்றுமைக்காக ஏங்கிக் கொண்டிருக்கையில், பிளவுவாதக் கருத்துக்களை விதைக்கும் நோக்கத்தில் "ஜனநாயகத்திற்கான உச்சிமாநாடு" ஒன்றை அமெரிக்கா கூட்டுகிறது.
இது குறித்து சீன ஊடகக்குழுமமான சின்குவா கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறது. பிளவுவாதம், தள்ளி வைத்தல் மற்றும் வெறுப்பு ஆகியவற்றை நாடுகளுக்கு இடையில் ஒற்றுமையின்மையை உருவாக்கப் பயன்படுத்துகிறார்கள். இரண்டாவது முறையாக இந்த ஜனநாயகத்திற்கான உச்சிமாநாட்டைக் கூட்டுகிறார்கள். ஆனால், இந்த மாநாட்டிற்கும், உண்மையான ஜனநாயகத்திற்கும் எந்தவிதத் தொடர்புமில்லை. சொல்லப்போனால், ஜனநாயக மதிப்பீடுகளுக்கு விரோதமாகவே இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது.
ஜனநாயகம் என்பது உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளுக்குமானதாகும். ஒரு சில நாடுகளுக்கு மட்டுமே சொந்தமானதில்லை. தனக்கு வேண்டிய நாடுகளை "ஜனநாயக நாடுகள்" என்றும், வேண்டாத நாடுகளை "ஜனநாயகமற்ற நாடுகள்" என்றும் அமெரிக்கா முத்திரை குத்தியிருக்கிறது. இத்தகைய அணுகுமுறை நடைமுறை சாத்தியமானதும் இல்லை; யாருக்கும் பலன் அளிப்பதாகவும் இல்லை.
தனது உண்மையான நோக்கத்தை மறைத்துக் கொண்டு இதுபோன்ற குழுவாதப் போக்கை உருவாக்கித் தனது மேலாதிக்கத்தைத் தக்க வைக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. ஜனநாயகம் என்று சொல்லிக் கொண்டு தனது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதே அவர்களின் திட்டமாகும். தாங்கள் சொல்வது மட்டும்தான் ஜனநாயகம் என்று அமெரிக்கா நிறுவப்பார்க்கிறது. ஆனால், உலகம் முழுவதும் பல்வேறு வகைகளில் தங்கள் நாட்டுக்குரிய ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் நடைபெறும் தேர்தல்கள் பணக்காரர்களின் விளையாட்டு என்றே சொல்லலாம். 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் ஒட்டப்பட்டிருந்த விலை 1,670 கோடி அமெரிக்க டாலராகும். 2018 ஆம் ஆண்டில் இவர்களின் தேர்தல் செலவு மதிப்பு 1,400 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. அமெரிக்காவில் அரசியல் நன்கொடைகளைக் கண்காணித்து வரும் ரிவீல் என்ற அமைப்பு இந்த விபரங்களைத் தொகுத்து அம்பலப்படுத்தியுள்ளது.
உள்நாட்டில் அதிருப்தி
பணம் படைத்தவர்களுக்கான அரசியலாக அமெரிக்க அரசியல் மாறியுள்ளது. பணக்காரர்கள் வசமே அதிகாரம் உள்ளது. அவர்கள் சொல்வதைக் கேட்டு அரசியல்வாதிகள் நடந்து கொள்கிறார்கள். தங்கள் நாட்டின் ஜனநாயகம் எப்படி இயங்குகிறது என்ற வினாவை கருத்துக் கணிப்பில் எழுப்பியிருக்கிறார்கள். 54 விழுக்காட்டினர்தான் திருப்தி தெரிவித்திருக்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பாக 90 விழுக்காடு அமெரிக்கர்கள் தங்கள் நாட்டின் ஜனநாயகத்தில் திருப்தி அடைந்திருந்தார்கள். இந்த ஆய்வை வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் மற்றும் மேரிலேண்டு பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தியுள்ளன.
ஒவ்வொரு நாடும் தனது அமைப்பை உருவாக்கிக் கொள்ளும் உரிமையைப் பெற்றிருக்கிறது. துரதிருஷ்டவசமாக, தனது ஜனநாயக அமைப்பைப் பிற நாடுகள் மீது திணிக்கம் அமெரிக்க முடிவால் படுமோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்காவின் ஜனநாயக அமைப்பு, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தனது மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கான ஒரு கருவியாகவே இந்த ஜனநாயகத்திற்கான உச்சிமாநாட்டை அமெரிக்கா ஏற்பாடு செய்கிறது.
இவ்வாறு தனது விமர்சனக் கட்டுரையில் சின்குவா பதிவு செய்துள்ளது.