world

img

கியூபா மீதான முற்றுகையை விலக்க இயக்கம்

மெக்சிகன் சிட்டி, பிப்.13- கியூபாவின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், அந்நாட்டின் மீது அமெரிக்கா விதித்துள்ள மனிதாபிமானமற்ற, சட்டவிரோத முற்றுகைக்கு எதிராகவும் மெக்சிகோவின் தலைமையில் இயக்கம் நடத்தப்படும் என்று அந்நாட்டின் ஜனாதிபதி ஆண்ட்ரூஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார் (அம்லோ) அறிவித்துள்ளார். 1960-களில் இருந்து கியூபா மீது சட்டவிரோதமான தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் தொடர்ந்து தீர்மானம் இயற்றப்பட்டும், தங்கள் தடைகளை விலக்கிக் கொள்ள அமெரிக்கா முன்வரவில்லை. இதுகுறித்துக் கருத்து தெரிவித்த அம்லோ, ‘‘கியூபா மீதான தடை மனிதத்தன்மையற்றது. அதை விலக்க நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைப்போம். இதற்கு எதிராகத் தீவிரமான இயக்கத்தை மெக்சிகோ நடத்தும் முன்மொழிவை கியூபாவின் ஜனாதிபதி மிகுவேல் டியாஸ்-கானெல் முன்பாக நான் வைக்கிறேன்.

அனைத்து நாடுகளையும் இதில் ஒன்றுபடுத்துவோம்’’ என்றார். கியூபா மற்றும் மெக்சிகோ ஆகிய இரு நாடுகளின் ஜனாதிபதிகளும் சந்தித்த போது இதற்கான ஆலோசனையை அம்லோ முன்வைத்திருக்கிறார். இதுபற்றி மேலும் கருத்து தெரிவித்த அவர், ‘‘அமெரிக்கா, வெகு விரைவில், கியூப மக்களுக்கு எதிரான நியாயமற்ற மற்றும் மனிதத்தன்மையற்ற இந்தத் தடைகளை விலக்கிக் கொள்ளுமாறு கோருகிறேன்’’ என்று வலியுறுத்தியுள்ளார். பாரக் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு, கியூபாவுடனான உறவை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்தது. 2015-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி, சில தளர்வுகளையும் செய்தார்கள். ஆனால், டொனால்டு டிரம்ப் பதவியேற்றபிறகு, தடைகள் மீண்டும் கொண்டுவரப்பட்டதோடு, கூடுதலாக 343 தடைகளும் விதிக்கப்பட்டன. ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் ஜனாதிபதியான பிறகும், தடைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை.