world

img

மரண அடிவாங்கியுள்ள மக்களின் வாழ்க்கைத்தரம் நெருக்கடியில் தவிக்கிறது ஐரோப்பா

எரிபொருள் தட்டுப்பாட்டால் அனைத்து வகையான பொருட்களின் விலைகளும் அதிகரித்து, ஐரோப்பிய மக்கள் பெரிதும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யா எடுத்துள்ள நடவடிக்கையால் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை அமெரிக்கா விதித்தது. இந்தத் தடைகளை வேறு வழியின்றி ஐரோப்பிய நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. அந்தத் தடைகளை ரஷ்யா மீது பிற நாடுகளும் திணிக்கின்றன. இதனால், தடை விதித்துள்ள நாடுகளே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் இல்லாமல் கடுமையாகத் திண்டாடும் இந்த நாடுகள், வரும் குளிர்காலத்தை ஒரு பெரிய கேள்விக்குறியோடு எதிர்கொள்ளப் போகின்றன.

யூரோ மண்டலத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு 9.1 விழுக்காடு பணவீக்கத்தை எட்டியுள்ளனர். எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் மேலும், மேலும் அதிகரித்து வருகின்றன. பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் மக்கள் பெரும் அளவில் போராட்டக் களத்தில் உள்ளனர். வரும் நாட்களில் நெருக்கடி அதிகரிக்கும் என்பதால், போராடும் மக்களின் எண்ணிக்கையும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வார இறுதியில் போர்ச்சுகல் தலைநகரமான பிரேக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்தும், அரசு உதவி உடனடித் தேவை என்றும் கோரிப் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எரிபொருள் மற்றும் மின்கட்டணங்கள் உயர்வுக்கு எதிராக இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டத்தை பிரேக் நகரம் இதுவரையில் பார்த்ததில்லை. 70 ஆயிரம் மக்கள் பங்கேற்றதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டியிருக்கும் என்று போராடி வரும் அமைப்புகளின் தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் செக் குடியரசின் பணவீக்கம் 17.5 விழுக்காடாக உள்ளது. வரும் மாதங்களில் இது 20 விழுக்காட்டைத் தொடும் என்றும், ஒருவேளை குறைந்தால், அத்தகைய குறைவு 2023 ஆம் ஆண்டில்தான் நிகழும் என்றும் செக் குடியரசின் தேசிய வங்கி தெரிவித்துள்ளது. கடுமையான வேலையிழப்பு நெருக்கடியை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.

கொந்தளிப்பு

பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் அனைத்துத் துறைகளில் பணிபுரிபவர்களும் வேலை நிறுத்தங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். போக்குவரத்துத்துறை, சுகாதாரம் மற்றும் விமான சேவைத்துறை ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்கள், தங்கள் குடும்பங்களைக் கவனித்தும் கொள்ளும் வகையிலான ஊதியம் இல்லை என்று கூறி, நெருக்கடியை சமாளிக்க உடனடியாக ஊதிய உயர்வு அவசியம் என்று போராடி வருகீறார்கள்.

இந்தப் போராட்டங்களுக்கு செவி சாய்க்காவிட்டால், பதற்றமான சூழல் உருவாகும் என்று பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்தது. இந்த நான்கு நாடுகளிலும் தரமான வாழ்க்கைக்கான செலவு என்ற அம்சம் விவாதத்திற்கு முன்வந்திருக்கிறது. இதோடு நார்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளும் மக்களின் கோபத்தைத் தணிக்கப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

படுமோசமான குளிர்காலத்தை நோக்கி ஐரோப்பிய நாடுகள் பயணிக்கின்றன என்று அகதா டிமாரைஸ் என்ற பொருளாதார நிபுணர் கூறியுள்ளார். எண்ணெய் விலை சரிந்து வருவதால், அக்டோபர் மாதத்தில் விலையை அதிகரிக்கும் வகையில் உற்பத்தியைக் குறைக்க பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கழகம்  முடிவு செய்துள்ளது. மந்த நிலையை நோக்கி ஐரோப்பிய நாடுகள் சென்று கொண்டிருப்பதாகவும் அகதா டிமாரைஸ் கூறியுள்ளார்.

;