கோபன்ஹேகன். நவ.3- ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க்கில் நடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் இடதுசாரிகள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியுள்ளனர்.
2019ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து சமூக ஜனநாயகக்கட்சி ஆட்சியமைத்தது. ஜூலை 2022ல், கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான சமூக தாராளவாதக்கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்போவதாகக் கூறியது. அக்கட்சிக்கு 16 உறுப்பினர்கள் இருந்ததால், சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவரும், கூட்டணி சார்பில் பிரதமர் பொறுப்பை ஏற்றிருந்தவருமான மெட்டே பிரெடெரிக்சன் நாடாளுமன்றத்தைக் கலைக்கப் பரிந்துரைத்தார்.
நவம்பர் 1ஆம் தேதியன்று பொதுத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 179 தொகுதிகளில் 50 தொகுதிகளில் சமூக ஜனநாயகக்கட்சி வெற்றி பெற்றது. கடந்த முறை 48 இடங்களை வென்றிருந்த அக்கட்சி தற்போது கூடுதலாக இரண்டு இடங்களைப் பெற்றிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான வென்ஸ்டிரே பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. கடந்த முறை 43 இடங்களில் வென்றிருந்த அக்கட்சி தற்போது 23 இடங்களையே பெற்றுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியின் பின்னடைவு வேறு சில வலதுசாரிக் கட்சிகளுக்கு சாதகமாக இருந்துள்ளது. புதிய இரண்டு கட்சிகள் 30 இடங்களைப் பிடித்திருக்கின்றன. திடீர் பொதுத் தேர்தல் வருவதற்குக் காரணமாக இருந்த சமூக தாராளவாதக்கட்சி 9 இடங்களை இழந்துள்ளது.
பலிக்காத கருத்துக்கணிப்புகள்
ஆளும் இடதுசாரிக் கூட்டணிக்கு பெரும்பான்மை வராது என்றும், வலதுசாரிகள் தலைமையிலான ஆட்சி வரும் என்றும் கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து சொல்லி வந்தன. ஆனால், மீண்டும் பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. இருப்பினும், கூடுதல் எண்ணிக்கையிலான கட்சிகளுடன் ஆட்சியமைக்க பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மக்கள் நல அரசு என்ற கோட்பாட்டுடன் கடந்த அரசால் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்கள் தொடர வேண்டும் என்பதே மக்கள் விருப்பமாக இருந்திருக்கிறது. இதனால்தான் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான கிரீன் அணி ஆகிய இரண்டிற்கும் கடந்த முறையை விட கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளன.