world

img

40 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்தில்லாமல் அவதி ;முதலாளித்துவத்தின் கோர முகம் ஏமனில் அம்பலம்

அமெரிக்க ஆதரவுடன் சவூதி அரேபியா மற்றும் அதன் கூட்டாளி நாடுகள் முற்றுகையிட்டு தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவதால் ஏமன் குழந்தைகள் ஊட்டச் சத்தில்லாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஏமனில் ஏற்பட்ட அரசு மாற்றத்தை அமெரிக்கா, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் ஏற்க மறுத்தன. தங்கள் கைப்பாவை அரசை மீண்டும் அங்கு அமர்த்தும் நோக்கத்தில் மேலும் சில நாடுகளைச் சேர்த்துக் கொண்டு தாக்குதல்களைத் தொடங்கின. ஐக்கிய நாடுகளை அவையின் போர் நிறுத்த உடன்பாடுகள் நடைமுறைக்கு வந்தாலும், அதை மீறும் நடவடிக்கைகளில் அன்றாடம் சவூதி அரேபியாவும் அதன் கூட்டாளி நாடுகளும் செயல்பட்டு வருகின்றன. அத்தியாவசியப் பொருட்கள் ஏமனைச் சென்றடைய விடாமல் பார்த்துக் கொள்வதில் படைகள் கவனமான உள்ளன.

தொடர் உயிரிழப்புகள் இருந்தாலும், ஏமனில் உள்ள அரசைக் கவிழ்க்கும் அமெரிக்க மற்றும் சவூதி அரேபியாவின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஆனால், எல்லைப்பகுதிகளில் அமைந்துள்ள பல எண்ணெய் வளங்களை அமெரிக்கா, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கைப்பற்றியுள்ளன. இந்த வளங்களைக் கொள்ளையடிப்பதில் இந்த நாடுகள் மும்முரமாக இருக்கின்றன. ஏமனின் எண்ணெய் வளம்தான் தங்கள் குறி என்பதில் இவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

இந்நிலையில், ஏமனில் ஊட்டசத்துக்குறைவுப் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. பட்டினி மற்றும் குணமாக்கக்கூடிய காலரா போன்ற சில நோய்களால் லட்சக்கணக்கான குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் உருவாகியுள்ளது. நிலைமையை நேரில் பார்வையிட்ட பல சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியளிக்கும் பல்வேறு தகவல்களைத் தருகிறார்கள். சாதாரணமாக மூச்சு விடுவதற்குத் தேவையான ஊட்டச்சத்து கூட இல்லாமல் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்தக் குழந்தைகளுக்கு சிகிச்சை பெறத் தேவையான பண வசதியும் அக்குழந்தைகளின் குடும்பங்கள் வசம் இல்லை.

சில குழந்தைகளின் நெஞ்செலும்பு உடலை விட்டு வெளியே வந்துவிட்டது. இதற்கான அறுவை சிகிச்சை செய்ய செலவாகும். அத்தகைய செலவை செய்யுமளவுக்கு பெற்றோரிடம் வசதி இல்லை. அந்த வசதிகளைச் செய்து தரும் நிலையில் தற்போதைய ஏமன் அரசும் இல்லை. மருத்துவ உபகரணங்களை வேறு நாடுகளிலிருந்து வரவழைக்கும் ஏமன் அரசின் முயற்சிக்கு சவூதி அரேபியா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் ராணுவம் தடையாக இருக்கிறது. ஏமனில் தற்போது உள்ள நிர்வாகம் சரணடையும் வரையில் அந்நாட்டின் வளர்ச்சியிலோ அல்லது மக்களின் பாதுகாப்பிலோ எந்தவித உதவியையும் செய்ய மாட்டோம் என்பதில் இவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

உலகிலேயே முதலிடம்

அதிகமான அளவில் ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கையில் ஏமன் முதலிடத்தில் இருக்கிறது. அந்நாட்டின் சுகாதாரத்துறை அலுவலர்களின் கருத்துப்படி, 40 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் வாடிக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்க ஆதரவுடன் சவூதி அரேபியா சுமத்தியுள்ள போரால், ஏமன் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது. இந்த 40 லட்சம் பேரில், சுமார் 50 ஆயிரம் பேர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்றும் மருத்துவ வசதிகள் ஏமனில் தற்போது இல்லை.

சவூதி அரேபியாவின் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து ஏமன் மக்களைக் கொன்று குவிக்கிறது. ஆனால் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட, தங்கள் முற்றுகை மூலம் மருத்துவ நெருக்கடியை சவூதி அரேபியா உருவாக்கியுள்ளதில்தான் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன. ஏமனில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவி நிறுவனங்கள், ஏமன் குழந்தைகளில் சராசரியாக ஐந்தில் ஒரு குழந்தைக்கு உடனடி மருத்துவ உதவி தேவை என்று எச்சரிக்கைக் குரலை எழுப்பியுள்ளன.