world

img

உலகளவில் 4 கோடி பேர் எச்ஐவியால் பாதிப்பு நிமிடத்திற்கு ஒருவர் மரணம்

மூனிச், ஜூலை 23- உலகம் முழுவதும் 2023 ஆம் ஆண்டு  கிட்டத்தட்ட 4 கோடி மக்கள்  எச்ஐவி பாதிப்புடன் வாழ்ந்து வருகின்றனர் என ஐநா அவை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இதில் 90 லட்சம் பேர் சிகிச்சை பெறவில்லை எனவும்  சிகிச்சை பெறாத காரணத்தால் ஒவ்வொரு நிமிடமும்  ஒருவர்  மரணமடைகிறார்  எனவும் தெரிய வந்துள்ளது. 

25 ஆவது சர்வதேச எச்ஐவி மாநாடு ஜெர்மனியில் காணொலி வாயிலாக நடந்து வருகிறது. இந்த மாநாடு ஜூலை 26 அன்று நிறைவடைகிறது. மாநாட்டையொட்டி ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் 2023 ஆம் ஆண்டில் மட்டும் எய்ட்ஸ் தொடர்பான நோய்களால் சுமார் 6 லட்சத்து 30 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.

உலகம் முழுவதும் எச்ஐவி பரவலை கட்டுப்படுத்த ஐநா அவை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இச்சூழலில்  மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பா, மத்திய ஆசியா , லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் எச்ஐவி கட்டுப்படுத்தப்படுவது குறைந்து விட்டது என  ஐநா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு 45 சதவீதமாக இருந்த எச்ஐவி தொற்று  ஊசி மூலம் போதை மருந்துகளை எடுத்துக்கொள்வது, பாதுகாப்பற்ற பாலியல் உறவு உள்ளிட்ட காரணங்களால்  2023 ஆம் ஆண்டு  55 சதவீதமாக  அதிகரித்துள்ளது.  உலகம் முழுவதும் விளிம்பு நிலை மக்கள் மத்தியில் தான் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது.

எச்ஐவி அற்ற உலகத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இயங்கி வரும் எச்ஐவி/எய்ட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கூட்டுத் திட்ட (UNAIDS) அமைப்பின் நியூயார்க் அலுவலகத்தின் இயக்குநர் சீசர் பேசும் போது  “எச்ஐவியால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு  போடப்படும் இரண்டு டோஸ் ஊசிக்கு ஒவ்வொரு ஆண்டும்  33 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய்  ( 40,000 டாலர்கள் ) செலவாகும்.” இதன் காரணமாக  பணக்காரர்கள் மட்டுமே மருந்து எடுத்துக்கொள்ள முடியும். பாதிக்கப்பட்டுள்ள விளிம்பு நிலை மக்கள் யாரும் மருந்துகளை எடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள மக்கள் கடுமையான பாதிப்பைச் சந்திப்பார்கள். இதனை கருத்தில் கொண்டு மருந்துகள்  குறைந்த விலையில் கிடைக்குமாறு உற்பத்தியாளரிடம் எச்ஐவி/எய்ட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கூட்டுத் திட்ட அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.