தற்போது நடைபெற்று வரும் போரை ரஷ்யா துவக்கவில்லை என்றும், மாறாக, போரை முடிவுக்குக் கொண்டு வரவே முயற்சிக்கிறது என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் நிலவி வந்த மோசமான நிலைமை பற்றி ஏற்கனவே நாங்கள் தெரிவித்து வந்தோம் என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா சகாரோவா குறிப்பிட்டார். இது குறித்து மேலும் பேசிய அவர், "பதட்டத்தைத் தணிக்க எந்த வித முயற்சி எடுக்கப்பட்டாலும் அதை மேற்கத்திய நாடுகள் நிராகரித்தன. ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனை நிறுத்தினார்கள். தற்போதைய போருக்கு அதுவே காரணம்" என்றார்.
ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வருகிறது. இந்தப் போரை ரஷ்யா உருவாக்கவில்லை என்று கூறிய அவர், "பல ஆண்டுகளாக குண்டுகளுக்கு மத்தியில் டான்பாஸ் மக்கள் வாழ்ந்து வந்தனர். இந்தக் காலகட்டத்தில் இது போன்ற அட்டூழியங்களுக்கு எதிராக எழுமாறு சர்வதேச சமூகத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இதுவரையில் அந்தப்பகுதியில் 13 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ரஷ்யாவின் ந்டவடிக்கையைக் கண்டிக்கும் நாடுகள், இந்தப்பகுதி மீது நடத்தப்பட்ட கொடுமைகளைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை" என்றார்.
2014 ஆம் ஆண்டு நடந்த சட்டவிரோதக் கலகம் பற்றி பல நாடுகள் மவுனம் சாதித்தன. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, போலந்து, லிதுவேனியா, எஸ்டோனியா, லாட்வியா மற்றும் பிற நேட்டோ உறுப்பு நாடுகள் நேரடியாகவே பங்கேற்றன. சொந்த மக்களை அழிக்கும் ஆட்சியாளர்களை இவர்கள் ஆதரித்தார்கள் என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் ராணுவம் வீசும் குண்டுகளிலிருந்து காப்பாற்றுங்கள் என்று டான்பாஸ் பகுதி மக்கள் கேட்டுக் கொண்டதால்தான் ரஷ்யா நடவடிக்கை எடுத்து வருகிறது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் குறிப்பிட்டதை செய்தித் தொடர்பாளர் சுட்டிக்காட்டினார். மேலும், உக்ரைன் பகுதிகளை ஆக்கிரமிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று புடின் சொன்னதையும் வெளிப்படுத்தினார்.
ரஷ்ய ராணுவச் செய்திக் குறிப்புகளின்படி, உக்ரைன் நகரங்கள் தாக்கப்படவில்லை. பொதுமக்களின் உயிர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. மக்கள் குடியிருக்கும் பகுதிகளின் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை. ஆனால், மேற்கத்திய ஊடகங்கள் பொய்யான செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. உலகின் பல பகுதிகளில் இருக்கும் செய்தி நிறுவனங்களும் இவர்கள் தரும் செய்திகளையே வெளியிடுகின்றன.