world

img

இலங்கை கலவரம்: இதுவரை 8 பேர் பலி, 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்

இலங்கை கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.  

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார  நெருக்கடியால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுமுதல் இலங்கையில் இரண்டாவது முறையாக அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.  

இந்த நிலையில், இலங்கையில், மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியிலிருந்து திங்களன்று ராஜினாமா செய்தார். இதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியிலிருந்து விலகியது தொடர்பாக நேற்றிரவு அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இதையடுத்து அவரது ஆதரவாளர்கள், இலங்கையில் போராடி வரும் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் இலங்கையில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.

இலங்கை முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், மகிந்த ராஜபக்சேவின் வீடு, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவின் வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டது. மேலும் அரசியல்வாதிகளின் வீடுகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  

இந்த வன்முறையில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.