லண்டன், பிப்.11- போதிய வருமானம் இல்லாத நிலையில் தங்களின் ஊதியத்தை அதிகரிக்குமாறு கோரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை பிரிட்டனில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உக்ரைன் விவகாரம் வெடித்ததில் இருந்து பிரிட்டனில் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகிய பிரச்சனைகள் மக்களை நெருக்கடியில் தள்ளியுள்ளது. அமெரிக்காவின் தடைகளை அப்படியே பின்பற்றியதுதான் இந்த நெருக்கடிக்குக் காரணம் என்றாலும், மக்களின் நிலையை மேம்படுத்த ரிஷி சுனாக் தலைமையிலான வலதுசாரி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொழிலாளர்கள் மத்தியில் நிலவும் கொந்தளிப்பு பற்றிப் பேசிய தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான மைக் கிளான்சி, “தொழிலாளர்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்த வேண்டாம் என்று பழமைவாத அமைச்சர்களைக் கேட்டுக் கொள்கிறோம். ஊதியம் குறித்த பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும். ஊதியத்தின் மதிப்பு 2010 ஆம் ஆண்டில் இருந்து சரிந்து வருகிறது. அதைத் தடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். ஆயிரக்கணக்கான மருத்துவத்துறை ஊழியர்கள், பல்கலைக்கழகப் பணியாளர்கள், ஓய்வூதிய மற்றும் சுற்றுச்சூழல் துறை ஊழியர்கள் ஆகியோர் வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் விடுத்த அழைப்பை ஏற்றிருக்கிறார்கள். விலை உயர்வுக்கு ஏற்ப தங்கள் ஊதியத்தை நிர்ணயிக்க நிர்வாகங்கள் மறுப்பதால் தங்களுக்கு வேலை நிறுத்தம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அந்தத் துறைகளில் உள்ள தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.