world

img

பொலிவிய பொருளாதாரத்தில் முன்னேற்றம்

லா பாஸ், ஜூலை 1- இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கம் பொலிவியாவில் அமைக்கப்பட்ட பிறகு அந்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியைக் கண்டதோடு, விலைவாசியும் நிலையானதாக மாறியிருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி இவோ மொரேல்ஸ் ஆதரவு பெற்ற இடதுசாரி வேட்பாளர் லூயிஸ் அர்ஸ் வெற்றி பெற்றார். அதற்கு முன்பு சட்டவிரோதமாக ஆட்சியைக் கைப்பற்றியிருந்த அமெரிக்க ஆதரவு பெற்ற ஆட்சியாளர்கள் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து வைத்திருந்தனர். கொரோனா பாதிப்பையும் மீறி மக்கள் நலக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி பொருளாதாரத்தை சரி செய்வதில் இடதுசாரிகள் வெற்றி பெற்றுள்ளனர். செய்தியாளர்களைச் சந்தித்த பொலிவியாவின் திட்டத்துறை அமைச்சர் செர்ஜியோ கியுசிகான்கி, “எங்கள் நாடு பொருளாதாரத்தில் ஏற்றத்தைக் கண்டு வருகிறது. விலைவாசியை நிலையாக வைத்திருப்பதில் வெற்றி கண்டுள்ளோம். பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வேலையின்மையைக் குறைத்திருக்கிறோம். உலகம் முழுவதும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. அரசின் பல்வேறு நடவடிக்கைகளே இந்த வெற்றிக்குக் காரணம்” என்றார்.

வேலையின்மையைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் சமூக உற்பத்தி மாதிரித் திட்டம் பெரும் பலனைத் தந்துள்ளது. கடந்த ஆண்டை விட 4.2 விழுக்காடு அளவிற்கு வேலையின்மை குறைக்கப்பட்டது. ஜூலை 2020ல் வேலையின்மை 11.6 விழுக்காடாக இருந்தது. ஒரு ஆண்டுக்குப் பிறகு, இது 7.4 விழுக்காடாகக் குறைந்தது. வலதுசாரிகளின் மக்கள் விரோதக் கொள்கைகளை திரும்பப் பெற்ற இடதுசாரிகள் மக்களின் மீதிருந்த சுமையைக் குறைத்திருக்கிறார்கள். இடதுசாரிகளால் கொண்டு வரப்பட்ட “வறுமைக்கு எதிரான உறுதிச்சீட்டு” என்ற திட்டம் வறுமை ஒழிப்பிலும் பெரும் பங்கை ஆற்றியுள்ளது. பொது முதலீடுகளால் உருவாக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் வேலைகளை உருவாக்கியது. இவோ மொரேல்ஸ் ஜனாதிபதியாக இருந்தபோது இந்தத் திட்டங்கள் நடைமுறையில் இருந்தன. ஆனால், சட்டவிரோதமாக ஆட்சியைக் கைப்பற்றிய வலதுசாரிகள் இந்தத் திட்டங்களை நீக்கியிருந்தனர். வேலையின்மை அதிகரித்தது. தற்போது திட்டங்கள் மீண்டும் கொண்டு வரப்பட்டதால் வேலைகள் உருவாகியுள்ளன.