கொழும்பு, ஜூலை 19- சர்வதேச நாணய நிதிய (ஐஎம்எஃப்) கடன் காரணமாக இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறை சிறிது சிறிதாக சிதைக்கப்பட்டு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சர்வதேச நாணய நிதியம் வளரும் நாடுகளுக்கு கடன் கொடுத்து தனது கடன் பொறியில் சிக்க வைத்து வருகிறது. கடன் பெற்ற நாடுகளின் நவீன தாராளமயக் கொள்கைகளை திணித்து பொதுத் துறைகளில் தனியார் முதலீட்டை அதிகரிப்பதுடன் அந்நாடுகளின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் சிதைக்கிறது. ஏற்கனவே இலங்கை கடன் பொறியால் தங்கள் பொருளாதாரச் சமநிலையை இழந்து விட்டது. இவ்வாறான சூழலில் இலங்கையின் சுகாதாரத் துறை சிதைக்கப்பட்டிருக்கும் செய்தி வளரும் நாடுகளுக்கு நவீன தாராளமயத்தின் ஆபத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் சிதைந்த பிறகு இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்குச் செல்ல விண்ணப்பித்து வரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 1700 மருத்துவர்கள், 2,528 மேற்பட்ட செவிலியர்கள் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர். உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்படி 10,000 பேருக்கு 44.5 பொது சுகாதார ஊழியர்கள் இருக்கவேண்டும். ஆனால் இலங்கையில் 37.5 ஊழியர்கள் தான் உள்ளனர். ஐஎம்எஃப் நிபந்தனையினால் இலங்கை அரசு பொதுச் செலவினங்களை கடுமையாக குறைத்தது. இதனால் பொதுச் சுகாதாரம் மற்றும் கல்வி பாதிக்கப்பட்டது. இதய அறுவைச் சிகிச்சைக்காகக் கூட மக்கள் ஆறு மாதங்களுக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகள் எதுவும் அரசு மருத்துவ மனைகளில் கிடைப்பதில்லை எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர். இது போன்ற காரணத்தால் பல ஆயிரம் நோயாளிகள் முழுமையான மருத்துவ சேவை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தனியார் துறைகளில் மருந்துக்கு எந்த தட்டுப்பாடுகளும் இருப்பதில்லை. அவை பெரும் வளர்ச்சியடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.