world

img

காலத்தை வென்றவர்கள் அபானிநாத் முகர்ஜி

இ ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான அபானிநாத் முகர்ஜி 1891 ஜூன் 3 அன்று ஜபல்பூரில் பிறந்தார். அபானி முகர்ஜி என்றும் அழைக்கப்படும் இவர், பள்ளிப் படிப்பை  முடித்த பிறகு அகமதாபாத்தில் நெச வாளராகப் பயிற்சி பெற்றார். பின்னர், 1912 இல் நெசவுத் தொழில் குறித்து படிக்க ஜப்பான் மற்றும் ஜெர்மனிக்கு சென்று, அங்கு சோசலிசம் குறித்து தெரிந்து கொண்டார். அதே ஆண்டு டிசம்பரில் கொல்கத்தாவுக்கு திரும்பிய அபானி, மற்றொரு பருத்தி ஆலையில் பணிபுரிந்தார்.

1914 இல் ராஷ் பிகாரி போஸை சந்தித்து, புரட்சிகர இயக்கத்தில் சேர்ந்தார். 1915 இல் புரட்சியாளர்களுக்கான ஆயுதங்களைப் பெற ஜப்பானுக்கு அனுப்பப்பட்டார். அந்தாண்டு செப்டம்பரில் இந்தியாவுக்கு திரும்பும் போது, சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து தப்பித்த அபானி, இந்தோனேசிய மற்றும் டச்சு புரட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டு, கம்யூனிஸ்ட்டாக மாறினார். 

1920 இல் கம்யூனிஸ்ட் அகிலத்தின் 2 ஆவது காங்கிரசில் பங்கேற்க முகர்ஜி ரஷ்யா சென்ற போது, அங்கு எம்.என்.ராயுடன் இணைந்து ஒரு ஆவணத்தை தயாரித்தார். இந்த ஆவணம் 1920 ஜூன் 24 அன்று ‘கிளாஸ்கோ சோசலிஸ்ட்-டில் இந்திய கம்யூனிஸ்ட் அறிக்கை’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1920 அக்.17 அன்று தாஷ்கண்டில் நிறுவப்பட்டது. இதை நிறுவியதில் ராய் மற்றும் அபானி முகர்ஜி முதன்மையானவர்கள். பிறகு, முகர்ஜி இந்திய இராணுவப் பள்ளி யின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார், பிரிட்டிஷ் காலனி ஆட்சியை எதிர்த்துப் போராட, ஆயுதப் படைகளுக்கு பயிற்சி அளிக்கும் பணியை மேற்கொண்டார். அதே ஆண்டு, முகர்ஜி ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் (போல்ஷ்விக்குகள்) உறுப்பினராகவும் ஆனார்.

மேலும் 1921 இல் முகர்ஜி, மலபார் எழுச்சி பற்றிய ஒரு ஆவணத்தை உருவாக்கி, அதை லெனினுக்கு அனுப்பினார். 1922 இல், ராய் மற்றும் முகர்ஜி இருவரும் இணைந்து ‘இந்தியா இன் ட்ரான்சிஷன்’ என்ற புத்தகத்தை எழுதினர். இது 1857-இன் இந்தியக் கிளர்ச்சியின் மார்க்சிய பகுப்பாய்வு ஆகும்.

1922 டிசம்பரில், இந்தியா திரும்பிய அபானி முகர்ஜி, வங்காளத்தில் பல்வேறு  கம்யூனிஸ்ட் குழுக்களையும் தலைவர்களை யும், காங்கிரசின் கயா மாநாட்டில் எஸ்.ஏ. டாங்கேயையும் சந்தித்தார். சென்னை வந்து சிங்காரவேலரை சந்தித்து, அவரது இந்துஸ்தான் லேபர் கிசான் கட்சியை உருவாக்கவும், அறிக்கை தயாரிக்கவும் உதவினார். பின்னர் சோவியத் திரும்பினார்.

1930-களில், முகர்ஜியின் பெரும்பாலான பணிகள் கல்வி சார்ந்தவையாக இருந்தன. இவர் கம்யூனிஸ்ட் அகாடமியில் பணியாற்றி னார். கீழை தேசத் தலைவர்கள் சங்கத் தலைவராகவும் செயல்பட்டார். இவர் 1937 அக்.28 அன்று காலமானார்.