தமிழகத்தின் “சமய நல்லிணக்க பூமி” என போற்றப்படும் நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்காவின் ஆண்டு பெருவிழாவான கந்தூரி விழா நடைபெற்றது. இதில் நாகப்பட்டினம் மாவட்டம் மட்டுமல்லாது, மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டனர். “தேச ஒற்றுமையை பார்க்க வேண்டுமானால் நாகூர் தர்காவிற்கு சென்று பார்” என்று கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பாடியுள்ளார். ‘நாகூர் ஆண்டவர்’ என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் (இயற்பெயர்: அப்துல் காதர் மாணிக்பூர்) நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு, நாகூர் தர்காவின் 466 ஆம் ஆண்டு கந்தூரி விழா, கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இக்கொடியை, பர்மா மக்கள் தங்கள் கை வண்ணத்தில், 5 அடி அகலம், 45 அடி நீளம் என்ற அளவில் தயார் செய்து, ஆண்டுதோறும் அனுப்பி வைக்கின்றனர். விமானத்தின் மூலம் கொடி வரவழைக்கப்பட்டு பெரிய மனோராவில் ஏற்றப்படுகிறது. தஞ்சையை ஆண்ட அச்சுதப்ப நாயக்க மன்னரின் நோயை குணமாக்கியதற்கு பிரதிபலனாக நிலங்கள் கொடையாக வழங்கப்பட்டு, தர்காவும் கட்டிக் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தர்காவிற்கு ஆயிரம் புறாக்கள் வழங்கியதாகவும், அதற்கு உணவாக நெல் பயிரிட, தற்போது திருமருகல் அருகே உள்ள புறாகிராமம் என்ற ஊராட்சியை தானமாக வழங்கியதாகவும் கூறப்படுகிறது. நாகை மாவட்டத்தின் மிக முக்கிய விழாவாகவும், சிக்கல் சிங்காரவேலர் கோவில், வேளாங்கண்ணி மாதா கோவில், நாகூர் தர்கா என மும்மதங்களும் சங்கமிக்கும் முக்கிய விழாவாகவும் இது கருதப்படுகிறது.
கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊர்வலம் நாகை யாஹூசைன் பள்ளிவாசலிலிருந்து துவங்கியது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலத்தை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், மாவட்ட ஆட்சியர் மரு.அருண் தம்புராஜ், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நாகப்பட்டினத்திலுள்ள பழனி ஆண்டவர் சத்திரத்தில் சந்தனம் வைக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சந்தன கூடு, நாகூர் தர்கா நோக்கி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
ஸ்தூபி இசை நடனத்துக்கு ஏற்றவாறு கோலாட்டம், தாரை தப்பட்டைகள், நையாண்டி மேளம், பேண்டு வாத்தியங்கள் என கோலாகலமாக நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலம் அதிகாலை 4 மணிக்கு நாகூர் தர்கா வந்தடைந்தது. பின்னர் நாகூர் ஆண்டவர் சமாதியில் நடைபெறும் சந்தனம் பூசும் வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாகூர் தர்கா சந்தனக்கூடு மற்றும் சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு நாகை மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு செவ்வாயன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
- ஆதி.உதயகுமார்