கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் காஷ்மீர் பைல்ஸ் திரையிடப்பட்டிருப்பது கடும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இது உலக அரங்கில் பேசு பொருளாக மாறி உள்ளது.
பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் உருவான படம் `தி காஷ்மீர் ஃபைல்ஸ்.’ இதில், அனுபம் கெர், பல்லவி ஜோஷ், பாஷா சும்ப்லி, தர்ஷன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்தத் திரைப்படம், 1990-களின் காலகட்டத்தில் காஷ்மீரில் நடந்த மோதல் குறித்து உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் வெளியானபோதே, இந்துக்களை இஸ்லாமியர்கள் தாக்குவது போன்றும், இந்து-இஸ்லாமியர்களுக்கிடையே வெறுப்புணர்வைத் தூண்டும்விதமாக இருப்பதாகவும் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. இந்த திரைப்படம் வெளியான போதும் கடும் சர்ச்சைகள் எழுந்தது.
இதற்கிடையில் `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைப் பார்த்த பிரதமர் மோடி, எரியும் தீயில் எண்ணெய் வார்ப்பது போன்று, இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார். இதைத்தொடர்ந்து இந்த திரைப்படத்திற்கு பாஜக ஆளும் மாநிலங்களில் வரி விலக்குகள் அளிக்கப்பட்டன. பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் அரசு அலுவலர்கள் இதனை காண விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. பிரதமர் மற்றும் பாஜக ஆளும் மாநில அரசின் வெறுப்பை விதைக்கு இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்களும் அறிவு ஜீவிகளும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
படம் வெளியான போதே சர்ச்சையைக் கிளப்பியதால் சிங்கப்பூர் இத்திரைப்படத்தைத் திரையிடவே மறுத்துவிட்டது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த தி காஷ்மீர் பைல்ஸ் இயக்குநரின் நிகழ்ச்சியும் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கோவா மாநில அரசுடன் ஒன்றிய ஒளிபரப்புத்துறை அமைச்சகம் இணைந்து நடத்தும் 53வது திரைப்பட விழா கடந்த 20ம் தேதி துவங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த விழாவில் 79 நாடுகளைகளில் வெளியான 280 க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டன. இதில் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படமும் திரையிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று நடந்த நிறைவு விழாவில் உலக புகழ் பெற்ற சினிமா பிரபலங்களும் ஒன்றிய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய திரைப்பட விழாவின் தேர்வுக்குழு தலைவர் நடாவ் லேபிட் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் குறித்து வெளிப்படையான விமர்சனத்தை முன் வைத்தார். அது வெறுப்புணர்வை பரப்பும் இழிவான படம் என்றும், பெருமை மிகுந்த கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில் பொறுத்த மற்ற இந்த படத்தை தேர்வு செய்தது அதிர்ச்சி தருவதாக உள்ளது என்றும் குற்றம் சாட்டினார். மேலும் இந்த திரைப்படத்தை பார்த்தது எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சியும் மன உளைச்சலையும் தருகிறது என்றார்.
நடாவ் லேபிட் இஸ்ரேலில் பிறந்தாலும் பாலஸ்தீன மக்களுக்காக பல வகைகளில் குரல் கொடுத்தவர். பாலஸ்தீன் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள், அந்நாட்டு சிறுவர்கள் கொல்லப்பட்டது, ஏவுகணை தாக்குதல்கள், காசா எல்லை பிரச்சனை, பாலஸ்தீனியர்களின் உரிமைகள் குறித்து பேசி உள்ளார். சர்வதேச அளவில் கவனிக்கப்படும் இயக்குநரான லாபிடின் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் மீதான இக்கருத்து உலகளவில் பேசுபொருளாகி உள்ளது.