world

img

பிச்சை எடுக்காத குறையாக கெஞ்சிய அமெரிக்கா

டெஹ்ரான், டிச.8- ஆகஸ்ட் மாதத்தில் செங்கடலில் எல்லை மீறி பயணித்து வந்த அமெரிக்கக் கப்பலை மீட்கக் கெஞ்சினார்கள் என்று ஈரானின் கடற்படைத் தளபதிகளில் ஒருவரான ஷாஹ்ரம் இரானி அம்பலப்படுத்தியுள்ளார். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் அமெரிக்காவின் கப்பல்கள் அத்துமீறி நுழைவது வாடிக்கையான ஒன்றாகும். வர்த்தகக் கப்பல்கள் மட்டுமில்லாமல், போர்க்கப்பல்களையே அனுப்பி வைப்பார்கள். எந்த நாட்டின் எல்லைக்குள் நுழைகிறார்களோ, அந்த நாடு பற்றிய தவறான செய்திகளை பன்னாட்டு ஊடகங்களின் வழியாக பரப்பி விடுவார்கள். சீனா, ஈரான், சிரியா, கியூபா உள்ளிட்ட பல நாடுகள் பற்றித் தொடர்ந்து புரளிகளைக் கிளப்பி விட்டுக் கொண்டே இருப்பார்கள். தங்கள் நாட்டின் கடற்படை பற்றி செய்தியாளர்களிடம் பேசிய  ஷாஹ்ரம் இரானி, ‘‘சர்வதேசக் கடற்பகுதிகளில் ஈரானின் பலம் அதிகரித்துள்ளது.

வர்த்தகக் கப்பல்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தது தற்போது நின்றுவிட்டது.  எண்ணெய்ப் பீப்பாய்களை ஏற்றிக் கொண்டு செல்லும் சில கப்பல்களை 14 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரையில் ஈரான் கப்பற்படையின் ஒரு போர்க்கப்பல் பாதுகாப்பாக அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. மற்றொரு போர்க்கப்பல் 2 ஆயிரம் கிலோ மீட்டர் பயணத்தில் உள்ளது. ஈரான் நாட்டு நலனுக்கு சேதம் விளைவிக்க முயலும் பகைவர்களிடமிருந்து பாதுகாக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது’’ என்றார்.  மேலும் பேசிய அவர், “சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே ஈரானின் கடற்படை இயங்குகிறது. எந்தவிதக் காரணமுமில்லாமல் எதிரிகள் ராணுவக் கருவிகளை பயன்படுத்த முனைந்தால் தக்க பதிலடி தரப்படும்” என்று குறிப்பிட்டார். பிற நாடுகளின் வர்த்தகக் கப்பல்களைக் கைப்பற்றி வேறு ஏதாவது ஒரு நாட்டின் கொடியை ஏற்றிக் கொள்ளையடிப்பதை அமெரிக்கா வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. 2021 ஆம் ஆண்டில் ஈரானின் கப்பல் ஒன்றைக் கைப்பற்றி அதன் மீது வியட்நாமின் கொடியை ஏற்றிக் கொண்டு அமெரிக்க ராணுவம் செல்ல முயன்றது.

ஆனால், ஈரானின் ராணுவம் அக்கப்பலை சுற்றி வளைத்து மீண்டும் தங்கள் எல்லைக்குள் கொண்டு வந்தது. ஆகஸ்ட் மாத இறுதியில் அமெரிக்கக் கப்பல் ஒன்று செங்கடலில் அத்துமீறிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட ஈரானின் கடற்படை எச்சரிக்கை விடுத்தது. அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் பயணிக்க முயன்றதால் அக்கப்பலை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். முதலில் மிரட்டிய அமெரிக்க ராணுவம், ஈரானின் ராணுவத்திடம் இந்த மிரட்டல் எடுபடாது என்பதை உணர்ந்து, கெஞ்ச  ஆரம்பித்தது. இது குறித்துக் கருத்து தெரிவித்த ஷாஹ்ரம் இரானி, ‘‘தங்கள் கப்பலை விடுவிக்குமாறு அமெரிக்கர்கள் கெஞ்சினர். இந்தக் கப்பலை நாங்கள் கைப்பற்றி வைத்ததில் இருந்து ஈரானின் எல்லைக்குள் ஒருமுறை கூட அமெரிக்கா அத்துமீறி நுழையவில்லை’’ என்றார். ஆனால், ஆளில்லா விமானங்களை அனுப்பி நோட்டம் இட்டார்கள்.

அப்படி தங்கள் கடற்பகுதியில் உள்ளே நுழைந்த இரண்டு ஆளில்லா விமானங்களைக் கைப்பற்றி ஈரான் ராணுவம் திருப்பி அனுப்பியது. தகவல்களைச் சேகரிக்கத்தான் இந்த ஆளில்லா விமானங்களை அனுப்பினோம் என்று அமெரிக்க ராணுவம் கூறினாலும், அத்துமீறலை ஏற்காத ஈரான் தனது போர்க்கப்பலான ஜமரான் மூலம் அவற்றை எதிர்கொண்டது. திருப்பி அனுப்பப்பட்ட ஆளில்லா விமானங்கள் சர்வதேசக் கடற்பகுதியில் உலாவிக் கொண்டிருந்த அமெரிக்க கடற்படைப் பிரிவிடம் சென்றடைந்தன. உரிமை உண்டு சர்வதேசக் கடற்பகுதிகளில் ஈரானின் பலத்தை அதிகரித்துக் கொள்ள யாருடைய அனுமதியும் தேவையில்லை என்று கூறிய இரானி, ‘‘உலகின் பல பகுதிகளில் சர்வதேசக் கடற்பகுதிகளில் ஈரானின் பாதுகாப்புக் கப்பல்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. எங்களுக்கு எதிரான சதிகள், தடைகள் மற்றும் மிரட்டல்களை எதிர்கொள்ளும் சக்தி இருக்கிறது என்பதை அண்மைக்கால சம்பவங்கள் காட்டியுள்ளன’’ என்று குறிப்பிட்டுள்ளார்.