லண்டன், டிச.14- பேச்சுவார்த்தைகளுக்கு வர மறுப்பது மற்றும் பேச்சுவார்த்தைகளை இழுத்தடிப்பது ஆகிய உத்திகளை முதலாளிகள் கடைப்பிடிப்ப தால், கடைசி ஆயுதமாக தொழிலாளி வர்க்கம் நினைக்கும் வேலை நிறுத்தம் அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. பிரிட்டனின் தபால், ரயில்வே, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த ஊழி யர்கள் தற்போது போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். தபால் துறையில் முதன்முறை யாக வேலை நிறுத்தம் நடத்தியுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் வாக்கெடுப்பு நடத்திய பின்னர்தான் வேலை நிறுத்தங்கள் நடக்கின்றன. இதுவரையில் வேலை நிறுத்தம் என்றாலே, முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கூட, அதற்கு ஆதரவாக வாக்களித்து வருகின்றனர். பெரும் உற்சாகத் தோடு தங்கள் ஒற்றுமையைத் தொழிலாளர்கள் கொண்டாடி வருகிறார்கள். 2011ஆம் ஆண்டு முதல் அதிதீவிரமாக வலதுசாரிக் கொள்கைகள் பிரிட்டனில் மீண்டும் நடைமுறைக்கு வந்தன. அப்போது பெரும் அளவில் தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தினர். பல சலுகைகளைப் போராடிப் பெற்றதால், போராட்டங்கள் குறைந்தன. ஆனால் தற்போது எழுந்துள்ள நெருக்கடி, தொழிலாளர்களை முழுவீச்சுடன் போராட்டக் களத்திற்கு அழைத்து வந்துள்ளது. கிட்டத்தட்ட அனைத்துத் துறைத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
வேலை நிறுத்தத்தின் வீச்சு, புள்ளி விபரங்களில் தெரிகிறது. அக்டோபர் மாதத்தில் மட்டும் 4 லட்சத்து 17 ஆயிரம் வேலை நாட்கள் இழக்கப்பட்டுள்ளன. கடைசியாக, 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இத்தகைய வேலை நிறுத்தங்கள் நடந்தன. இந்தப் புள்ளிவிபரங்களை பிரிட்டனின் தேசிய புள்ளிவிபர அலுவலகம் வெளியிட்டுக் கொண்டிருந்தபோது, 48 மணி நேர வேலை நிறுத்தத்தை ரயில்வே துறை ஊழியர்கள் தொடங்கிக் கொண்டிருந்தனர். ஜூன் மாதத்தில் இருந்து ஏராளமான வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடந்துள்ளன. இவற்றால் 12 லட்சம் வேலை நாட்கள் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 32 ஆண்டுகளில் முதன்முறையாக ஐந்து மாத காலத்தில் இவ்வ ளவு இழப்புகள் இருந்துள்ளன என்று புள்ளி விபர அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிய வந்திருக்கிறது. பெரும்பாலான வேலை நிறுத்தங்கள், பல்வேறு வகையான போராட்ட வடிவங்களைத் தொழிற்சங்கங்கள் கடைப்பிடித்தபிறகு, வேறு வழியின்றிதான் நடந்துள்ளன.
முதலாளிகள் வெளிநடப்பு
பல்வேறு துறைகளில் நடந்த பேச்சுவார்த்தைகளில் முதலாளிகள் வெளி நடப்பு செய்து போராட்டங்களைத் தூண்டி விட்டுள்ளனர். அரசுத்தரப்பில் இருந்து போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகள் எதுவும் நடைபெறவில்லை. தொழிலாளர்களுக்கும், மக்களுக்கும் இடை யிலான பிரச்சனையாக மாற்றும் முயற்சிகளும் நடக்கின்றன. வேலை நிறுத்தத்தால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற செய்திகளை ஊடகங்கள் மூலமாக வெளியிட்டு எதிர்ப்பிரச் சாரம் செய்யப்படுகிறது. “மிகவும் மோசமான நாட்களை நாம் எதிர்கொள்ள இருக்கிறோம். நாட்கள் நகர, நகர நிலைமை மோசமாகிறது” என்று பேங்க் ஆப் இங்கிலாந்து எச்சரிக்கிறது. விலைவாசி உயர்வு மற்றும் எரிபொருள் விலைகளின் கடுமையான அதிகரிப்பு ஆகியவை உணவுக்கான உதவி யை எதிர்நோக்கும் பிரிட்டன் மக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. சிக்கன பட்ஜெட் என்ற பெயரில் புதிய பிரதமர் ரிஷி சுனாக்கின் நடவடிக்கைகளும் பெரும் பாலான மக்களின் துயரத்தை அதிகப்படுத்தவே செய்துள்ளது.