world

img

உறவுகளில் புதிய அத்தியாயம் - ஜி ஜின்பிங் கருத்து

பெய்ஜிங், மே 20- மத்திய ஆசிய நாடுகள் பங்கேற்ற இரண்டு நாள் உச்சி மாநாடு வெற்றி பெற்றதாகவும், அந்த மாநாடு சீனா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கிடையிலான உறவுகளில் புதிய அத்தியாயத்தைப் படைத்திருப்பதாகவும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கூறியுள்ளார். மே 18, 19 ஆகிய தேதிகளில் இந்த மாநாடு நடைபெற்றது. கஜகிஸ்தான் ஜனாதிபதி காசிம் ஜோமார்ட் டோகாயேவ், கிர்கிஸ்தான் ஜனாதிபதி சாடிர் ஜபாரோவ், தஜிகிஸ்தானின் ஜனாதிபதி இமோமாலி ரஹ்மோன், துர்க்மெனிஸ்தானின் ஜனாதிபதி செர்தார் பெர்டிமுகமெடோவ் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். 31 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்ட  இந்த உறவு மேலும் வலுப்பட்டுள்ளது என்று அனைத்துத் தலைவர்களும் தெரிவித்தனர். வரலாற்று ரீதியாக சீனாவையும், ஐரோப்பிய நாடுகளையும் மத்திய ஆசிய நாடுகள் வழியாக பட்டுச்சாலை இணைத்திருந்தது. பொ.ஆ.மு(கி.மு) இரண்டாம் நூற்றாண்டு முதல் பொ.ஆ(கி.பி) 15 ஆம் நூற்றாண்டு வரையில் இந்தப் பாதை வழியாக பெரிய அளவில் வர்த்தகம் நடைபெற்று வந்தது. சீனாவின் வட மேற்குப் பகுதியில் இருக்கும் சியன் நகரம் இந்த வர்த்தகத்தில் முக்கியமான பங்கை வகித்தது. முதல் நாளன்று அனைத்துத் தலைவர்களையும் வரவேற்றுப் பேசிய ஜி ஜின்பிங் “சீனா-மத்திய ஆசிய நாடுகளின் ஒத்துழைப்பால் ஒளிமயமான வருங்காலத்திற்கான கதவு திறந்துள்ளது. அந்த வருங்காலத்தை அடைவதில் நாம் இணைந்து செயல்படுவோம். மிக முக்கியமான இந்த உச்சி மாநாடு முழுமையான வெற்றியைப் பெறும்” என்று குறிப்பிட்டார். விரைவில் சீனாவுக்கும், இந்த ஐந்து மத்திய ஆசிய நாடுகளுக்கும் இடையில் பல்வேறு உடன்பாடுகள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.