ஆஸ்திரேலியாவில், 5 கொரியப் பெண்களுக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்த முன்னாள் பாஜக பிரமுகர் பாலேஷ் தன்கர், குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த பாலேஷ் தன்கர் (43), ஆஸ்திரேலியாவில் 'ஓவர்சீஸ் பிரண்ட்ஸ் ஆஃப் பி.ஜே.பி' எனும் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக செயல்பட்டவர். இவர் மீது 2018-ஆம் ஆண்டு பெண்களுக்குப் போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், பாலேஷ் தன்கர் கொரிய பெண்களை குறிவைத்து, அவர்களிடம் நெருக்கமாக பழகி விருந்துக்கு வரவழைத்து, குளிர் பானத்தில் போதைப் பொருளைக் கலந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்து அதனை ரகசிய கேமரா மூலம் படமெடுத்தது என பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
இந்த நிலையில், பாலேஷ் தன்கர் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தன்கர் மீது ஏற்கனவே 13 பாலியல் வழக்குகள் உட்பட 39 குற்ற வழக்குகள் ஆஸ்திரேலியா நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலேஷ் தன்கரை சிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்தித்தாள் "சிட்னியின் சமீபத்திய வரலாற்றில் மிகக் கொடூரமான பாலியல் குற்றவாளி" எனக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.