செனகல் நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான செனகல் நாட்டில் உள்ள பொது மருத்துவமனை ஒன்றில் பச்சிளம் குழந்தைகளுக்கான வார்டில் புதன்கிழமை நள்ளிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களிலேயே தீ மளமளவென அடுத்தடுத்த இடங்களில் பரவ தொடங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் மேக்கி சால் வெளியிட்டுள்ள பதிவில், குழந்தைகளின் தாய்மார்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வடக்கு நகரமான லிங்குவேரில் ஒரு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில், 4 குழந்தைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.