ஜிம்பாப்வேயில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரபல சியோன் கிறிஸ்டியன் தேவாலயத்தைச் சேர்ந்த பயணிகள், ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட நேற்று இரவு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது தென்கிழக்கு ஜிம்பாப்வேயின் சிமானிமானி கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது பேருந்து நெடுஞ்சாலையிலிருந்து விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 35 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 71 பேர் படுகாயமடைந்தனர். இந்த பேருந்தில் எண்ணிக்கை விதிமுறைகளுக்கு மேல் அதிக சுமை இருந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டனர். மேலும் படுகாயமடைந்த 71 பேரில் 13 பேர் இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.