இதுவரையில் கொரோனா பெருந் தொற்றுக்குப் பலியானவர்களின் எண் ணிக்கை 69 லட்சத்து 21 ஆயிரத்து 614 என்று உலக சுகாதாரக் கழகத்தின் அதி காரப்பூர்வப் புள்ளிவிபரம் தெரிவிக்கி றது. கடந்த மூன்று ஆண்டுகளில் 76 கோடியே 52 லட்சத்து 22 ஆயிரத்து 932 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள். தொற்றும், உயிரிழப்பும் தற்போது குறைந்துள் ளது என்பதையும் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. கடந்த நான்கு வாரங்க ளையும், அதற்கு முந்தைய நான்கு வாரங்களையும் ஒப்பிட்டு, ஒரு புள்ளி விபரத்தை உலக சுகாதாரக்கழகம் பகிர்ந்துள்ளது. அதன்படி, முந்தைய நான்கு வாரங்களை விட, கடந்த நான்கு வாரங்களில் உயிரிழப்பு 30 விழுக்காடு குறைந்திருக்கிறது.
ஜெனிவா, மே 6- கோவிட்-19 பெருந்தொற்றையொட்டி உலகம் முழுவதும் போடப்பட்டிருந்த சர்வதேச அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதாரக்கழகம் அறிவித்திருக்கிறது. “சர்வதேச அளவில் கவலையளிக்கும் பொது சுகாதார அவசர நிலை” கொண்டு வரப்படுவதாக 2020 ஆம் ஆண்டில் அறிவித்த உலக சுகாதாரக்கழகம், அதை தற்போது திரும்பப் பெற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளது. சர்வதேச அளவில் கவலையளிக்கக்கூடியதாக கொரோனா பெருந்தொற்று தற்போது இல்லை என்று தெரிவித்துள்ள அக்கழகத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசுஸ், “15வது முறையாக கோவிட்-19 அவசரநிலைக்குழு கூடியது. சர்வதேச அளவில் கவலையளிக்கக்கூடியதாக கொரோனா இருந்ததால் அறிவிக்கப்பட்ட அவசர நிலை முடிவுக்கு வந்ததாக நான் அறிவிக்க வேண்டும் என்று அக்குழு பரிந்துரைத்தது. அவர்களின் அறிவுரையை நான் ஏற்றுக் கொண்டேன்” என்று தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்று பற்றிய தனது உச்சபட்ச எச்சரிக்கையை ஜனவரி 30, 2020 அன்று உலக சுகாதாரக்கழகம் வெளியிட்டது. அப்போதிருந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடிய சர்வதேச மருத்துவ நிபுணர்கள் அதை நீட்டித்து வந்தனர். இது குறித்துப் பேசியுள்ள கெப்ரியேசுஸ், “கடந்த ஓராண்டாகவே கொரோனா பெருந்தொற்று குறைந்து வந்துள்ளது. தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் உடல் திறன் மக்களுக்குக் கூடியிருக்கிறது. மரணங்கள் குறைந்துவிட்டன. சுகாதார அமைப்புகள் மீதான அழுத்தமும் குறைந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.
அதே வேளையில், “கோவிட்-19 பெருந்தொற்றானது சர்வதேச அளவில் சுகாதாரத்திற்கான அச்சுறுத்தலாக இல்லை என்று பொருளில்லை. கடந்த வாரத்தில்கூட சராசரியாக மூன்று நிமிடங்களுக்கு ஒருவரை கொரோனாவால் நாம் இழந்துள்ளோம். இத்தனைக்கும் இந்த மரணங்கள் நமக்குத் தெரிந்த வரையிலான தகவல்களின் அடிப்படையிலானதாகும். தொடர்ந்து மக்களைக் கொன்று வருகிறது. தொடர்ந்து தன்னை மாற்றிக் கொண்டு விடுகிறது. புதிய வகை வைரஸ்கள் உருவாகும் ஆபத்து எப்போதும் இருந்து வருகிறது. மரணங்கள் எண்ணிக்கை உயர்வதில் இவை பங்கு வகிக்கக்கூடும்” என்று அவர் எச்சரிக்கிறார். இதுவரை சர்வதேச சமூகம் மேற்கொண்டுள்ள பயணத்தை, ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டு அதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளைத் தாண்டியிருக்கிறோம். நல்ல காலத்தை நோக்கி நாம் செல்லும் வகையில் இந்த அனுபவங்கள் நம்மை மாற்ற வேண்டும். 1948 ஆம் ஆண்டில் உலக சுகாதாரக் கழகம் அமைக்கப்பட்டபோது அதன் நோக்கம், “அனைத்து மக்களுக்கும், அதிகபட்ச தரமான சுகாதாரம்” என்பதாக இருந்தது. இதை அடைவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டால், இழப்புகளைக் குறைக்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். உலக சுகாதாரக் கழகத்தின் இந்த முடிவையொட்டி, தடுப்பூசி கட்டாயம் என்ற நிபந்தனையை நீக்கப் போவதாக பல்வேறு நாடுகள் அறிவித்திருக்கின்றன. பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் முழுமையாக நீங்கிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய நாடுகள், குறிப்பாக சுற்றுலாவை நம்பியிருக்கக்கூடிய நாடுகள் விரைவில் மீண்டெழ வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.