நியூயார்க், ஜூன் 20- ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை நடத்தும் முறையை பாலினத் தீண்டாமை என்று சொல்லலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சிறப்பு அலுவலர் ரிச்சர்டு பென்னெட் குற்றம் சாட்டியுள்ளார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டில் மீண்டும் ஆப்கானிஸ்தானில் அரசியல் அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். தலிபானின் பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டு அமெரிக்கப் படைகள் அந்நாட்டில் ஆக்கிரமிப்பு செய்திருந்தன. ஆப்கானிஸ்தானில் இருந்து அந்தப் படைகள் வெளியேறிக் கொண்டிருந்தபோதே, அதிகாரத்தை மீண்டும் தலிபான்கள் கைப்பற்றினார்கள். இது அமெரிக்காவின் தோல்வியைக் காட்டியது. ஆட்சிக்கு வந்த தலிபான்கள் மதத்தின் பெயரால் பெண்களுக்கு எதிரான செயல்பாடுகளை அதிகப்படுத்தினர். பெண்கள் படிக்க வேண்டியதில்லை என்ற அவர்களின் உத்தரவால் ஏராளமான பள்ளிகள் மூடப்பட்டன. அருகில் உள்ள நாடுகளின் எல்லைகளில் உள்ள பள்ளிக்கூடங்களில் மாணவிகள் பயிலத் தொடங்கியுள்ளார்கள். அந்த வாய்ப்பு கிடைக்காத லட்சக்கணக்கான மாணவிகளின் கல்வி நின்று போயுள்ளது. இத்தகைய நிலைமைகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐ.நா. சபையின் மனித உரிமைகள் சிறப்பு அலுவலர் ரிச்சர்டு பென்னெட், “இத்தகைய நிலையை பாலினத் தீண்டாமை என்று வர்ணிக்கலாம். இதுவரையில் இதைக் குற்றம் என்று சர்வதேச அளவில் பார்க்கவில்லை. ஆனால் விரைவில் அப்படிப் பார்க்கத் தொடங்குவார்கள் என்று நம்புகிறோம். இன ரீதியான என்ற வார்த்தையை பாலின ரீதியான என்று மாற்றிப் போட்டுப் பார்த்தால், அத்தனை வகையான தீண்டாமை வடிவங்களும் இதில் உள்ளன” என்றார்.