world

img

ஜோ பைடனுக்கு எதிராக சவூதி அரேபியா?

வாஷிங்டன், அக்.19- எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக் கொண்ட விவகாரத்தில், சவூதி அரேபியாவுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், குடியரசுக்கட்சியினருக்கு ஆதரவாக சவூதி அரேபியா வேலை செய்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர். சர்வதேசச் சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் சரிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு(ஓபெக்) உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்தது. இந்த அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில், பெரும் அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடான ரஷ்யாவும் பங்கேற்றது. ஒரு நாளைக்கு 20 லட்சம் பீப்பாய்கள் அளவுக்கு உற்பத்தியை நவம்பர் மாதத்தில் இருந்து குறைக்கப் போகிறார்கள். இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ரஷ்யாவுடன் இணைந்து இந்த முடிவை எடுத்ததற்கான விளைவை சவூதி அரேபியா எதிர்கொள்ள வேண்டும் என்று ஜோ பைடன் எச்சரித்தார். ஆனால், தங்கள் முடிவை மாற்ற முடியாது என்று சவூதி அரேபியா தெரிவித்து விட்டது.

ஓபெக் நாடுகளின் வசம் 40 விழுக்காடு சர்வதேச எண்ணெய் சந்தை உள்ளது. அதோடு, உலகம் முழுவதும் உள்ள எண்ணெய் வள இருப்பில் இந்த நாடுகளின் வசம்தான் 80 விழுக்காடு உள்ளது. ரஷ்யாவிடமிருந்து எரிவாயு கிடைக்காததால் ஐரோப்பிய நாடுகள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. தருவதாகச் சொன்ன அமெரிக்கா, விலையைக் கடுமையாக ஏற்றிவிட்டது.  சவூதி அரேபியாவுடனான உறவை மறு பரிசீலனை செய்யலாம் என்று ஜோ பைடன் ஆலோசனை செய்து கொண்டிருக்கையில், அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலில் சவூதி அரேபியா தலையிடுகிறது என்று அரசியல் நிபுணர்களில் ஒருவரான புருங்கிங்ஸ் மையத்தின் புரூஸ் ரீடெல் கூறியுள்ளார். இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த அவர், “மீண்டும் டொனால்டு டிரம்ப்பை ஜனாதிபதியாக ஆக்குவது என்ற இலக்கோடு சவூதி அரேபியா களம் இறங்கியுள்ளது. அதேவேளையில், வரும் நாடாளுமன்ற இடைத்தேர்தல்களிலும் குடியரசுக்கட்சியின் வெற்றிக்காகப் பாடுபடுகிறார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தேர்தல் நேரத்தில் விலையைக் குறைத்து நெருக்கடியைச் சமாளிக்கலாம் என்ற ஜோ பைடனின் உத்தி எடுபடவில்லை. மக்களைச் சந்திக்கப் போகும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் அதிருப்தி அலையில் அடித்துச் செல்லப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் உள்ளனர். ஜனநாயகக் கட்சியின் ரோ கண்ணா, “அமெரிக்கர்களைக் காயப்படுத்தவே சவூதி அரேபியா தலைமையிலான ஓபெக் அமைப்பு தனது எண்ணெய் உற்பத்தியைக் குறைத்திருக்கிறது. விலை உயர்வுக்கு எதிரான எங்கள் வேலையைக் குலைக்கிறார்கள்” என்று ஒருபடி மேலே போய் குற்றம் சாட்டுகிறார்.

அமெரிக்க விரோதம்

ஓபெக் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் கூட்டு முடிவு அமெரிக்க விரோதமானது என்று அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை அதிகாரிகள் விமர்சித்துள்ளார்கள். எண்ணெய் விலை உயர்வு மூலமாக சவூதி அரேபியாவின் அடுத்த ஆட்சியாளராகத் தன்னை முன்னிறுத்திக் கொண்டு தற்போதே அதிகாரங்களைக் கையில் எடுத்துக் கொண்டுள்ள பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், நேரடியாக அமெரிக்க அரசியலில் தலையிடுகிறார் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.  எப்போதாவது மனித உரிமைகள் பற்றிய குற்றச்சாட்டுகள் சவூதி அரேபியாவுக்கு எதிராக எழுகையில், ஆழ்ந்த கவலைகளைத் தெரிவிக்கிறோம் என்று மட்டும் சொல்லிவிட்டு அமெரிக்கா நகர்ந்துவிடும். ஆனால். இப்போது ஜனநாயகக் கட்சியின் தலைவர்களில் பலரும் ஆயுதங்களை விற்கக்கூடாது என்றும், சவூதி அரேபியாவிலும், ஐக்கிய அரபு அமீரகத்திலும் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரி வருகிறார்கள். நவம்பர் மாதத் தேர்தலில் தோற்கவிருக்கிறோம் என்ற எண்ணம்தான் இப்படியெல்லாம் பேச வைக்கிறது என்று புரூஸ் ரீடெல் உள்ளிட்ட நிபுணர்கள் விமர்சனம் வைக்கிறார்கள்.

பைடனின் தோல்வி

ஜனாதிபதித் தேர்தலின்போது சவூதி அரேபியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்காக அந்நாட்டைத் தனிமைப்படுத்துவேன் என்று ஜோ பைடன் பேசினார். ஆனால் வெற்றி பெற்ற பிறகு அவரால் அதைச் செய்ய முடியவில்லை. மேலும், டொனால்டு டிரம்ப்பின் மருமகனுக்கு பெரும் அளவில் முதலீடு செய்ய சவூதி அரேபியா வாய்ப்பளித்தது. டொனால்டு டிரம்ப் மற்றும் முகம்மது பில் சல்மான் ஆகிய இருவருக்கும் இடையிலான நெருக்கம் தொடர்கிறது.  பத்திரிகையாளர் கஷோகியின் கொலைக்கு சவூதி அரேபியாதான் காரணம் என்று தெரிய வந்தாலும், டொனால்டு டிரம்ப்பின் உதவியால் இந்தப் பிரச்சனையை மூடி மறைப்பதில் முகம்மது பில் சல்மான் வெற்றி பெற்றார். நான்தான் காப்பாற்றினேன் என்று வெளிப்படையாகவே டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். இப்போது அவருக்கு ஆதரவாக சவூதி அரேபிய அரசு செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு அதிகரித்துள்ளது.